ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2023

திட்டியவனை எண்ணியதும் கோபம் இயக்குவது போல் இந்தப் பதிவை எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக்க முடியும்

உதாரணமாக…
1.சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் எதிர்மறையான உணர்வாக (சண்டையோ அல்லது எதிர்பாராத நிகழ்வோ) இருந்தால்
2.நம் இரத்தங்களிலே அது கலக்கக் கலக்க ஒன்றுக்கொன்று போர்முறையாகி
3.உறுப்புகள் முழுவதற்கும் இந்த இரத்தங்கள் செல்லும் பொழுது
4.ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கும் எதிர்நிலையாகிறது.

அதனால் மனக்கலக்கங்களும் நாளடைவில் உடல் வலியும் நோயும் வரக் காரணம் ஆகிவிடுன்றது. அதைப் போன்று ஆகாதபடி தடுக்க ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி என்று யாம் கொடுக்கும் ஆயுதத்தை நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்...!

தீமைகள் உங்களை இயக்காதபடி மனம் தெளிவாகும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதிக்கே இதை உபதேசிக்கின்றேன்... பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

“ஆத்ம சுத்தி” செய்யும் ஆற்றலைப் பெறுவதற்கு நீங்கள் வருடக் கணக்கில் தவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

“ஒருவன் திட்டுகிறான்…” என்று வைத்துக் கொள்வோம். திட்டியவுடனே நம் எண்ணங்கள் அனைத்தும் அவன் மீது எப்படி வருகிறதோ அதே போன்றுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை மீண்டும் எண்ணுவது போல்
1.யாம் சொன்னதைத் திரும்ப எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்
2.இருளை நீக்கலாம்… அமைதி பெறலாம்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தலாம்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிகளை நீங்கள் பெற வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். மனித வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி… என்றும் பிறவியில்லா நிலை என்று அடைந்ததுதான் அந்தத் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அடிக்கடி நாம் நுகர்ந்து அந்த ஆற்றலைப் பெருக்கிக் கொண்டால் இருளை நீக்கி… சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… இந்த வாழ்க்கையை நமக்கு நாமே ஒழுங்குபடுத்தும் அந்த சக்தியும் நமக்குக் கிடைக்கும்.

அவ்வப்பொழுது வாழ்க்கையில் வரும் தீமைகளைச் சுத்தப்படுத்தி அருள் உணர்வைச் சேர்த்துக் கொள்ள முடியும்.
1.எந்த அளவிற்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் சேர்த்துக் கொள்கின்றீர்களோ அந்த அளவுக்கு அது உங்களுக்கு நல்லது
2.இந்த உடலில் வரும் நோய்களைத் தடுக்கலாம்... மன அமைதியும் கிடைக்கும்
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்

சாமி செய்வார் சாமியார் செய்வார்... ஜோதிடம் செய்யும்... ஜாதகம் செய்யும்... மந்திரம் செய்யும்... எந்திரம் செய்யும்...! என்று காலங்களை நீங்கள் விரயம் செய்ய வேண்டியதில்லை.

இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணிய உடனே அது உங்களுக்குக் கிடைக்கும்படிச் செய்கின்றோம்.

1.திட்டியவனை எண்ணியதும் நம்மை அந்தக் கோபம் எப்படி இயக்குகிறதோ…?
2.இது போன்று திட்டியவனை எண்ணப்படும் போது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அது நமக்குள் இயக்காதபடி தடுக்கவும்
3.ஒரு வேதனைப்படுவோரை எண்ணியபின் அந்த வேதனை உடனடியாக நம்மை எப்படி இயக்குகின்றதோ
4.இதைப் போல் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உள் செலுத்தி
5.அது போன்ற எத்தகைய தீமைகள் வந்தாலும் அவைகளைத் தணித்துக் கொள்ள முடியும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். இப்படிப் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மன அமைதி கிடைக்கும்… மகிழ்ச்சி வரும்... அருள் சக்திகளும் கிடைக்கும்.