ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 21, 2021

பூமியைச் சமப்படுத்திய “அகஸ்தியன் உணர்வுகள் தான்” இன்று தேவைப்படுகின்றது

 

இன்றைய உலகம் மிகவும் துரித நிலைகள் கொண்டு மாற்றமாகிக் கொண்டே உள்ளது.

மனிதனுக்கு மனிதன் காட்டு விலங்குகள் எப்படி ஒன்றுக்கொன்று அஞ்சி வாழ்கின்றதோ இதைப் போன்றுதான் கிராமந்தோறும்… ஊர் தோறும்… நகரம் தோறும்… ஒவ்வொரு நொடிக்கும் அஞ்சி வாழும் தன்மை வந்து விட்டது.

பின் தொழிலை எப்படி நீங்கள் பார்ப்பது…? கிடைப்பதைத் தட்டிப் பறித்து உணவாக உட்கொள்ளும் இந்த உணர்ச்சியின் தன்மை வளர்ந்து விட்டது.

இதைப் போன்று நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்…
1.காற்று மண்டலத்தில் கலந்துள்ள அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நாம் தியானித்து
2.இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கி
3.அத்தகைய மூச்சலைகளைப் பெருக்குவோம் என்றால் சிந்திக்கும் மனிதர்கள் உருவாவார்கள்.

ஆகவே தீமையிலிருந்து மீட்டிடும் அருள் சக்திகளை நமக்குள் உருவாக்க முடியும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடிவதில்லை. அது அறுந்து விடுகின்றது. ஆனால் பல நூல்களை இணைத்துக் கனமான… கடினமான பொருளையும் தூக்க முடிகின்றது.

கதிரியக்கப் பொறியின் உணர்வுகளை… அந்த அழுத்தத்தை அதிகமாகச் சேர்க்கும் பொழுது இராக்கெட்டை விண்ணில் உந்திச் செலுத்துகின்றான் விஞ்ஞானி. அது சிறுதுளி என்று இருக்கும் பொழுது ஒரு இயந்திரத்தைத் தான் இயக்க முடிகின்றது

1.அத்தகைய உந்து விசையின் உணர்வுகள் வலு கொண்டு வருவது போல
2.நமது உணர்வுகளும் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
3.உந்துதலின் தன்மையை அதிகமாக எடுத்துச் செலுத்தினால்
4.அது தீமை என்ற நிலைகளைக் கலைக்கவும்… மோதலில் இதைக் கருக்கவும் செய்யும்.

ஆகவே உங்களில் இதைப் பக்குவப்படுத்தி இந்த அருள் உணர்வின் தன்மை வளரச் செய்து கொண்டால் பூமியில் வரும் தீமைகளை அகற்ற முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்து கொள்ள வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால் தான் அது முடியும்.

1.இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் எதிர் நிலையான உணர்வுகளை… (அந்தத் தூசிகளை)
2.மின்னல்களைக் கவர்ந்து தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது துருவ நட்சத்திரம்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் நுகர்ந்தால் நமக்குள் வரும் விஷத் தன்மைகளை மாற்றி விட்டு
1.நமக்குள் அறிவின் ஞானமாக வளரச் செய்யும்… உயிருடன் ஒன்றி வாழச் செய்யும்
2.இதையெல்லாம் உங்கள் மனதில் தெளிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்ததாக மாறும்
4.வாழ்க்கையில் வரும் எத்தகைய பகைமையான உணர்வுகளும் உங்களைச் சாடாது
5.பகைமை உணர்வு என்று தாக்கும் உணர்வை உங்களால் அறியவும் முடியும்
6.பகைமையை நீக்கும் அறிவின் வளர்ச்சியும் உங்களுக்குள் வளரும்

இதை வளரச் செய்வதற்கு நமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்களிலே இதைப் பதிவாக்கும் போது…
1.என்னால் என்னை அறியச் செய்யும் சக்தியாக
2.குரு அருள் தன்மை கொண்டு நான் என்னை அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் இந்த உலகிலே வாழும் நீங்கள்… சந்தர்ப்பவசத்தால் நீங்கள் நுகரும் உணர்வுகள்
1.உங்களைத் தவறான வழிக்கு அது அழைத்துச் சென்றாலும்
2.உயிரான ஈசனை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தை இணைத்தால்
3.தவறின் பாதையில் இருந்து அது திசை திருப்பி
4.உங்களை அருள் வழியில் அழைத்துச் செல்ல இந்த உணர்வின் தன்மை உதவும்.

ஏனென்றால் இத்தகைய நிலைகள் “இன்று” தேவைப்படுகின்றது. அதை நீங்கள் பெறுவதற்குண்டான உணர்வைத்தான் இப்பொழுது இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.