ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2020

தியான வழியைக் கடைப்பிடிப்போர் சீர்படுத்திக் கொள்ள வேண்டிய முக்கியமான உணர்வுகள்


தியான வழியைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும்போது சுற்றி இருப்பவர்களுடைய தவறான செயலைக் கண்டு வேதனைப்படுகின்றனர்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் திருந்த வேண்டுமென்ற எண்ணங்களை எண்ணிச் செய்வதில்லை.

1.தான் உண்மைகளை எல்லாம் அறிந்தும்
2.தான் சொல்லியும் கேட்காமல் பிழைகளைத் தான் செய்கின்றார்கள் என்ற
3.வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர
4.தவறு செய்வோர் உண்மைகளை அறிய வேண்டும்… மூலக்கூறுகளை அறிய வேண்டும்…
5.மூலத்தை அறிந்து சரியான பாதையில் அவர்கள் செயல்படவேண்டும் என்ற
6.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா...? என்றால் இல்லை...!

காரணம்... சாங்கிய உணர்வுகள் வளர்த்துக் கொண்ட வழியின் துணை கொண்டே
1.பிறர் செய்யும் செயல்களைக் குறைவாக எண்ணி
2.குறை... தவறு... என்ற நிலைகள் கொண்டு
3.தன்னைப் பலவீனப்படுத்தும் வேதனை உணர்வைத் தான் வளர்க்க முடிகின்றது.

ஆனால் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேசித்து அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மையை உங்களுக்குத் தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றோம்.

அதனை வலுக் கொண்டு எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றோம்.

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் வேதனை என்ற நிலைகளாக உங்களுக்குள் புகுந்து அது தீமை விளைவிக்காதபடி பாதுகாக்க “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தையும் முறைப்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இத்தனையும் வாக்காக உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். பதிந்த உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் நினைவு கொள்ளும்போது
1.உங்களை அறியாது வந்த தீமைகளை நீங்களே அகற்ற முடியும் என்ற
2.தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கவும் செய்கிறோம்.

இத்தனையும் யாம் செய்தாலும் அவரவர்கள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலுப்பெற்ற நிலைகள் கொண்டு இயங்கி
1.தன்னைச் சீர்படுத்தும் நிலையே மாறி
2.தியான வழியில் உள்ளோரும் இதிலே சிக்குண்டு
3.மீளும் நிலையே இல்லாது தவிக்கும் பலர் உண்டு.

“ஒரு சிலரே” இதனின் உணர்வை உணர்ந்து... அறிந்து...
1.தீமைகளை அகற்றிடும் உணர்வினை வலுப் பெற்று
2.தன்னுள் தீமை நாடா நிலையும்
3.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாதபடி சொல்வாக்கு கொண்டு பதியச் செய்து
4.வளர்ந்து கொண்டுள்ள அப்படிப்பட்ட தியான வழி அன்பர்களும் உண்டு.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம்...? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பிறர் படும் கஷ்டமோ பிறர் செய்யும் குறைகளையோ அதை எல்லாம் நாம் முதலிலே தெரிந்து கொண்டோம்... அறிய முடிகின்றது. இருந்தாலும்...
1.இனி நாம் தெரிய வேண்டியது என்ன...? என்பதைத் தெளிந்து
2.இந்த வாழ்க்கையைப் புரிந்து இருள் சூழும் நிலைகளிலிருந்து விடுபட்டு
3.இருளைப் பிளந்து பொருள் காணும் உணர்வினை நமக்குள் வளர்த்து
4.என்றென்றும் மெய்ப் பொருளாக அந்தப் பொருள் கண்டுணரும் நிலையும்
5.நஞ்சினை பிளந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் சக்திகளை நமக்குள் வளர்க்க முடியும்... வளர்க்க வேண்டும்...!

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே இதை எல்லாம் தெளிவாக்குகின்றோம்.