ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2021

நாம் அனைவரும் சகோதரர்களே…!

 

அரசியல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செல்வோர்கள் பகைமை உணர்வை வளர்த்துக் கொண்டால் அதே பகை உணர்வு மக்கள் மத்தியிலும் வளரும்.

ஆனால் பகைமையற்ற உணர்வுகளைத் தான் வளர்க்க வேண்டும்.

அன்றும் சோஷலிசம் கம்யூனிசம் என்று எத்தனையோ விதமான கட்சிகள் இருந்தது. எத்தனையோ மதங்களும் இனங்களும் இருந்தது.

1.மதம் என்ற நிலைகளைத் தூக்கி எறிந்துவிட்டு
2.கட்சி அடிப்படையில் ஒவ்வொருவருடைய கோட்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு
3.எப்படி வாழ வேண்டும் என்று காந்திஜி சாந்த உணர்வு கொண்டு தனக்குள் செயல்படுத்திக் காட்டினார்.

தாழ்த்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் சென்று அவர்களைப் பார்த்து
1.தாழ்த்தப்பட்டவன் அல்ல…
2.நீ உயர்த்தப்பட்டவன்…! என்று சொன்னார்.
3.நோயாளியைப் பார்த்து… நீ நோயாளி அல்ல… நீ என்றுமே உயர்ந்த குணங்களை பெற்று உயர்ந்த நிலைகள் பெற்று…
4.நோயற்ற வாழ்வாக வாழ்வாய்…! என்று என்று உபதேசித்தார்.

எதிரி என்று மற்றவர்கள் சொன்னாலும் பாகிஸ்தானுக்குள் சென்றார். சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று இருந்தாலும்…
1.இந்த உடல் சொந்தமல்ல…
2.நண்பன் என்ற நிலை வளர வேண்டும்…! என்று அங்கே சென்றார்.

யாரும் யாருக்கும் பகைமை இல்லை. மதமும் இனமும் நம்மைப் பகைமை ஆக்கக்கூடாது. மதம் இனம் என்ற நிலையில் பிரித்து எண்ணினால் பகைமை என்ற நிலைக்கே நம்மை அழைத்துச் செல்லும் என்று தெளிவாக்கினார்.

“நாம் அனைவரும் சகோதரர்களே…!” என்ற அந்த உணர்வுகளை காந்திஜியைப் போன்று நாம் ஒவ்வொருவருமே வளர்த்த வேண்டும்.

மேலெழுந்தவாரியாக அரசியல் தலைவர்கள் செய்கிறார்கள் என்றால்
1.அவர்களுக்கெல்லாம் அருள் வழியில் நாம் ஒத்துழைப்பு தர வேண்டும்.
2.நல்ல செயல்களை நாம் செயல்படுத்திக் காட்டி அதைப் பார்த்து அவர்கள் பூரிப்படைய வேண்டும்.

“கட்சியில் நான் இருக்கிறேன்…” என்று தவறு செய்தால் கட்சிக்குள்ளேயே இப்படித் தவறு செய்கிறார்களே…! என்று மனம் நொந்து விடுகின்றது. இப்படி வரப்படும் பொழுது தான் தவறின் நிலைகள் வளர்க்கப்படுகின்றது.

இதையெல்லாம் நாம் விடுத்துப் பழக வேண்டும்.

ஆகவே… எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அதை நமது அரசு என்று தான் நாம் ஏற்று வழி நடக்க வேண்டும். ஆனால் கட்சியின் தோரணையில் பார்த்தால் தவறுகள் தான் வரும்.

அரசை நல்வழிப்படுத்த காந்திஜி போன்றவர்களின் வழி முறைகளைக் கடைப்பிடித்தால் அறிவின் ஒளியாக வளரும். அதன் வழியில் நாம் நடந்தால் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.