ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 7, 2021

உயர்ந்த சக்தி பெற நமக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பவர்கள் யார்...?

 

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! என்ற எண்ணத்துடன் தான் நாம் தியானம் செய்கின்றோம்.

அம்மா அப்பா அருளால் என்கிற பொழுது தாய் தந்தையரைப் பரிபூரணமாக எண்ண வேண்டும்.

ஏனென்றால் தாய் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையையே எண்ணி நம்மை வளர்த்தது. குழந்தையாகப் பிறந்த பின் அந்த அறியாப் பருவத்தில்
1.தெரியாமல் அசிங்கமான பொருளை தொடச் சென்றாலோ
2.நெருப்பு என்று அறியாமல் தொடச் சென்றாலோ
3.அதிலிருந்து காப்பாற்றக்கூடிய எண்ணமாக அவர்கள் உணர்வுகளைப் பதிவு செய்து நம்மைக் காக்கின்றார்கள்.

அதே போன்று கல்வியில் நாம் சிறந்து இருக்க வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தையும் நமக்குள் பதிவு செய்கின்றார்கள்.

அவர்கள் பேசிய பேச்சுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் அலைகளாகப் பரவி வைத்துள்ளது. அதே சமயத்தில் அவர்கள் எண்ணிய எண்ணம் நமக்குள் பதிவாகி ஊழ் வினையாகவும் இருக்கின்றது.

நாம் என்ன குறும்புத்தனம் செய்திருந்தாலும் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு
1.என் குழந்தை நன்றாக இருக்கவேண்டும்
2.அவன் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணிய
3.இந்த உணர்வுகள் அவர்கள் உடலிலும் ஆழமாகப் பதிந்து இருக்கின்றது.
4.அந்த உணர்வலைகள் பூமியிலும் படர்ந்து கொண்டிருக்கின்றது
5.அதே சமயத்தில் நமக்குள்ளும் அது பதிந்து இருக்கின்றது

இப்படிப் பதிந்துள்ளதைத் தான் நாம் அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம். இப்படி எண்ணினால் உடனே அந்தச் சக்திகளை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.

எப்படி...?

1.நம் உடலில் இருக்கக்கூடிய விலா எலும்பு பக்கம் இருக்கக்கூடிய காந்த சக்தி (மேக்னட்) அந்த அலைகளைக் குவித்துக் கொடுக்கின்றது.
2.அதைக் குவித்தவுடன் நமது உயிரான மேக்னட் இழுக்கின்றது.

உயிருக்குள் பட்ட உடனே நாம் எதை எண்ணினமோ அந்த உணர்வு ஓ...ம் பிரணவம் ஜீவன் உண்டாகின்றது. அது தான் ஓ... என்பது. அந்த உணர்வின் சத்து நம் உடலாக இணைந்து விடுகின்றது... ஓம் நமச்சிவாய.

நாம் எண்ணக்கூடியது அனைத்தும் நமக்குள் ஜீவனாகி அந்த சக்தி நம் உடலாகின்றது. ஏற்கனவே அம்மா அப்பா பதிவு செய்த இந்த உணர்வுகள் உடலில் இருப்பதால் அது உடலுடன் ஐக்கியமாகச் செய்கிறது.

நலம் பெற வேண்டும் என்று சொன்ன அவர்களின் உணர்வின் சக்தி நமக்குள் வலு கூடுகின்றது. அம்மா அப்பா அருளால் என்று எண்ணி அதைச் சொல்லும் பொழுது அந்தத் தகுதி நமக்குக் கிடைக்கின்றது.

அதே போன்று ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...! என்கிற போது வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ... என்று பிரணவமாகி ம்... என்று உடலாக மாறுகிறது. நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து எண்ணங்களுக்கும் நம் உயிரே குருவாக இருக்கின்றது.

1.நம் தாய் தந்தையர் நாம் நலம் பெறுவதற்காக எத்தனை உணர்வுகளை எடுத்தார்களோ
2.ஊழ் வினையாக நமக்குள் பதிவு செய்த அந்த உணர்வுகளை மீண்டும் நாம் எண்ணும் பொழுது
3.அந்த வலுவான சக்தியை நாம் பெறுகின்றோம்.

அதே போன்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நோக்கத்தில்தான் நான் (ஞானகுரு) இப்பொழுது பேசுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணி குரு வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்று நான் முதலில் எண்ணுகின்றேன். அது உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த நினைவுடனே பேசுகின்றேன்.

ஓ...ம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி... அம்மா அப்பாவை எண்ணி... அவர்கள் நாம் நலம் பெற வேண்டும் என்று சொன்ன அந்த உணர்வின் தன்மையை முன்னணியில் கொண்டு வந்து அவர்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.நாம் நன்மை பெற வேண்டும் என்று உளளப்பூர்வமாக அவர்களுக்குள்
2.இந்த உயர்ந்த எண்ணங்கள் கொண்டு வந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து ஜீவனூட்டி
3.அவர்கள் பெற்ற அருள் ஞான நிலை பெற வேண்டும் என்று எண்ணும்போது
4.நம் ஆன்மாவை அது வலுக் கொண்டதாக மாற்றுகின்றது

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ண உணர்வைக் கூட்டும்போதெல்லாம் அதை நாம் பருகுவதற்கு நம் அன்னை தந்தையின் அருள் உறுதுணையாக இருக்கும்.

அதற்கு தான் இதைச் சொல்லிக் கொடுப்பது.