ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 25, 2023

நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல...!

இன்று நாம் இருக்கக்கூடிய இந்தச் சூரிய குடும்பம் எப்பொழுது செயல் இழக்கும்…! என்று சொல்ல முடியாது.
1.மனிதர்கள் வயதாகி உடலை விட்டுப் பிரிவது போன்றுதான்
2.இந்தச் சூரிய குடும்பமும் முதுமை அடையக் கூடிய காலம் வந்து விட்டது… அதனுடைய சத்து எல்லாம் போகிறது.

பிரபஞ்சம் செயல் இழந்தால் இந்தப் பூமியும் அனாதையாகத் தான் செல்லும். ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன் பிற சூரியக் குடும்பத்தில் இருந்து செயல் இழந்த பூமி… அது எப்படி நம் வியாழன் கோளிலே விழுந்து பஸ்பமாகியதோ அதே போன்று இந்தப் பூமியையும் திக்கெட்டுச் செல்லும்.

அது போகும் வேகத்தில் மற்றதுடன் உராய்ந்து கரைந்துவிடும்… அமிலமாக மாறும். எதிலேயாவது போய் விழுந்து மடிந்துவிடும்.

ஆனால் இதிலே இருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் மீண்டும் பரவும்.
1.உயிரினங்கள் வாழக்கூடிய கோளுக்குள் நாம் வந்தால் மனிதனாகப் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது
2.ஆனால் பூமியே கெட்டுப் போனது என்கிற பொழுது என்ன செய்ய முடியும்…?

மற்ற சூரியக் குடும்பத்திலே ஏதாவது பூமி உருவானால் அங்கே போய்ச் சேரும். அங்கே போய் மனித உடல் பெறும் வரை இந்த உயிரிலே நரக வேதனைப் பட வேண்டியது தான்.

இதை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்றது…!

ஒரு உயிரணுவின் தன்மை அடைந்தால் அந்த அணுவிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறையான துடிப்பினால் அது எவ்வளவு வேதனைப்படுகிறது…? என்று அதற்கென்று சாதனங்களை வைத்துக் கம்ப்யூட்டர் மூலமாக உணர்வின் இயக்கங்களை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் அன்று மெய் ஞானிகள் சொன்னது… (இறந்த பிற்பாடு) உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் “அதனுடைய கடைசி நேரம்…” எந்த வேதனைப்பட்டதோ அதே நிலைகள் கொண்டு அது நரக வேதனைப்படுகிறது. “சாகாக்கலை…” என்று அதைத் தெளிவாகக் காட்டினார்கள்.

இப்போது மனித உடலுடன் இருக்கும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.
1.ஆனால் உடலை விட்டுச் சென்றால் உயிரோடு ஒன்றி இருக்கும் போது
2.அந்த வேதனைகள் அனுபவிப்பதை இவ்வளவுதான்…! என்று சொல்ல முடியாது.

செத்துப் போனால் என்ன தெரியப் போகிறது…? செத்த பிற்பாடு ஒன்றும் தெரியாது…! என்று நினைப்போம். ஆனால் அந்த ஆன்மா மனித உடலுக்குள் சென்றால் எத்தனை வேதனைகள் படுகிறது,,,? எத்தனை வேதனைகள் கொடுக்கிறது…! என்று பார்க்கலாம்…!

பேய் பிடித்து விட்டது என்று சொல்கின்றோம். மருந்து குடித்துச் செத்தது என்றால் அந்த ஆன்மா அடுத்த உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் பொழுது கோயம்புத்தூரில் பீளமேடு என்ற இடத்தில் இருந்தேன். ஆவிகள் என்ன செய்கிறது…? நோய்கள் எப்படி வருகிறது…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வதற்காக ஆரம்பத்திலே சுற்றி வந்ததுதான்.

அப்பொழுது அங்கே ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். குடம் குடமாக அவர் வாயிலிருந்து தண்ணீர் வருகின்றது. குருநாதரை நினைத்து இது எப்படி..? என்கிற வகையில் தியானித்தேன்.

வந்த ஆளோ ஊமை பேசுவது போன்று தான் பேசுகின்றார். ஆனால் அவர் நன்றாகப் பேசக் கூடியவர் தான். இதைச் சரி செய்வதற்குப் பல இடங்களுக்குச் சென்று ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுதுதான் இங்கே வருகின்றார்கள்.

அவர்களிடம் நான் விசாரித்தேன். அவர் வசிக்கக்கூடிய இடத்திலே ஒரு ஊமைப் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வீட்டில் ஏதோ திட்டி விட்டார்கள் என்று ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றது.

கிணற்றில் விழுவதை இவர் பார்த்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பெண்ணைக் கிணற்றிலிருந்து தூக்கியிருக்கிறார். வண்டிச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி அது குடித்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றுகின்றார்.

இருந்தாலும் அந்தப் பெண் இறந்து விட்டது...!

இவர் எந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சித்தாரோ இவர் உடலுக்குள்ளேயே அந்த ஆன்மா வந்து விட்டது.

உடலுக்குள் ஆவி வந்த பின்…
1.அது தன் உடலுடன் இருக்கப்படும் பொழுது கடைசி நேரத்திலே எவ்வளவு நீரைக் குடித்ததோ
2.இந்த உடலுக்குள் வந்த பின் அந்த அணுக்கள் காற்றிலிருந்து அந்த நீர் சக்தியை இழுத்து
3.அதே உணர்ச்சியை ஊட்டித் தண்ணீராக வருகிறது.

ஒரு குடம் நீர் வருகின்றது. அடுத்து நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு குடம் தண்ணீர் வருகிறது. இப்படிக் குடம் குடமாக வந்து கொண்டே இருக்கிறது.

இது நடந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? இறந்தபின் ஆவி அடுத்த உடலுக்குள் சென்றால் என்னென்ன எல்லாம் செய்யும்…? என்று பார்ப்பதற்குத் தான் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யச் சொன்னார் குருநாதர்.