ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2020

“நம்மைக் காக்கும் சக்தியை” நமக்குள் நாமே பெருக்கும் வழி


சர்க்கரையைத் தயாரிக்கும் போது கரும்பில் இருக்கக்கூடிய சாற்றில் இருக்கும் விஷத்தைப் பிரிப்பதற்கு கெமிக்கலைத் தான் போடுகின்றார்கள்.

1.அந்தக் கெமிக்கலை ஒரு துணியில் போட்டால் துணி வெந்து போகும்.
2.ஆனால் அதைத்தான் சர்க்கரையில் போட்டு நாம் சாப்பிடுகின்றோம்.
3.பார்ப்பதற்கு அழகாக (சீனி) இருக்கின்றது ருசியாகவும் இருக்கின்றது.

இப்படி அந்தக் கெமிக்கலைக் கலந்து அழுக்குகளை நீக்கினாலும் அது சிறிது சர்க்கரையுடன் கலந்துவிடுகின்றது. இப்படி விஞ்ஞான அறிவால் ஒரு பொருளைத் தெளிவாக்கினாலும் விஷத் தன்மை நம் உடலுக்குள் சேர்கின்றது.

1.குடிக்கும் நீரிலும் இதைப் போன்றே தூய்மைப்படுத்துகின்றார்கள்.
2.நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெய் வகைகளிலும் கெமிக்கலைப் பயன்படுத்துகின்றனர்.

எண்ணையிலுள்ள கொழுப்பு சத்து மற்றவைகளை எடுப்பதற்காக கெமிக்கலைப் போட்டுச் சுத்தப்படுத்துகின்றனர். ஆனால் அது வேண்டாதவைகளை எடுத்து விடுகின்றது.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் அந்தக் கெமிக்கல் கலந்த எண்ணை சென்றுவிடுகின்றது. நம் உடலுக்குள் சென்றவுடன் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

இதைப் போன்ற கடும் விளைவுகள் வருவதனால் இதிலிருந்து தப்புதல் வேண்டும். ஆகையினால் இதை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகளை நமக்குள் வளராது தடுத்துப் பழக வேண்டும்.

1.இன்று இந்தக் காற்று மண்டலத்தில் பல வகையிலும் படர்ந்து வரும் நச்சுத் தன்மையால்
2.இந்த விஞ்ஞான அறிவால் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து
3.சிந்தித்துச் செயல்படும் திறன் எல்லோருக்கும் இழந்து விட்டது.

அதனால் திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும்… தவறு செய்யக்கூடிய  உணர்வுகளைத் தூண்டுவதும்… சிந்தனை இல்லாத செயல்களைச் செயல்படுத்தும் நிலைகள் வருகின்றது. (எல்லோருக்கும் இப்படித்தான்…!)

இதைப் போன்ற நிலைகள் வரப்படும் பொழுதுதான் போக்குவரத்துகளிலும் தொழில் செய்யும் இடங்களிலும் விபரீத விபத்துக்கள் ஏற்படுகின்றது.

மேலும்…
1.மனிதனுக்கு மனிதன் விபரீதச் செயல்களைச் செய்து (இன்றைய நிலை)
2.மனிதன் என்ற நிலை இல்லாதபடி இரக்கம் ஈகையற்ற நிலைகளில்
3.தாக்கிக் கொன்று கொண்டிருக்கும் உணர்வுகள் பெருகிவிடுகின்றது.

ஏனென்றால் ஒரு பொருளில் விஷம் பட்டால் அதை உட்கொண்டால் சிந்தனை சிதறிவிடுகின்றது. இதைப் போன்று விஷத் தன்மையை நமக்குள் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க நம்மை அறியாமலே தவறு செய்யும் நிலைகளாக மாறுகின்றது… கடும் நோயாகவும் விளையும் தன்மை வருகின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்தெல்லாம் நாம் மீள வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தை எப்படியோ நீங்கள் படுக்கையை விட்டு எழுந்தவுடனே எடுத்துத் தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு…
1.மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
2.கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
3.குழந்தைகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்றும்
5.கட்டாயப்படுத்திச் செய்ய வேண்டும்.

குழந்தைகளையும் இவ்வாறு எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று நாளைக்கு அவர்களுக்குச் சொல்லிச் சொல்லி நீ மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறு… உடல் நலம் பெறுவாய்… உனக்கு நன்றாகப் படிப்பு வரும்… நல்ல ஞான சக்தி கிடைக்கும்…! என்று இது ஒரு பழக்கத்திற்கு வந்துவிட வேண்டும்.

காலை ஐந்து அல்லது ஐந்தரைக்குள் எழுந்து ஒரு பத்து நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று தியானித்தால் போதும்.

இந்த மாதிரி எண்ணி எடுத்து அந்தச் சக்திகளைப் பெருக்கிப் பழக வேண்டும். நம்மைக் காக்கும் சக்தியை நமக்குள் நாமே பெருக்கும் பழக்கத்திற்கு வர வேண்டும்.