ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 12, 2020

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக உருவான மரபணுவை” நாம் எல்லோரும் பெற வேண்டும்


தீமைகளை எல்லாம் அகற்றி... பேரொளியாக மாற்றிய அகஸ்தியன் துருவனாகி... துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த மரபின் அணுவை நாம் ஒவ்வொருவரும் நுகர்ந்து பழக வேண்டும்

1.அந்த மரபணுவின் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கி
2.பகைமையை மாற்றிப் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும் என்று
3.ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

இந்தப் பேருண்மையைத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டினான் அன்று அகஸ்தியன். அந்த மரபணுக்களை நாம் எல்லோருமே பெற முடியும்.

இதை நிலை பெறச் செய்வதற்குத் தான் “துருவ தியானம்” என்றும்  “பௌர்ணமி தியானம்” என்றும் வழிப்படுத்தியுள்ளோம்.

அந்தத் தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து  நஞ்சினைக் கரைத்துவிட்டு அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் “உயிர்” என்ற நிலைகள்... “ஒளி” என்ற உணர்வின் அறிவாகத் தெரிந்து கொண்ட பின் தீமைகளை எல்லாம் கரைத்துவிட்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலையை அங்கே பெறச் செய்ய வேண்டும்.

நம் மூதாதையர்கள் அங்கே ஒளியாகச் செல்லப்படும்போது “நம்மைக் காத்திட வேண்டும்...” என்ற அந்த மரபணு நம் தீமைகளை எல்லாம் அகற்றி நம்மைக் காக்கும்.

1.அதே மரபணுவை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு நாம் ஏங்கும் போது
2.பேரருள் பேரொளி என்று பாசத்துடன் பற்றுடன் வளர்ந்த அந்த உணர்வுகளை
3.நாம் எளிதில் பெற முடியும்... அந்தத் தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால்... சாங்கிய சாஸ்திரப்படி உடலை விட்டுப் பிரிந்தவர்கள் சுட்ட சாம்பலைக் கரைத்துவிட்டு “மோட்சத்திற்கு அனுப்பிவிட்டேன்” என்று விநாயகர் கோவில் போய் “மோட்சத் தீபம்” காட்டுவதற்கல்ல.

ஒளியான மரபணுக்களைப் பெறுவதற்குத் தான் அன்று விநாயகத் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள். மனிதனாக வாழும் போது சந்தர்ப்பத்தால் வந்த பகைமை உணர்வுகளை அகற்றிவிட்டு ஒளி என்று உணர்வினை உருவாக்கி... ஒளியின் சரீரமாக நிலை கொண்டுள்ளான் அகஸ்தியன் “துருவ நட்சத்திரமாக..”

அதை நாம் அனைவரும் இதை எளிதில் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெற முடியும். மனிதனுக்குள் வரும் இருளை அகற்ற முடியும். மெய்ப் பொருள் காண முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உபதேச வாயிலாக ஏதோ சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்...!

1.உணர்வின் அழுத்தத்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரச் செய்து
2.அந்த மகரிஷிகள் அருளாற்றல்களை உங்களுக்குள் இணையச் செய்கின்றோம்.

அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால்... நினைவு கொண்டு மீண்டும் மீண்டும் அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் வரும் பகைமையை மாற்றி பேரருள் என்ற உணர்வை ஊட்டி... “இனி பிறவியில்லை” என்ற நிலையை அடையலாம்.
1.குடும்பத்தில் பற்றும் பண்பும் ஓங்கி வளர்க்கச் செய்யலாம்.
2.பரிவுடன் ஒன்றி வாழச் செய்யலாம்
3.பரிவான நிலைகளில் வாழவும் முடியும்
4.பரிவால் வரும் தீமைகளை அகற்றும் வல்லமையும் பெறுகின்றீர்.