ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2021

சாமி (ஞானகுரு) சொன்னபடி “அருள் சக்தியைப் பெறுவேன்...” என்ற எண்ணத்திற்கு நீங்கள் வர வேண்டும்

 

ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானியுங்கள்.
1.கண்களைத் திறந்து ஒரு நிமிடம் எண்ணுங்கள்
2.கண்களை மூடி ஒரு நிமிடம் அந்தச் சக்திகளை உடலுக்குள் செலுத்துங்கள்.

இங்கே யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாயிலாகப் மகரிஷிகளின் அருள் சக்திகளை இங்கே பதிவு செய்து வைத்திருக்கின்றோம்... காற்றிலேயும் பரப்பி வைத்திருக்கின்றோம்.

அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி எடுக்கும் பொழுது உங்கள் உடலுக்குள் தன்னாலே வந்து சேருகிறது.
1.கண்களை மூடி... பின் திறந்து
2.மறுபடி கண்களை மூடி... திறந்து அந்தச் சக்திகளை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
3.கண்களைத் திறந்த பின் “வீட்டில் கஷ்டம்...” என்று சொல்வதை விட்டு விடுங்கள்
4.உங்கள் வார்த்தையில் கஷ்டம் என்ற சொல்லை நீக்கி விட்டு
5.அதனை நீக்கும் அந்த அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். சகோதர உணர்வுகள் வளர வேண்டும் நாங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று இப்படித் தொடர்ந்து எண்ணுங்கள்.

இதைத் தான் நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன். “சாமியார் சொன்னார்” என்றால் அதை மட்டும் நீங்கள் நம்புகிறீர்கள். ஆனால் நீங்கள் எண்ணி எடுக்கலாம் அல்லவா...!

மிகவும் கஷ்டமாக இருக்கிறது... என் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை... தொழில் சீராக இல்லை... என்று இங்கே வந்து இப்படித்தான் என்னிடம் கேட்கின்றார்கள்.

காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவியுள்ளது. வீட்டில் அமர்ந்தபடியே அந்த அருள் சக்திகளைப் பெற்று நீங்களே எடுத்து உங்கள் வீட்டிலே பரப்பிக் கொள்ள முடியும்.

இதை நீங்களே செய்யலாம்.

1.என்னை நம்பி என்னிடம் எதிர்பார்க்கின்றார்கள்.
2.ஆனால் தன்னை நம்பி நான் சொன்ன உணர்வுகளை நீங்களே எண்ணி எடுக்க முடியும்.
3.அதற்குத் தான் இங்கே தியான மண்டபம் அமைத்தது.

உயர்ந்த சக்திகளை அவரவர் எண்ணி எடுப்பதற்குத் தான் இந்த மண்டபமே தவிர அது எனக்காக அல்ல. இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்...?

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணி எடுக்கும்போது நான் அங்கே செல்கின்றேன்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தியைப் பெறுகின்றேன். என்னை நாடி வருபவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக நீ ஆகின்றாய் என்று கீதையிலே சொல்வது போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணும் போது “நான் அதுவாக ஆகின்றேன்...”

ஆகவே...
1.உங்களை அறியாது இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப் பொருள் காணும் திறன் நீங்கள் பெற வேண்டும்
3.எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்
4.தொழில் நன்றாக இருக்க வேண்டும்... செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்
5.உங்களுடைய மூச்சுகள் எல்லாம் பரமாத்மாவில் கலந்து அனைவரையும் நலமுடன் வாழச் செய்ய வேண்டும் என்று
6.நான் உங்களுக்குச் செய்வது போல் நீங்களும் மற்றவர்களுக்கு இப்படி எண்ணினால் நீங்களும் ஞானியாக முடியும்.

ஈஸ்வரா... என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று முதலில் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்...
1.எங்கள் வீடு முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3,எங்கள் தாய் தந்தையின் அருளாசி எங்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.எங்கள் மூதாதையர்களின் நல்லாசி கிடைக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்
6.எங்களுக்கு நல்ல மனதும் எங்களைப் பார்ப்பவர்களுக்கு நல்ல மனதும் வர வேண்டும் என்று
7.உங்கள் உயிரிடம் கேட்டால் அவன் அதை எல்லாம் உருவாக்கித் தருவான்...!

இதை நீங்கள் கேட்டுப் பெறலாம் அல்லவா.

சாமியிடம் தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. உங்களாலே அது முடியும்... உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்கிறேன்.

என்னை நம்புகிறீர்கள்... ஏதோ பெரிய சக்தி படைத்தவர் என்று...!
1.ஆனால் நான் சொன்னபடி நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குள் எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.