ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2021

தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காதபடி அதை வகுந்திட வேண்டும்

 

நரசிம்ம அவதாரம் என்றால்... ஒருவர் ஏசினாலோ பேசினாலோ அந்த உணர்வை நான் நுகரக்கூடாது. ஆனால் எதிரில் வரும் நிலைகளை நுகராமல் இருக்கவும் நம்மால் முடியாது.

உதாரணமாக நான் ரோட்டில் செல்லும் போது எங்கே போகின்றீர்கள்...? என்று கேட்கின்றார்கள்.
1.இந்தப் பாதையில் தானே செல்வார். வசதியான இடமாக இருக்கின்றது.
2.தட்டி எறிந்துவிட்டு என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிச் செல்லலாம் என்று வருகின்றார்கள்.

ஆகவே இதை நான் கூர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.

ஆனாலும் திருடும் எண்ணம் கொண்டு தான் கேட்கின்றார்கள். அவர்கள் பேசிக் கொண்டு போகட்டும். நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்...? என்று இருக்க முடியுமா...!

1.அவர்கள் பேசிய உணர்வின் தன்மை எனக்குள் வரும் பொழுது அதைக் கேட்டு நுகர்கின்றேன்... அறிந்து கொள்கிறேன்...!
2.அது என்னைக் காத்துக் கொள்ள உதவுகின்றது.

இருந்தாலும் என்னைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் எண்ணும் பொழுது அதைப் பார்த்தவுடனே எனக்கு பயமாகின்றது.

கொன்று விடுவேன் என்று சொன்னாலும்... சும்மா போகலாம்... சாமி சொன்னார் எனக்கு ஒன்றும் வராது...! என்று அப்படியே இருக்க முடியுமா...!

“என் காரியம்” என்று வரும் போது இந்தப் பாதையில் போகாமல் இருக்க முடியாது. அந்தப் பாதை வழியாகத்தான் நான் செல்ல முடியும்.

அவன் சொல்கிறான் நாம் பாட்டுக்குப் போகலாமே என்றால் அது அசட்டுத் தைரியம் தான்.

நாம் தர்மம் செய்பவர்கள்... எல்லோருக்கும் நன்மை செய்பவர்கள் தான்...! இப்போது ஒரு புலி இங்கே வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். புலி அதனுடைய பசியைப் போக்க நம்மைச் சும்மா விடுமா...? அது நம்மை அடித்துக் கொள்ளத்தான் எண்ணும்.

அது போல் அசுர குணம் கொண்டவர்கள் அந்தத் தவறைத் தான் செய்வார்கள். என்னை அடித்து விட வேண்டும் என்று பயத்தை ஊட்டுகிறார்கள். காதிலே கேட்டவுடன் உடல் நடுக்கம் ஆகின்றது

நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும் கூட அசுர உணர்வு கொண்டு பிறர் எண்ணிய உணர்வுகள் இங்கே உடலை இயக்குகிறது. பிறரின் நிலைகளை அறிந்து கொள்ள இது உதவுகின்றது

அறிந்த பின் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா...! என்று உயிரை புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று வலு சேர்த்துக் கொண்டு நாம் செல்ல வேண்டும்.

குழம்பு வைக்கும்போது சுவை கெட்டு விட்டால் அதை மாற்றுவதற்கு மீண்டும் எத்தனையோ செய்கிறோம்.

கருணைக் கிழங்கு விஷம் என்று தெரிகிறது. அதனுடைய நமநமப்பைக் குறைப்பதற்குப் புளியைக் கரைத்து அதனுடன் சேர்க்கின்றோம். பின் வேக வைக்கின்றோம். அதை அடக்கி விடுகின்றோம். அப்பொழுது அது சுவைமிக்கதாக மாறுகின்றது.

இது போல்...
1.வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிலையிலிருந்தும் நம்மை நாம் மீட்டுக் கொள்ள
2.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கிக் கொண்டே வர வேண்டும்
3.தீமைகளைப் பிளந்து கொண்டே வர வேண்டும்.

அது தான் நரசிம்மா…!