ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 20, 2023

ஞானிகள் வைத்த காரணப் பெயர்கள் - கடவுள் தெய்வம் ஆண்டவன் இறைவன்

புருவ மத்தியில் இருக்கும் உயிர் நமக்குள் நின்று ஓ..ம். என்று இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த இயக்கத்திற்குப் பெயர் தான் ஓம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதையும் ஓ என்று ஜீவணுக்களாக மாற்றி நம் உடலாக... நமதாக... சிவமாக... இணைத்து விடுகின்றது. அதனால் தான் ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

நமது உயிர் ஓ...ம் என்று இயங்கிக் கொண்டிருப்பினும்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் ஓம் என்று அதுவும் இயங்கத் தொடங்குகிறது
2.நம் உடலுக்குள் ஓ...ம் ஓ...ம் ஓ...ம் என்று எண்ணிலடங்காத ஜீவணுக்கள் இயங்கிக் கொண்டே உள்ளது
3.ஜீவான்மாக்களும் இயங்கிக் கொண்டே உள்ளது என்று மெய் ஞானிகள் தெளிவாகக் காட்டினார்கள்.

ஆகவே கடவுள் என்பதையும் தெய்வம் என்பதையும் குரு என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே நலம்.

நமது உயிர் நமது உடலுக்குள் நின்று ஓ...ம் என்று இயங்கி நாம் எண்ணியது அனைத்தும்
1.“உள் நின்று” (கட+வுள்) ஒவ்வொன்றையும் உருவாக்கிக் கொண்டே உள்ளது.
2.ஆகவே நமக்குள் “கடவுளாக...” இயங்குகின்றது என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

அதே சமயம் நாம் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ அந்தக் குணத்தின் தன்மை நமக்குள் இயங்கத் தொடங்கும் பொழுது அந்தக் குணத்திற்குப் பெயர் “தெய்வம்...” என்றும்
1.அந்தத் தெய்வ சக்தியாக நமக்குள் இயக்குகிறது என்றும்
2.நம்முள் நின்று அக்குணத்தின் தன்மையாக இயங்குவதை கடவுள் என்றும் காரணப் பெயரைச் சூட்டி உள்ளார்கள் ஞானிகள்.

நமது உயிர் ஓ...ம் என்று இயங்கி நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தையும் நம் உடலாக ஆக்கினாலும் எத்தனையோ வகையான குணங்கள் நமக்குள் பதிவு உண்டு

அந்தக் குணங்கள் அனைத்திற்கும் உயிரே “குருவாக...” நின்று இயக்கிக் கொண்டுள்ளது..
1.இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் இயக்கிக் கொண்டிருப்பதும்
2.அதை ஆண்டு கொண்டிருப்பதும் நமது உயிர்... “ஆண்டவா...!”

ஆக நம்மை ஆள்வது யார்...? நமது உயிர்...! ஆண்டவா என்று அந்தந்தஸ் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப நமது ஞானிகள் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள் நாம் அறிந்து கொள்வதற்கு...!

நாம் எண்ணும் எண்ணங்கள் நம் உயிருக்குள் அது இயக்கப்பட்டு ம்... என்று உடலாக அமையப்படும் பொழுது “இறைவா...!”

நாம் எண்ணியது அனைத்தும் இறை(ரை)யாகி அந்த உணர்வின் செயலாகத் தெய்வமாக நமக்குள் இயங்குகின்றது என்பதை உணர்த்துவதற்கு இறைவா...! என்றும் அதனின் செயலாக்கங்கள் எதை இறையாக்குகின்றதோ அந்தக் குணத்தின் செயலாக்கத்தைத்தான் தெய்வம்...! என்றும் தெளிவாகக் கூறியுள்ளார்கள் மெய் ஞானிகள்.