ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2023

மந்திரமும் இல்லை மாயமும் இல்லை… எனக்கு நோய் இல்லை “எப்போதும் நான் நலமாக இருப்பேன்” என்று உங்களால் சொல்ல முடியுமா…?

யாரை நான் ஜெபிக்கின்றேன்…? யாரை எண்ணி நான் தவமிருக்கின்றேன்…?
1.குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றேன் (ஞானகுரு)
2.பெற்று யாரையெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினேனோ
3.நான் பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருக்கின்றேன்.

ஆனால் நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு “என்ன..? சாமி சொன்னார் நமக்கு ஒன்றுமே நடக்கவில்லை… ஒன்றுமே நடக்கவில்லை…” என்று எண்ண வேண்டியதில்லை.

சிலர் “என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…” என்று எண்ணுகின்றார்கள். கை கால் குடைச்சல் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது.. தீராத நோயாக ஒரே தலைவலியாக இருக்கிறது…! என்று கேட்பார்கள்.

தலை வலி நீங்க வேண்டும்… கை கால் குடைச்சல் நீங்க வேண்டும் என்று கேட்கின்றார்களா…? என்றால் இல்லை.

1.அதை “மற்றவர்களுக்குச் சரியாகும்…” என்று யாம் சொல்லியிருப்போம்.
2.ஆனால் “அவர்களுக்குத் தானே சொன்னார்…” என்று இதைத் திரும்பத் திரும்பக் கேட்பார்கள்.

தீராத தலைவலியாக இருக்கின்றது, உடலெல்லாம் வேதனையாக இருக்கின்றது என்று கேட்கிறார்கள்.

இப்பொழுதுதானே அவருக்குச் சொன்னோம் என்று சொன்னால் “அதற்குச் சொல்லவில்லை…” என்பார்கள். என்னுடைய வேதனைகளை என்னால் தாங்க முடியவில்லை…! என்பார்கள்.

ஏனென்றால் இந்த எண்ணத்தை முதலில் நீக்கிவிட்டால் உங்கள் நோய் நீங்கிவிடும்.

நீங்கள் மந்திரமும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை… ஒன்றும் வேண்டியதில்லை.
1.இந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்து
2.“எனக்கு நோய் இல்லை… நான் நலமாக இருப்பேன்…” என்ற எண்ணத்தை மட்டும் கூட்டிப் பாருங்கள்.

உங்கள் எண்ணத்தை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உங்களுக்குள் அந்த நன்மையின் பயனைக் கூட்டும்.

நீங்கள் எண்ணியவுடன் கிடைக்கும்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

ரேடியோ, டி.விக்களில் எந்தெந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அந்த அலை வரிசையில் வைத்து ரசித்துப் பார்க்கின்றோம்.

அதைப் போன்றுதான் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் என்று பார்க்கின்றீர்கள் சாதாரண மனிதனைப் பார்க்கின்றீர்கள் நல்லதைப் பார்க்கின்றீர்கள்.

ஆனால், அந்த வேதனை என்ற விஷத்தன்மைகளைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது அதை உடனடியாக அறிய முடிகின்றது. அந்த வேதனை உங்களை இயக்கிவிடுகின்றது.

இதைப் போல் தான் “உங்கள் மனதைத் திருப்பி..,” அருள் ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வை ஆழப் பதிவு செய்து கொண்டபின் அதை நீங்கள் நினைவு கொண்டால் மகரிஷிகள் உணர்த்திய உணர்வலைகளை எளிதில் பெற்று நீங்களே உங்கள் துன்பங்களை நீக்கிக் கொள்ள முடியும் உங்கள் எண்ணத்தால் உயர்ந்த நிலைகள் பெற முடியும்.

இதைவிட இன்னும் சுலபமாகக் கொடுப்பதற்கு என்ன இருக்கின்றது?

மக்கள் யாரும் குறை உள்ளவர் அல்ல. சந்தர்ப்பம் இத்தகைய நிலைகள் அமைந்து விட்டது. அவர்களை மீட்டிட நீ என்ன செய்யப் போகின்றாய்..,? என்று குருநாதர் கேட்டார்.

அவர்களின் உயிர்களை நீ கடவுளாக மதி. உடல்களைக் கோவில்களாக மதி. மனிதனாக உருவாக்கிய உயர்ந்த குணங்களை நீ அங்கே வரம் கேள். அங்கே உயர்ந்த குணங்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் உனக்குள் அது வளர்கின்றது.

அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் உனக்குள் காக்கும் சக்தி வளர்கின்றது.

ஆகவே, “குறைகளைக் காணாதே…,” குறைகளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய், உயர்ந்த தியானத்தை நீ எடு. அவர்கள் குறைகளிலிருந்து மீள வேண்டும் என்று நீ தவமிரு.

அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது நீ உயர்கின்றாய். அவர்கள் அதைப் பெறவேண்டும் என்று ஏங்கு. அதை உன்னால் பெற முடியும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

எனக்குக் குரு கொடுத்தது இது தான்.