ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2023

உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

கைகளில் அழுக்குப் பட்டால் எப்படித் துடைக்கின்றோமோ இதைப் போல் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களையும் கோபங்களையும் குரோதங்களையும் பார்க்க நேர்ந்தால் நம் ஆன்மாவில் படும் அந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன்... சிவனுக்குக் கணக்குப்பிள்ளை...” என்று காட்டுகின்றார்கள்.
1.நாம் சுவாசிக்கும் குணங்கள் எவை அதிகமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்தால் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறுகின்றோம்.
3.இது மனிதனின் கடைசி நிலை.

ஆகவே அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் அருள் சக்தி பெற்றது தான்... “நாம் இன்று இருக்கும் இந்த மனித உடல்...” என்பதை மறந்திடலாகாது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த நிலையில் கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவைப் பெற்றிருக்கின்றோம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி ஒளிச் சுடராக ஆக்குகின்றதோ இதைப் போல் நாமும்
1.இந்த உடலான பிரபஞ்சத்திலிருந்து நன்மை தீமைகளை அறிந்து
3.தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதி பெற்றவர்கள்.

நம் உடலுக்குள்ளே... இது ஒரு உலகம் தான். நமக்குள் சேரும் வெறுப்பு விருப்பு இத்தகைய உணர்வுகளை இந்த உடலான உலகில் இருளை நீக்கி அருளைப் பெருக்கி ஒளி என்ற உணர்வை நாம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்தத்தில் உள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உறுப்புகளில் படரச் செய்து அதிலுள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும் தான் ஆத்ம சுத்தி என்பது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் பட்ட மாசுகளைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கண்ணில் கருமணிகளில் உள்ள விஷத்தன்மைகளைத் துடைக்க வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நாம் பார்த்ததை உடலுக்கெல்லாம் எடுத்துப் பாய்ச்சும் கண்ணின் நரம்பு மண்டலங்களிலும் அதை உருவாக்கிய அணுக்களிலும் பாய்ச்சி அதிலே தோய்ந்த விஷத் தன்மைகளைத் துடைக்க வேண்டும்.
3.அதைப் போன்றே நரம்பு மண்டலம் எலும்பு மண்டலம் தசை மண்டலம் தோல் மண்டலம் எலும்புக்குள் இருக்கும் ஊன்... அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து எடுத்து உள்ளே செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

இவ்வாறு நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டே வந்தால் இந்த உடலுக்குப் பின் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த மனித வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ பிறவி இல்லாத நிலையை நாம் அடைகின்றோம்.

இப்பொழுது உள்ள நிலைகளில் சிறிது நேரம் நன்மை செய்தாலும்... சிறிது நேரம் நாம் தியானம் செய்தாலும்... அதற்கடுத்து வரும் கவலைகள் சங்கடங்கள் வெறுப்புகள் சஞ்சலங்கள் கோபங்கள் இதைப் போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது “தியானத்தின் பலனைக் கூட அது மாற்றிவிடும்...”
1.காரணம் அது அதிகரித்து விட்டால் விஷத்தின் இயக்கமே அதிகரித்து விடுகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட “வாழ்க்கையே தியானம்...” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் தீமையைப் பார்க்கின்றோமோ அப்போதெல்லாம் அந்தத் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்து நம் ஆன்மாவைத் தூய்மையாக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

மனிதனான நிலையில்
1.உயிரை ஈசனாக மதித்து எவர் எவர் அந்த உணர்வுகளை வளர்க்கின்றனரோ
2.அவர்களுக்கெல்லாம் பிறவி இல்லை என்பதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழி.