ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 3, 2020

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்


கோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்...?

தாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே... “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே...? நான் பிள்ளையக் கஷ்டபட்டு வளர்த்தேனே... ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே...! அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ...?

பையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே...  திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே... என்றைக்குத் தான் திருந்துவானோ...? நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ...? என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.

நல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்தான் இருக்கின்றது.

முதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்... ஞானிகள் காட்டிய வழிப்படி
1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்
2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.

நாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ... அதை எல்லாம் நம் உயிர் “ஓ...” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்...” என்று உடலாக்கி... நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் தியானமும் செய்கின்றார்கள்... ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்...! என்று இப்படிச் சொல்லாதீர்கள்.

கோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்ரால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்

நீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன..? என்று பார்ப்பார்கள். கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்... குருநாதர்.

ஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்...! என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.
1.நல்லதைப் போற்ற வேண்டும்...
2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்...
3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.

கடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா...!
3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.

இது பக்தி... இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எதுவும் இல்லாமல்... சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.

இதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்...? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.
4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.
5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.
6.இதையே தியானியுங்கள்.... இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.

அந்த நிலை பெறுங்கள்... எமது அருளாசிகள்...!