ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2020

“பதட்டமான உணர்வுகளை” உயிரிலே (புருவ மத்தியில்) மோத விடக்கூடாது


நம்முடைய வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் விலை உயர்ந்த பொருளைத் தவற விட்டால் ஐயோ… “போய்விட்டதே… போய்விட்டதே…! என்று பதட்டம் அடைகின்றோம்.

அடுத்தாற் போல் நாம் ஒரு கூடையையோ பையோ கையில் எடுத்துக் கொண்டு செல்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஏற்பட்ட பதட்டத்தினால்… தூக்கிக் கொண்டு வந்த பையை எங்கேயாவது வைத்து விட்டு என்ன செய்வோம்…?

பையைக் கையில் எடுத்துக் கொண்டு தான் வருகின்றோம்…! என்ற நினைப்பில் நாம் பாட்டுக்கு வந்து கொண்டிருப்போம்.

பின்னாடி… ஐய்யய்யோ…! நான் பையை எங்கேயோ வைத்து விட்டேன்…! என்று அந்தப் பதட்டத்தில் இருக்கின்ற பொருளையும் விட்டு விட்டு “காணோம்… காணோம்…!” என்று சொல்லத் தொடங்குவோம்.

ஆனால் கடைசியில் பை கையில் தான் இருக்கும்.

ஆகவே இது எது செய்கின்றது..? நாம் நுகர்ந்த அந்தப் பதட்டமான உணர்வுகள் அதர்வண...! நம் நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உங்களுக்குள் வலிமையாக வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
3.ஏனென்றால் உங்களுக்கு எல்லாச் சக்தியும் கொடுக்கின்றோம். நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்… இனி வரும் காலம் விஷத் தன்மை வாய்ந்ததாக வரும் பொழுது உங்களை மீட்டிக் கொள்வதற்குத்தான் இதைச் சொல்கிறேன். பதிவு செய்கின்றேன்… அருள் உணர்வுகளை எல்லாம் காற்றிலே பரவச் செய்கின்றேன்…!

நீங்களும் அந்த அருள் உணர்வை எடுத்து
எங்கள் தீமைகள் அகன்றது…
எங்கள் துன்பங்கள் அகன்றது…
எங்கள் பகைமை அகன்றது…
நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்…! என்ற நிலைக்கு வளர்ந்து வருதல் வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் போல்” பிறரின் தீமைகளை நீக்குபவர்களாக மாற வேண்டும். நல்ல சிந்தனை உள்ளவர்களாக மாற்றி அமைக்கும் சக்தி “நமக்கு உண்டு…!” என்ற நிலையில் வளர்ந்து வர வேண்டும்.

1.சோகத்திற்கும்… சலிப்பிற்கும்… சங்கடத்திற்கும்… வெறுப்பிற்கும்… வேதனைக்கும்…
2.நாம் இந்த உணர்வுகளை நம் உயிரிலே மோத விடக்கூடாது.

மனிதனை உருவாக்கிய நல்ல சிந்தனை கொண்ட உணர்வுகளில் விஷங்கள் படர்ந்து விட்டால் நம் உடலிலே உள்ள நல்ல குணங்களை அது மாற்றி விடுகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு… அவர் அருள் துணை கொண்டு… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அதை எல்லாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

உங்களால் முடியும் உங்களை நீங்கள் நம்புங்கள்..!