ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 3, 2020

நான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும்


குருநாதர் எனக்கு அருள் கொடுத்திருக்கின்றார்... எல்லாம் நடக்கின்றது...! என்ற நிலையில் இரு... நான் பார்க்கின்றேன்..! என்ற அகந்தை கொண்டு
1.ஒருவனைத் தாக்க நான் எண்ணினால்
2.அந்த உணர்வின் தன்மை எனக்குள் பெருகிவிட்டால்
3,அந்த அகந்தை என்னை அழித்துவிடும்.
4.குரு அருள் எனக்குள் மடிந்துவிடும்.

ஆகவே இதைப் போன்ற தீமைகள் என்றுமே நமக்குள் புகாது துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெருக்கிப் பழக வேண்டும். இந்த உடலுக்குப் பின் எது என்ற நிலை மிகவும் முக்கியமானது.

நான் தியானம் செய்தேன்... என் உடம்புக்குச் சரியில்லை...! நான் தியானம் செய்தேன்... என் தொழில் கெட்டுப் போய் விட்டது..! என்று சொன்னால் என்ன அர்த்தம்...?

இதைத் திருத்தினால்... இந்தத் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அதை வலுவாக்கிக் கொண்டால் தான் நம் வாழ்க்கையைச் சீராக வழிப்படுத்தும் எண்ணமே நமக்குள் வரும்.

அது மட்டுமல்ல...! ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளறிந்து செயல்படும் உணர்வுகளும் வாழ்க்கையில் நம்மைப் பண்புடன் வாழச் செய்யும் உணர்வுகளும் நமக்குள் வளரும்.

சந்தர்ப்பத்தால் தொழில் நஷ்டமாகி விட்டது என்றால்
1.அந்த நஷ்டத்தை மீட்கும் சக்தியை எண்ணு எடுப்பதற்கு மாறாக
2.வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது... நம் செயலும் குறுகுகின்றது.
3.ஒரு நல்ல பொருளைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் நம் சிந்தனையும் வீழ்ந்து விடுகின்றது.

இதைப்போன்ற துயர்களில் இருந்தெல்லாம் விடுபட்டு... பேரருள் என்ற உணர்வினை வளர்த்திடும் அரும் பெரும் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும் என்பதனை நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.

1.ஏதோ சாமி (ஞானகுரு) சொல்கின்றார்...
2.சாமி தான் நமக்குச் சக்தி கொடுக்கின்றார் என்று நினைக்கக் கூடாது.

ஏனென்றால் நான் அந்த அருளைப் பெறுகின்றேன். அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கின்றேன்.

செவி வழி நீங்கள் கேட்கின்றீர்கள். இதைப் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பதிவாக்கும் பொழுது அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் “அதை நீங்கள் நிச்சயம் பெற முடியும்...!”

உதாரணமாக ஒருவன் நம்மை ஏசினால்
1,என்னை இப்படி ஏசினான்... ஏசினான்... ஏசினான்... என்று
2.அந்த உணர்வினை திரும்பத் திரும்ப எண்ணும்போது அந்த உணர்ச்சிகள் வலுவாகின்றது.

பின் நாம் எதைச் செய்கின்றோம்...? கோபம் என்ற உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அவரைத் தாக்கும் உணர்வுகளே வலுவாகின்றது.

அவன் சொன்ன உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
1.நாம் தொலைய வேண்டும் என்று அவன் எண்ணுகின்றான்.
2.அதே உணர்வு நமக்குள் வந்தபின் நம்மிடமுள்ள நல்ல எண்ணங்களத் தொலைத்தே விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட... தீமை என்ற உணர்வுகள் புகாது... அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் பெற்று பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதைப் படிப்போர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுங்கள்... பேரொளியாக மாறுங்கள்.