ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2014

தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போன்று துன்பத்தைப் போக்க துருவ நட்சத்திரத்தை எடுத்துப் பழகுங்கள்.

நான் இதையெல்லாம் என்ன செய்யப்போகின்றேன்.
இந்த வேலை இருக்கிறது.
அந்த வேலை இருக்கிறது என்று இல்லாதபடி
எந்த வேலை இருந்தாலும் சரி
நீங்கள் துருவ நட்சத்திரத்தைப் பத்து நிமிடம் நினைத்தால்போதும்.

அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு “ஓம் ஈஸ்வரா” என்று உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். என் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் திணியுங்கள்.

எத்தனை நிமிடம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
எத்தனை நிமிடமானாலும்
தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது போன்று
உங்கள் துன்பத்தைப் போக்குவதற்கு இதே மாதிரி
துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துப் பழகுங்கள்.

ஐய்யய்யோ..,! எனக்கு இப்படி வேதனையாக இருக்கிறதே. அவன் இப்படிப் பண்ணுகிறானே,  அப்படிப் பண்ணுகிறானே, என்று எண்ணுகிற நேரத்தில், மகரிஷிகளின் அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும் என்று சுவாசியுங்கள்.

அதற்காக வேண்டி ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை உங்கள் கையிலே கொடுத்திருக்கின்றேன். உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஏனென்றால் இன்று கடைசி எல்லையிலே நாம் இருக்கின்றோம். இன்று நாம் உட்கார்ந்த இடத்திலே விஞ்ஞான அறிவாலே எதுவும் எந்த நிமிடமும் நடக்கும்.

ஏனென்றால் அங்கிருந்து லேசர் கதிரியக்கத்தை நாம் ஒளிபரப்பும் ஒளிபரப்புக்குள் மனிதனுடைய உணர்வை ஒத்து, அதைச் செயலாக்கும் திட்டத்திற்கே வந்துவிட்டார்கள்.

அதனால்தான் இப்பொழுது அணுகுண்டையெல்லாம் எங்கே மறைத்து வைப்பது? செய்ததை எல்லாம் எங்கே வைப்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று காற்று முழுவதும் நச்சுத்தன்மை அடைந்துவிட்டது.
நீர் நிலைகளெல்லாம் கெட்டுவிட்டது.
மனித உணர்வுக்குள்ளும் விஷத்தன்மை வளர்ந்துவிட்டது.
மனித இனத்தை காக்க முடியாத நிலைகள் வந்துவிட்டது.
இக்கட்டான நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
விண்வெளியின் நிலையும் மோசமாகிவிட்டது.

சூரியனிலிருந்து வரும் காந்த அலைகளிலிம் விஷம் கலந்து வருகின்றது. கோள்களிலும் பல நிலைகள் உருவாக்கக்கூடிய தன்மை வந்துவிட்டது. ஆக பிரபஞ்சமே நச்சுத்தன்மை ஆகின்றது.

இதையும் ஊடுருவி விஞ்ஞானம் மற்ற பிற மண்டலங்களுக்குப் போகும் தன்மை வந்துவிட்டது. பிற மண்டலங்களுக்குச் சென்று விட்டால், மிக துரித நிலைகள் கொண்டு நமது பிரபஞ்சத்தின் தன்மை மாறுபடும்.

பிற மண்டலத்திற்கு போவதற்குமுன் மனிதனுடைய சிந்தனை அனைத்துமே முழுமையாக அழிந்து போகும் நிலை வந்துவிட்டது.

ஆகையினாலே, இதிலிருந்து நாம் அடுத்து கல்கி யுகத்தில் நிற்க வேண்டும். நம்முடைய மூச்சலைகள் அடுத்த சந்ததிகளை வளர்க்க வேண்டும்.

முன்பு வாழ்ந்த ரிஷிகளைப் பற்றி நாம் சொல்லுகின்றோமல்லவா? இதைப்போன்று எதிர்காலத்தில் நாம் அடுத்து வரும் சந்ததிகளைக் காக்கும் வல்லவர்களாக ஆகவேண்டும். நமக்குள் அந்த வல்லமை பெறவேண்டும்.
இந்த உடலைவிட்டுச் சென்றால்
அந்த மெய் ஒளியுடன் நாம் அனைவரும் இணைய வேண்டும்.