ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 23, 2023

“புருவ மத்தியில்…” துருவ நட்சத்திரத்தினை நிலை நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன…?

வாழ்க்கையில் யாருக்குமே நாம் தொல்லை கொடுக்க வேண்டாம்… “சும்மா தான் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் தொல்லைப்படுவரையும் கஷ்டப்படுபவரையும் வேதனைப்படுபவரையும் வெறுப்படைபவரையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… அந்தந்த உணர்வுகளை நுகராது இருக்கவும் முடியாது.
1.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம்
2.உயிரிலே பட்ட பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கண்களால் பார்க்கின்றோம் பிறருடைய செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் அவர் செயலின் உணர்வுகள் வெளி வருவதை நாம் நுகர்ந்து தான் அவர் இன்ன நிலையில் இருக்கின்றார் என்று அவர் கோபப்படுகின்றாரா.. வேதனைப்படுகின்றாரா...! வேதனைப்படுத்துகின்றாரா...? என்ற உணர்வால் அறிகின்றோம்.

இந்த உணர்வை ஈர்த்து நம் உயிர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றால் “என்ன தான் நடந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது…”

வாழ்க்கையில் சிலர் மிகவும் விரக்தி ஆகி இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளோருக்கு…
1.எதிர்த்தாற்போல் இருக்கக்கூடிய ஒரு பொருளை அறிய முடியாது... காண முடியாது... தெரிய முடியாது… அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
2.வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் “தன் வீடு” எங்கே இருக்கிறது…? என்று தெரியாது.
3.அவருடைய நண்பரே அருகில் வந்தாலும் அந்த நண்பரை அவரால் அறிய முடியாது... தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் அறிவு அங்கே மழுங்கி விட்டால் இந்த உணர்வுகளை அங்கே செயலாக்குவது இல்லை. உதாரணமாக…
1.கண்களிலே பூ விழுந்தால்… அதாவது கண் கருவிழிக்குள் கருமணியில் அழுக்குகள் சேர்ந்து விட்டால் எப்படிப் பார்வை சரியாகத் தெரியாதோ இதே மாதிரி
2.நம் உயிரிலே உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) மோதும் இடத்தில் ஒரு “தடயம்…” ஒன்று உண்டு
3.அடிக்கடி வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தால் உயிரைச் சுற்றி அழுக்குகள் அதிகமாகிவிடும்.

அந்த அழுக்கு என்பது வேதனையின் நிலையாக உருவாவது உண்டு. அதிகமான அழுக்குகள் அங்கே சேர்ந்து விட்டால் சோர்வின் தன்மை வந்துவிடும்.

1.எதை நினைத்தாலும் அது சரியான நினைவுகள் வராது
2.என்ன செய்கின்றோம்… ஏது செய்கின்றோம்…? என்று எதையும் அறிந்து கொள்ள முடியாது (தன்னை மறந்த நிலை என்று சொல்கிறோம் அல்லவா)

இத்தகைய உணர்வு கொண்டு இந்த உயிரான்மா வெளியே சென்றால் எங்கே செல்லும்...? மனிதன் யார் மீதும் நினைவில்லை.

ஆனால் இதைப் போன்று சில உயிரினங்கள் அடிக்கடி தன்னை நினைத்து மறந்து போகும். அத்தகைய உடலைப் பெறும் நிலையாக இந்த உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

உயிர் ஒன்றுதான்... பல உடல்களாக எடுத்து எடுத்து இன்று மனிதனாக வந்தது. இருந்தாலும் “உயிர் தான் நம்மை உருவாக்கியது…” என்று மனிதனாக ஆன பின் தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தெரிந்தாலும் அதை மதித்து ஞானிகள் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டுமா இல்லையா...?

1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தைப் அடிக்கடி எண்ணச் சொல்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா…?
2.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போது கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அப்போது தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாறும். நம் உணர்வுகள் தெளிவாகும்… பேரருளாக பேரொளியாக மாறும்.

இந்தப் பிறவிக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.