ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2016

மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்

புலனறிவைப் (ஐம்புலன்கள்) பற்றி நன்கு அறிந்து கொண்டவர்கள் கடந்த கால நம் மூதாதையர்கள் என்று சொல்லலாம். அவர்கள் மனிதனானபின் இதையெல்லாம் தெளிவாக்கி இருக்கின்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன செய்கிறார்கள்?

தன்னைக் பாதுகாத்து கொள்வதற்காகப் பல தாவர இனங்களின் அறிவைத் தெரிந்து கொண்டு தன் அருகிலே அத்தகைய தாவரங்களைப் போட்டுக் கொள்கின்றனர்.

மணத்தால் நுகர்ந்துதான் மற்ற உயிரினங்கள் இரைக்குத் தேடிச் செல்கின்றது. அப்பொழுது இவர்கள் உறங்கும் போது நுகர்ந்து வந்தால் அப்புறம் அந்த உயிரினங்கள் என்ன செய்ய முடியும்? விலகிச் சென்றுவிடுகிறது.

நான் ஒரு சமயம் ஒரு இடத்தில் படுத்திருந்தேன். நான் அலுங்காமல் படுத்திருந்தேன், நல்ல பாம்பு அங்கே வந்து படுத்திருக்கின்றது.

நான் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தேன். “நெளு நெளு” என்று இருந்தது. “என்னடா.., இது.., நெளு நெளு என்று இருக்கிறது?” தலையணை தான் போலிருக்கிறது என்று மறுபடியும் என்ன செய்தேன்?

இந்தத் தலையணையை எடுத்து அது மேல் போட்டுக் கொண்டு  மறுபடியும் படுத்துக் கொண்டேன். அடுத்து, “ஜிலு.., ஜிலு...,” என்று மறுபடியும் அதை நகர்த்திக் கொண்டு மறுபடியும் வருகின்றது.

பாம்பு தன் உடலில் வெப்பத்திற்காக வேண்டி இதைப் பண்ணுகின்றது.

அப்புறம் பார்த்தால் நெளு நெளு என்கிறது. “என்னடா இது.., மறுபடியும் நெளு நெளு என்று இருக்கின்றது” என்று நினைத்துக் கொண்டு எழுந்து விளைக்கைப் போட்டுப் பார்த்தால் – நல்ல பாம்பு.

அப்புறம் என்ன செய்வது? அலறிவிட்டேன். அவ்வளவு தூரம் பாம்பு அது வந்தாலும் கூட என்னால் தெரிய முடியவில்லை.

“சடார்...,” என்று வேகமாக நான் எழுந்தவுடன் என்ன செய்கிறது?

நம்மை அடித்துவிடுவான் என்று “சுர் ர் ர்..,” என்று என்னைப் பார்த்துச் சீறுகிறது. “எப்படியோ போ.., சாமி” என்று சொல்லி விட்டுவிட்டேன்.

இந்த மாதிரி நேரத்தில் இதையெல்லாம் சொல்லி உதாரணமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

வெள்ளைப்பூண்டு வேண்டும் என்றார் குருநாதர். அந்த நேரம் வெள்ளைப் பூண்டிற்கு எங்கே போவது? அப்புறம் அடுத்த வீட்டில் போய் வாங்கி வந்தேன்.

இது அகமதாபாத்தில் நடந்த சம்பவம்.

அதை நசுக்கி இரண்டு மூலையில் போட்டவுடன் அதன் வாசனையைக் கண்டு அது குட் பை (Good Bye) போட்டு நகர்ந்து ஓடிவிட்டது. நான் அதைக் கொல்லவில்லை. 

குருநாதர் சொல்லி இருக்கிறார் வெள்ளைப்ப்பூண்டை நசுக்கிப் போட்டால் அதன் மணத்தை நுகர்ந்து அந்தப் பாம்பு ஓடிவிடும். பாம்பை நீ அடித்தால் அது மனிதன் ஆகிவிடும். பாம்பு உன்னைக் கடித்தால் நீ அதுவாகி விடுவாய்.

இந்த மாதிரி ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டியுள்ளார்.