ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 9, 2015

நன்றாக இருக்கும் பொழுதே குடும்பத்திலும் சரி... நண்பர்களுக்குள்ளும் சரி.. சண்டை எப்படி வருகிறது...? நிறுத்துவது எப்படி...?

நாம் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் ஒருவருக்கு உதவி செய்தாலும் கூட, ஒரு சமயம் நாம் தாழ்ந்து விட்டால் நாம் ஏற்கனவே உதவி செய்திருக்கின்றோம் என்று அங்கு உதவி செய்து கொடுத்த நண்பனிடம் நட்புடன் அவரிடம் செல்வோம்.

 நான் டவுன் (TOWN) வரைக்கும் செல்ல வேண்டியதுள்ளது. "நீங்கள் கொஞ்சம் கூட வருகின்றீர்களா?" என்போம்.

ஆனால், அதே சமயம் அவர் இதைக் காட்டிலும் ஒரு முக்கியமான நிலைகளில் இருப்பார். பொருளோ, பணமோ வரக்கூடிய நிலை இருக்கும்; அவர் ஒருவரிடம் சொல்லி இருப்பார். 

அதன் நிலைகளில் காக்கும் நிலையாக அவருக்காகக் காத்துக் கொண்டு இருப்பார்அதாவது அப்பொழுது பிரசவத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம்.

அந்த சமயத்தில் "டவுனுக்குப் போவதற்கு துணையாக இருந்தால் பரவாயில்லை" நண்பனைக் கூப்பிடுகிறோம். ஏனென்றால் அந்த சமயத்தில் அது முக்கியமாகின்றது.

இந்த முக்கியத்தில் நண்பர் எதைச் செய்வார்?

பிரசவத்திற்குக் கூப்பிட்டு அங்கு வரவில்லையென்றால், நம்முடன் வந்துவிட்டால், "இங்கே பாருங்கள், நல்ல நேரத்தில் வருகின்றேன் என்று சொன்னான் போய்விட்டான்.., பாவிப்பயல்..," அப்பொழுது அங்கே பகைமை உண்டாகின்றது.

ஆனால், அதே சமயத்தில் இங்கே கூப்பிட்டு "இவனுக்கு நாம் உதவி செய்தோம் வரவில்லையே" என்று எண்ணும் பொழுது அதே உணர்வுகள் (வராத உணர்வுகள்)
அவனுக்கு உதவி செய்தேன், நன்றி கெட்டவன்,
கூப்பிட்டால் வரமாட்டேன் என்கின்றான் என்ற இந்த உணர்வுகள்
இங்கு பகைமையாக வளர்ந்துவிடுகின்றது.

அங்கே வரவில்லையென்றால் அவர் நன்றி கெட்டவராக எண்ணுகின்றார். இங்கே வரவில்லையென்றால் இவர் நன்றி கெட்டவராக எண்ணுகின்றார்.

இவர்களை நம்பினால் எந்தக் காரியமும் சரியாக நடப்பதில்லை. நல்ல சமயத்தில் கழுத்தறுக்கின்றார்கள் என்பார் அவர்.

"பிரசவத்திற்காகப் போகின்றேன், நான் வரவில்லை" என்று சொன்னால், "சமயத்தில் கழுத்தறுக்கின்றான்" என்று இவர் சொல்வார்..

அப்பொழுது அந்த உணர்வை எடுத்து விட்டால் அதற்குப் பிறகு என்ன சொன்னாலும் கேட்க மாட்டார். எதிரியாகத்தான் பார்ப்பார்.

பார்க்கும் பொழுதெல்லாம் "நன்றி கெட்டவன்; நன்றி கெட்டவன்; நன்றி கெட்டவன்...,” அதே உணர்வுகள் கொண்டு வரப்படும் பொழுது பகைமை உணர்வுகள் வந்து கொண்டேயிருக்கும்.

இதை யார் நிறுத்துவது?

அவரைப் பார்த்தால் போதும், அவரைப் பற்றி யாராவது பேசினால் போதும் இந்த நிலையே தான் வரும். இதைப் போன்று நாம் எடுத்துக்கொண்ட நிலைகள் யாரும் தவறு செய்யவில்லை.

ஆனால், சந்தர்ப்பம் இந்த உணர்வுகளை இணைத்து பிரம்மமாக்கி
அது நமக்குள் எண்ணமாக மாறி,
அதே உணர்வின் தன்மையின் வித்து
நினைக்கும் பொழுதெல்லாம் அந்த அலைகளை
தனக்குள் வளர்த்துக் கொள்ள எண்ணுகின்றது.

இந்த உணர்வின் சத்து வித்தாக மாறும் பொழுது, அந்த வித்தின் சத்து தன் இனத்தைக் கவர்ந்து வளரத்தான் செய்யும்.

இன்று எப்படி பூமியில் தாவர இனங்கள் வளருகின்றதோ இதைப் போலத்தான் மனிதனுக்குள் மற்ற உணர்வின் எண்ணங்கள் கலந்து உயிருக்குள் அது பிரம்மமாகி, அந்த உணர்வின் சத்து வித்தாக வரப்படும் பொழுது வளரத் தொடங்குகிறது.

யாரைப் பற்றி எண்ணியதோ அந்த உணர்வின் தன்மை
இந்தக் கண் அந்த மனிதனைப் பார்த்தது;
அந்த மனிதனின் உடலிலிருந்த உணர்வைத் தான் கவர்ந்தது;
உணர்வின் தன்மை உயிருடன் இணைத்தது;
இணைந்த நிலைகள் உணர்வோடு கலந்தது;
கலந்த நிலைகள் எண்ணமானது;
அந்த வெறுப்பின் எண்ணமே ஊழ்வினையாகப் பதிவானது.
மீண்டும் அவர்களை எண்ணும் பொழுது இந்த நினைவின் அலைகளே இயக்கும்.

இப்பொழுது சொல்வது அர்த்தமாகின்றதா?

தப்பு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பம் அந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மமாகி நண்பருக்குள் பகைமையை உண்டாக்குகின்றது.

ஆனால் இதே உணர்வின் வித்து வரப்படும் பொழுது என்ன ஆகும்? இந்தப் பகைமை உணர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகும்.

ஒவ்வொரு மனிதரும் நட்பாகி நண்பர்களாக இருப்பார்கள்; அதே சமயத்தில் இந்தச் சந்தர்ப்பம் நண்பனைப் பகைவனாக்கி விடும். இப்படிப் பல நண்பர்கள் பகைமையாகப்படும் பொழுது பகைமையான உணர்வுகள் நமக்குள் சேர்ந்து நல்ல உணர்வுகளில் கலந்துவிடும்.

இப்படி ஆகிவிட்டால் ஒவ்வொரு நாளும் கவலையும், சஞ்சலமும், சோர்வும், வெறுப்பும், வேதனையும் நமக்குள் கலந்து வந்து கொண்டிருக்கும். ஆனால், யாரும் தவறு செய்யவில்லை.

இதனைத் தடுப்பதற்காக ஆறாவது அறிவு கொண்டு பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். 

இத்தகைய பகைமை உணர்வுகளிலிருந்து மீண்டு, விண்ணுலகம் சென்ற அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மையைப் பருகுவதற்குண்டான மார்க்கத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.