ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2021

உயிரைப் போன்று ஒளியின் ஸ்வரூபமாக நாம் ஆக வேண்டும்

 

ஓ...ம் ஈஸ்வரா குருதேவா...! கருணைஸ்வரூபா... என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா...! என்று பாடுகின்றோம்.

நம் உயிர் ஒளியாக இருந்து நாம் கவர்ந்த உணர்வினை (சுவாசித்தது) எல்லாம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.

ஒரு விளக்கைப் போட்டு அதில் எந்த வர்ணங்களை இடுகின்றோமோ (பூசுகின்றோமோ) அந்த வர்ணம் தான் வெளிச்சமாகத் தெரியும்.

வெளிச்சமாகக் காட்டும் போது நிறம் என்ற நிலைகளை மாற்றி விட்டால்... ஒளி வெண்மையாகத் தான் தெரியும். ஆக அப்படி வெள்ளையாக இருப்பதைப் போன்று எங்கள் மனம் தூய்மையாக வேண்டும்.

நீ எப்படி ஒளியாக இருந்து தூய்மை ஆக்குகின்றாயோ அதைப்போல எனது உணர்வுகளும் அதே நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் ஓ...ம் ஈஸ்வரா குருதேவா... கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்ட அருள்வாய்...! என்று உயிரிடம் வேண்டுகின்றோம்.

1.நீ எப்படி அந்த வெளிச்சமாக இருக்கின்றாயோ அதே போல
2.என் எண்ணம் பிறருக்குச் சொல்லப்படும் பொழுது வெளிச்சமாகி
3.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவும்
4.நல்ல உணர்வுகள் பெறவும்... தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடவும் இது உதவ வேண்டும்.

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால் இந்த உணர்வின் தன்மை உங்கள் செவிகளில் பட்டு அது ஆட்சி புரியும்.

1.நான் (ஞானகுரு) எதை எண்ணுகின்றோமோ அதுதான் என்னை ஆட்சி புரிகின்றது...
2.அப்பொழுது ஆட்சி புரிவது எது...? என்னுடைய எண்ணம்..!
3.ஆட்சி புரிய வைப்பது எது...! நமது உயிர்.

இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகளை இயக்கி நாம் எண்ணிய உணர்ச்சி நம்மை இயக்குகின்றது. ஆனால் அதை இயக்கச் செய்வது நமது உயிர் தான்.

1.இருள் என்ற நிலைகள் வரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது... சொல்லும் செயலும் இருண்டு விடுகின்றது
2.அதைக் கேட்போர் உணர்வுகளும் இருண்டு விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் மாற்றுவதற்கு நீ எப்படி வெளிச்சமாக இருக்கின்றாயோ அதே போல் என் சொல் பிறரை அந்த வெளிச்சமான நிலைக்குத் தெளிந்த நிலைகள் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ உதவ வேண்டும். கருணையுடன் என்னை நீ ஏற்றுக் கொள்வாய்...!

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா... குருதேவா...! என்னை ஆட்கொண்டருள்வாய்.

ஆதிசக்தி என்பது விஷம்...!
1.ஆதியிலே அந்த விஷம் தாக்கித்தான் வெப்பமாகின்றது (நெருப்பு)
2.அந்த வெப்பத்தின் தன்மை தான் வெளிச்சமாகின்றது
3.ஆக அந்த உணர்வின் தன்மை இயக்கியது விஷம் தான்.

இப்போதும் நம் உயிரின் தன்மை வெப்பம் ஆவதற்குக் காரணமே அந்த விஷம் தான். விஷத்தின் தன்மை தாக்கப்பட்டுத் துடிக்கும் போது தான் வெப்பம் ஏற்படுகின்றது. வெப்பமாகும்போது ஈர்க்கும் காந்தம் வருகின்றது.

ஆகவே இந்த வழியில் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா...! அந்த ஆதிசக்தியின் இயக்கத்தின் தொடர் கொண்டு அந்த அருள் பெற்று நீ இன்று என்னை உருவாக்குகின்றாய்.

கருணைஸ்வரூபா...! என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா...!

1.நஞ்சை எப்படி நீ ஒளி ஆக்கினாயோ அது ஒளியாக ஆனதோ அதே போல
2.இருளை நீக்கி ஒளி என்ற அந்த உணர்வுகளை நான் பெற வேண்டும்
3.அந்தக் கருணை நான் பெற வேண்டும்
4.நீ இருக்கும் அந்த ஒளியின் ஸ்வரூபமாக நான் ஆக வேண்டும் என்பது தான் இந்தப் பாடலின் நோக்கம்.