ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 10, 2023

நாம் எதுவும் செய்ய முடியாது… “அந்த ஆண்டவனால் மட்டுமே முடியும்…!” என்ற வித்தை ஊன்றியவர்களே அன்றைய அரசர்கள் தான்

“ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் தீமைகள் அகலும்…” என்ற உணர்வுடன் தான் செல்கிறோம். யாகங்கள் வேள்விகள் நடத்தும் பொழுது அதற்கு முன் அமர்கின்றோம்… உற்றுப் பார்க்கின்றோம்… நமக்குள் பதிவாகிறது.

ஆனால் இதற்குப் பெயர் “வசியம்…”

ஏனென்றால் நாம் ஏக்க உணர்வுடன் ஆலயத்திற்கு வரப்படும் பொழுது
1.அங்கே ஓதப்படும் மந்திரங்கள் நம் செவிகளில் ஈர்க்கப்பட்ட பின்
2.உயிருக்குள் மோதும் போது “ஓ…” ஓ…ம் நமச்சிவாய…! என்று அந்த உணர்வுகளை “உயிர்” நமதாக அமைத்து விடும்
3.அங்கே வாசிக்கப்படும் இசைகளை… அந்த ஒலி அலைகளை ஓ…ம் நமச்சிவாய…! என்று நம் உடலுக்குள் பாய்ச்சி விடுகிறது.
4.யாகத் தீயில் போடப்படும் பொருள்களின் வாசனைகளையும் நாம் நுகர நேர்கின்றது
5.இந்த உணர்வுகளும் ஓ…ம் நமச்சிவாய என்று பதிவாகி விடுகின்றது.

இப்படிப் பதிவாகக் காரணம் என்ன...?

இந்தத் தெய்வம் உனக்கு எல்லாவற்றையும் செய்து கொடுக்கும்...! என்று முதலிலே காவியங்களாகத் தீட்டி வைத்து விடுவார்கள் அந்தக் காவியத்தின்படி நமக்குள் ஆசைகள் உருவாகிறது. அதன்படியே அங்கே சொல்லும் மந்திரங்களை நமக்குள் பதிவாக்கி விடுகின்றோம்.

இப்படிப் பதிவாகிய பின்
1.ஆலயங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த மந்திர ஒலிகளைச் சேர்த்துக் கொண்டே இருப்போம்.
2.(பெரும் பகுதியானோர் மந்திரம் சொல்பவர்களாகத் தான் இருப்பார்கள்).

ஆலயங்களுக்குச் சென்று சாங்கியங்கள் செய்து இன்னென்ன அர்ச்சனை செய்தால் அந்தத் தெய்வம் உன்னைக் காக்கும்.
1.நீ செய்யும் அர்ச்சனை நேராக ஆண்டவனுக்குச் சென்று
2.அவன் மெச்சி உனக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வான் என்ற உணர்வுகளைத் தான் ஆலயத்தில் தோற்றுவிக்கின்றார்கள்.
3.ஆசைகளை ஊட்டும் ஆலயமாகத் தான் மாற்றி வைத்து விட்டார்கள்.

நேற்று வரையிலும் அந்த ஆலயத்தில் கூட்டம் இல்லை. ஆனால் யாகங்களையும் வேள்விகளையும் அங்கே செயல்படுத்திய பின் “வசியப்படுத்தப்பட்டு…” அந்த ஆலயங்களுக்கு நாம் அதிகமாகச் செல்கின்றோம்.

கடைசியில் “சரணாகதி தத்துவம்” என்று காட்டியிருப்பார்கள்.
1.ஆண்டவனிடத்தில் உன்னுடைய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிவிடு.
2.சொல்லி விட்டால்… அபிஷேகம் செய்யும் உயர்ந்த பதார்த்தங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு
3.உனக்கு வேண்டியதை அவன் செய்வான்…! என்று இப்படித்தான் அரசர்கள் வழியில் நாம் வணங்கிக் கொண்டுள்ளோம்.

வேதங்கள் கூறியவற்றில் அதர்வண வேதம் என்று மனிதனுடைய நிலைகளை அரசர்கள் மாற்றி… மதம் என்ற நிலைகள் உருவாக்கப்பட்டு அதனின் மறைவிலே தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேதத்தின் தத்துவங்களை குலதெய்வம் என்ற நிலையை அன்றைய அரசர்கள் தன் மக்களுக்குள் பாய்ச்சி… அடிமைகளாக ஆக்கி விடுகின்றார்கள்.

அன்றைய அரச காலங்களின் வழி வழி தான் இன்றும் நாம் வேதங்களைச் சொல்வதும்… அதர்வண வேதங்களைக் கையாள்வதும் அபிஷேகங்களைச் செய்வதும்…
1.ஆண்டவனிடத்தில் வரம் வாங்குவது என்ற நிலைகளில்
2.இன்றும் நாம் வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றோம்.