ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2020

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்


நமக்கு வேண்டிய ஒருவர் “கஷ்டம்” என்று நம்மிடம் வந்து சொல்லியிருப்பார். அந்த உணர்வை நாம் கேட்டுக் கொண்டேயிருந்தோம் என்றால் என்ன நடக்கின்றது…?

அவருக்குள் எந்த வகையான அணுக்கள் உருப்பெற்றுக் கஷ்டம் என்ற நிலை வந்ததோ அவரை எண்ணும் பொழுது நமக்கும் அதே கஷ்டமான உணர்வைத் தூண்டுகின்றது.

என் குடும்பத்தில் பல தொல்லைகள் வருகின்றது… எனக்கு வியாபாரம் மந்தமாக இருந்தது… அதிலே குறைபாடுகள் வந்தது… என் உடலிலே நோயாக மாறி விட்டது என்று அவர் சொல்லச் சொல்ல
1.நாம் அதைக் கேட்டால்
2.அதே உணர்வின் அணுக்கள் விளளைந்து விட்டால்
3.நம்மை அறியாமலே “கஷ்டமாக இருக்கின்றது: என்று சொல்ல வந்துவிடும்.
4.நம் வியாபாரத்திலும் அவருக்குண்டான நிலை நமக்கும் மாறிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணுங்கள். விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.அது எங்கள் இரத்தநாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.குறைந்தது ஒரு ஐந்து நிமிடமாவது எண்ண வேண்டும்.

இப்படி வலுப்படுத்திக் கொண்ட பின் கஷ்டம் என்று நம்மிடம் சொன்னவரைப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவீர்கள்
2.இனி உங்களுக்குக் “கஷ்டம் இல்லை…!” என்று சொல்லிப் பழகுங்கள்.

ஆகவே நம் வாழ்க்கையில் எத்தகைய நிலைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த கணம் இந்த முறைப்படித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கஷ்டப்படுபவர்கள் சொல்லும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் இரத்தநாளங்களில் கலக்கின்றது. ஆனால் அதிக நேரம் கேட்டுக் கொண்டிருந்தோம் என்றால் இது அதிகமாக நமக்குள் சேர்ந்துவிடும்.

ஒரு ஐந்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அதை இரத்தங்களில் அதிகமாகக் கலக்கச் செய்தல் வேண்டும்.
1.அப்பொழுது இதனுடைய வலு அதைக் குறைக்கும்.
2.இதைத் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கி அவனை வீழ்த்தினான்…! என்று சொல்வது.

ஆகவே ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மையை நாம் அதிகமாகச் சேர்த்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.நமக்குள் படும் உணர்வுகள் - அவர்கள் பட்ட வேதனையோ  அவர்கள் பட்ட கஷ்டங்களோ
2.நமக்குள் வளராது தடுக்கும்.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் பழக வேண்டும்.

அருள் ஞானிகளைப் பற்றிய உபதேசம் சொல்கிறோம். கேட்டுக் கொண்டே இருப்போம். இருந்தாலும் மற்றவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்க ஆரம்பித்ததும் இதை விடுத்து விட்டு
1.அவர்களுடன் ஒன்றியே… நாமும் பேச ஆரம்பித்துவிடுவோம்.
2.அவர்கள் உணர்வுகள் இங்கே பட்ட பின் ஆத்ம சுத்தி செய்வதையே மறந்து விடுவோம்
3,இப்படியும் அடிக்கடி ஆகின்றது.

ஆகையினால் ஒவ்வொரு நொடிக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும். எல்லா நேரத்திலும் நம் நினைவோடு இதை எடுத்து வலுப் பெறச் செய்ய வேண்டும் (முக்கியமானது).