ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 4, 2016

அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் கண்டறிந்த அகஸ்தியன் எங்கே இருக்கின்றான்? அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே இருக்கின்றார்கள்?

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உடலுக்குள் போனவுடன் எங்கெங்கெல்லாம் போகின்றது?

அன்னக் குழாய்க்குப் போகின்றது. அதிலிருந்து பிரித்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறியவுடன் ஒவ்வொரு உறுப்பாகப் போகின்றது. கல்லீரல், மண்ணீரலுக்கெல்லாம் போகின்றது.

எல்லாம் சுத்தப்படுத்தி சிறுநீரகத்திற்கு வருகின்றது. அங்கே சுத்தமாகின்றது. அடுத்து இருதயத்திற்குச் செல்கிறது.

அங்கிருந்து உயிரின் பாகத்திற்குக் கொண்டு போனவுடன் இங்கிருந்து மாற்றி அது ஒவ்வொருவிதமாகப் பிரித்து வடிகட்டி இந்திரீகமாக மாற்றுகின்றது. எலும்புச் சத்தாக மாற்றுகின்றது. எல்லாம் ஒன்றாகச் சேர்க்கின்றது.

பித்தச் சுரப்பி இதிலிருந்து வரக்கூடிய பித்தத்தை எடுக்கின்றது. அந்த அணுக்களை மாற்றுகின்றது. பித்தப்பை இல்லையென்றால் என்ன செய்யும்? சரியாக ஜீரணம் ஆகாது. வடிகட்டும் தன்மையானால் நமக்குள் விஷத்தின் தன்மை கலக்கின்றது.

சிலர் பித்தப்பையை எடுத்துவிட்டுக் கூட வாழ்கின்றார்கள். பித்தப் பையில் கல் வந்தது. எடுத்தால் நல்லது என்று வாழ்கின்றார்கள். இந்த மாதிரி வாழ்ந்தாலும் கூட வரக்கூடிய உணர்வுகள் மாறுகின்றது.

சில பேர் உடலில் உள்ள சில உறுப்புகளை எடுத்துவிட்டு மாற்று உறுப்புகளைப் பொருத்தி வாழ்கின்றார்கள். சிறிது நாள் வாழலாம். ஆக, இந்த அசுத்தங்கள் நமக்குள் வருகின்றது.

சிறுநீரகத்தை எடுத்து மாற்றுக் கிட்னியைப் பொருத்துகின்றார்கள். அடுத்து செயற்கையில் கூட கிட்னியைப் பொருத்தலாம் என்று சொல்கின்றார்கள். இருதயத்தையும் மாற்றலாம், செயற்கையில் பொருத்தலாம் என்று விஞ்ஞான அறிவால் கொண்டு வருகின்றார்கள்.

இதை வைத்து எவ்வளவு நாள் வாழ முடியும்? சிறிது நாள் தான் வாழ முடியும். அதிலே சேர்த்த அசுத்தங்கள் முழுமையான பின் உயிர் அதற்குத்தக்க வெளியில் போகும்.

அப்படிச் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மனிதனாகப் பிறப்போமா? இல்லை. அசுர உணர்வு கொண்ட மனிதனற்ற நிலையாகத்தான் பிறக்க முடியும்.  சம்பாரித்த பணத்தைக் கொஞ்ச நாள் வாழ்வதற்காக வேண்டி சம்பாரித்த பணத்தைச் செலவழித்து வேதனையைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

யாராவது உயிருடன் இருக்கின்றார்களா? இவ்வளவு பெரிய ஞானி அகஸ்தியன் எல்லாவற்றையும் கண்டறிந்து வெளிப்படுத்தியவன் உடலுடன் இருக்கின்றானா?

அவன் எங்கே இருக்கின்றான்? ஒளியாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள் அவனைச் சேர்ந்தவர்கள் எங்கே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

மனிதனாகத் தோன்றியவர்கள் ஒளியின் சரீரமான நிலையில் இதைப் போன்ற துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.

மனிதனாகப் பிறந்த நாம் அடைய வேண்டிய எல்லை அதுதான். நாம் அந்த நிலையை அடைய நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.