ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2023

சிரசில் இருக்கும் உயிருக்குக் “கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்…”

கலசம் என்பது யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வுகள் உயிரான உணர்வுகளில் படப்பட்டு உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் பரப்பும் நிலை தான்.

“கலச நீர்…” என்பது…
1.அருள் ஞானிகளின் அருள் சக்தியை உங்கள் உயிருக்குள் ஊட்ட(ற்ற)ப்பட்டு
2.அதன் வழி உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் நிலைகள் தான்.

ஆகவே… யாம் கொடுக்கும் உபதேசத்தை எந்த அளவிற்குக் கேட்டு உணர்ந்தீர்களோ உங்களுக்குள் இது அரும் பெரும் சக்தியாக வளர்கின்றது… தீமைகளை அகற்றிடும் சக்தியாகப் பரவுகின்றது.

அதற்குத் தான் இந்த துருவ தியான நேரத்தில் இது உபதேசித்தது. அதன் மூலம் இங்கே வைக்கப்பட்டுள்ள கலசத்திற்குள்ளும் நாம் தியானிக்கும் உணர்வின் எண்ணங்கள் பரவுகின்றது.

மனித உடலுக்குள் இந்த சிரசு (தலை) கோபுரமாக இருக்கின்றது கோபுரத்திற்குள் வீற்றிருக்கும் இந்த உயிரிலே அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் நீராட்டுவது போன்று…
1.நாம் தியானித்த ஞானிகளின் உணர்வின் சக்தியைக் கலச நீருக்குள் ஊட்டி
2.ஆலயத்தின் கோபுரத்தில் இதை ஊற்றப்படும் பொழுது (கும்பாபிஷேகம்)
3.அதில் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு நாம் பாய்ச்சும் அருள் ஞான உணர்வுகளைக் கவருகின்றது.

இன்று எப்படி ரேடியோ டிவிக்களில் ஏரியல் ஆண்டனாக்களை வைத்து காற்றில் பரவி வருவதை அது இழுத்து நமக்கும் ஒலி ஒளியாகக் கொடுக்கின்றதோ அது போன்று ஞானிகளின் உணர்வை அது நமக்கு இழுத்துக் கொடுக்கும்.

ஏனென்றால்
1.அங்கே வைக்கப்படுள்ள கலசம் அது செம்பு…. அதற்குள் காந்தப் புலன் உண்டு
2.அதே சமயத்தில் ஜீவ அணுக்களாக என்றும் வற்றாத “வரகு…” அதற்குள் போடப்பட்டுள்ளது.
3.உபதேச வாயிலாகக் கொடுக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மையை எல்லோரும் ஏகோபித்து அங்கே பதியச் செய்யப்படும் போது
4.ஞானிகளின் உணர்வலைகளைக் கவர்ந்து அதன் கீழ் இருக்கும் சிலைகளுக்கு அது கிடைக்கச் செய்யும்
5.சிலையை உற்றுப் பார்ப்போர் அனைவரும் அந்த அருள் ஞான சக்திகளைப் பெறுவார்கள்
6.இத்தகைய நெறிகளைத் தான் அன்று தத்துவ ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டினார்கள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் செய்திருப்போம் என்றால் இன்று உலகில் வரும் தீங்குகளை அடக்கி இருக்கலாம்… அதிக அளவுக்கு விஷத் தன்மை பரவாது நாம் தடுத்தும் இருக்கலாம்.

மாறாக… அன்று ஆண்ட அரசர்கள் ஆலயங்களைக் கைப்பற்றி அவர்களுடைய ஆசைகளை இதற்குள் ஊட்டி… அவர்கள் ஆசையின் உணர்வைத் தான் கலச நீராக மாற்றினார்கள்.

அதே தீமையின் உணர்வுகளை அங்கே பதியச் செய்யப்படும் பொழுது ஆலயத்திற்கு வருவோர் எண்ணங்களிலும் இதே ஆசைகள் தான் தூண்டப்படுகிறது. ஞானிகள் காட்டியது நமக்குக் கிடைக்காது செய்துவிட்டனர்.

ஆக…
1.மனிதர்கள்… தம் ஆசையினால் வரும் விளைவுகளில் இருந்து மீண்டிட வேண்டும்
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
4.ஆறாவது அறிவால் தனக்குள் உருவாக்கும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மை
5.ஞானிகளால் உணர்த்தப்பட்டது காலத்தால் மறைந்து விட்டது.

இனியாவது… இந்த விஞ்ஞான உலகில் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.கலச நீராட்டும் உணர்வின் ஆற்றல் ஆலயத்தில் பெருகி
2.ஆலயம் வருவோர் அனைவரும் இதை நுகர்ந்து… அவருக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் அகன்று
3.மெய் ஞானிகளின் அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் ஒளிகளை நாம் அனைவரும் பரப்புவோம்

ஆலயம் வருபவர் இருள்கள் நீங்கட்டும்…! அருள் ஞானிகள் உணர்வு ஆலயங்கள் முழுவதும் பரவி… வருவோர் அனைவரது குடும்பங்களும் தெளிந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து… எல்லோரும் நலமாக இருக்க நாம் பிரார்த்திப்போம்… தியானிப்போம்.