ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 12, 2023

பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி…!

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து… அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் விஷத்தை எல்லாம் முறித்தது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ளது சப்தரிஷி மண்டலம்... ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷிகள்.

அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்றால்
1.மீண்டும் இன்னொரு உடல் பெறும் விஷத்தின் தன்மைகளைப் பிரித்து விடுகின்றது
2.உயிர் அதனுடைய காந்த அலைகளுடன் இயக்கப்படுகின்றது
3.அதிலே விளையும் உணர்வுகளை எடுத்து ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…!

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால்… கோடிச் செல்வங்களை இன்று தேடி வைத்திருப்பினும் இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. செல்வமும் நமக்குச் சொந்தமல்ல. “நமது உயிரே அழியாத செல்வம் ஆகின்றது…”

மனிதன் தீயிலே குதித்தால் இந்த உயிர் வேகுவது இல்லை. உணர்வுகள் மாறுகின்றது உணர்வுக்குத்தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது... இது சாகக்கலை.

ஆனால் இந்த உயிர் எப்பொழுதுமே எதிலுமே வேகுவதில்லை. வேகா நிலையை நாம் பெற வேண்டும்.

பிரபஞ்சம் ஒரு காலம் அழியும்... நம்முடைய பிரபஞ்சம் அழியும் தருணமே வந்துவிட்டது. கதிரியக்கப் பொறிகள் எல்லாக் கோள்களிலும் பரவி விட்டது.

பூமியில் நிலநடுக்கங்கள் எப்படி வருகின்றதோ பாறைகள் உருகி எப்படிப் பிளக்கின்றதோ அதைப் போல் மற்ற கோள்களிலும் இந்த நிலை ஆகிவிட்டது.

விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட கதிரியக்கங்கள் கோளின் நடு மையத்தில் அடைந்து கொதிகலனாக மாறிக் கொண்டிருக்கிறது. எந்தக் கோள் எப்பொழுது சிதையும்…! என்று சொல்ல முடியாது.
1.இரண்டு கோள்கள் சிதைந்தாலே போதும்… நம் பிரபஞ்சத்தின் இயக்கமே மாறிவிடும்.
2.நம் பூமி சிதைய வேண்டியதே இல்லை. ஆனால் அதற்குத் தக்க இயக்கங்கள் மாறிவிடும்.
3.இதைப் போன்ற காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்று பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று நாம் சொல்லும் அகஸ்தியன் நீள வடிவமாகச் சென்ற பூமியை அது சாயாதபடி சமப்படுத்தித் திருப்பினான்… அதைச் சீராக்கினான்.

இன்றோ மனிதனுடைய விஞ்ஞான அறிவால் பூமி உருகும் தன்மை வந்துவிட்டது… பிரபஞ்சமும் உருகும் தன்மை வந்துவிட்டது… கோள்களும் உருகும் தன்மை வந்து விட்டது.

அகஸ்தியன் துருவனாகி… துருவ நட்சத்திரமாக ஆன அந்தச் சக்தியை நாம் பெற வேண்டும். பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தாலே அந்தப் பத்து மாதத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பத்திலும் அவசியம் தியானிக்க வேண்டும்.

அகண்ட அண்டத்தில் வரும் விஷத் தன்மைகளையும் அகஸ்தியன் ஒளியாக மாற்றியது போன்று
1.கருவில் வளரும் இந்தக் குழந்தை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்றும்
2.உலக இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்றும் குடும்பத்தில் உள்ளோர் இதைச் செயல்படுத்துங்கள்.

அதிகாலை ஒரு பத்து நிமிடமாவது இதை எடுத்துச் செயல்படுத்துங்கள். அகஸ்தியனின் உணர்வுகள் அங்கே விளையும். குடும்பத்தில் உள்ள சாப அலைகள் தீய அலைகள் பாவ அலைகள் அனைத்தும் நீங்கும் ஒரு தெளிவான நிலையை உருவாக்க முடியும்.
1.ஆயிரக்கணக்கான அகஸ்தியர்களை நாம் உருவாக்குதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் தான் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீள முடியும்.

ஏனென்றால் விஞ்ஞானிகள் கடலில் உள்ள மணலில் இருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து செயற்கையில் கதிரியக்கப் போறிகளை உண்டாக்கி இந்த பூமியில் அதிகமாகப் பரவச் செய்துவிட்டனர்.

இயற்கையாக 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் பூமிக்குள் பரவிக் காற்று மண்டலத்தில் மோதிய பின் தூசிகளாக மாறும்போது… விஞ்ஞானத்தில் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளில் அது மோதிய பின் எதிர்நிலையாக மாறிக் கடும் சூறாவளியாக உருவாகி… எல்லாவற்றையும் நாசம் அடையச் செய்து கொண்டிருக்கின்றது.

1.விஞ்ஞானத்தில் எவ்வளவு வளர்ச்சியாகி இருந்தாலும் இதை தவிர்க்க முடியாத… தடுக்க முடியாத நிலைகள் ஆகிக் கொண்டு இருக்கின்றது.
2.அமெரிக்காவில் இத்தகைய நிலைகள் அதிகமாகப் பரவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இதெல்லாம் விஞ்ஞான அறிவிற்கு அப்பாற்பட்ட நிலை. இருந்தாலும் நடந்த பின் என்ன… ஏது…? என்று கண்டுபிடிக்கலாம். ஆனால் மெய்ஞானிகள் இதையெல்லாம் அன்றே சொல்லி உள்ளார்கள்.

ஆக… இந்த மனித வாழ்க்கையில் நாம் குறுகிய காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்பதை உணர்ந்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.அதனின் வலு கூடினால் நாம் மேலே சொன்ன தீமையிலிருந்து விடுபட முடியும்.

எல்லோரும் அந்த அருள் பெற வேண்டும் என்ற உணர்வைக் கூட்டுங்கள். உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். எதைச் சொன்னாலும் செய்தாலும் இந்த உடலுக்குள் ஒற்றுமை வேண்டும். ஏனென்றால் மகாபாரதப் போர் எல்லா உடல்களிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

வாழ்க்கையில் அருளைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்… மெய்ப் பொருளைக் காணுங்கள்.

காற்றிலே இருக்கிறது... எந்த அளவுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பெருக்குகின்றீர்களோ அதன் வலிமை கூடும்.

“பிறவி இல்லா நிலை அடைய இது தான் சுருக்கமான வழி...!