ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 1, 2020

வெறும் கூட்டம் தேவையில்லை…! அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை…!


தியான வழியில் இருக்கக்கூடிய அன்பர்கள் காலை துருவ தியானத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு கணவன் மனைவி ஒன்றிணைந்து வாழ்ந்திட வேண்டும். குடும்பத்தில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளை மாற்றிடல் வேண்டும்

ஏனென்றால் அந்த நேரம் தான் அந்தத் துருவ மகரிஷிகளின் அலைகள் இங்கே அடர்த்தியாகப் படர்கின்றது. யாம் உங்களுக்குள் பதிவு செய்த எண்ணங்கள் கொண்டு
1.நாங்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றல் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும்
3.கணவன் மனைவி இருவரும் நாங்கள் ஒன்றி வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று
4.ஒருவருக்கொருவர் இந்த உணர்வின் தன்மைகளை வளர்த்திடல் வேண்டும்.

இருவரும் இப்படி எண்ணினால் தன் குடும்பத்தில் வரும் தீமைகளை நீக்கும் உணர்வின் உபாயங்கள் அங்கே வரும். அதனின் துணை கொண்டு வாழ்ந்தால் இன்றைய நஞ்சு உலக நிலைகளிலிருந்து தன்னை மீட்டிடும் நிலைகள் வளரும்

ஏனென்றால்…
1.இந்த உலகம் எங்கேயோ போய்க் கொண்டு உள்ளது
2.மனித உருவையே உருமாற்றும் நிலைகளாக
3.காற்று மண்டலம் நச்சுத் தன்மையாகி எங்கெங்கோ அழைத்துச் செல்லுகின்றது.

அகஸ்தியன் உணர்வு கொண்டு அவன் அரவணைப்பில் விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருக்கும் அந்த அருள் ஞானிகளுடைய உணர்வுடன் ஒன்றி அந்தப் பேரானந்த நிலைகள் பெறும் தகுதிகளுக்குக் கணவனும் மனைவியும் நீங்கள் இந்த நிலைகள் பெற வேண்டும். முதலில் இந்த குடும்பத்தின் நிலைகள் கொண்டு இதை செயல்படுத்துதல் வேண்டும்.

ஆனால் இன்று பெரும் பகுதி நாம் பார்ப்பவர்கள் தியானத்தைச் செய்து கொண்டிருக்கின்றோம் என்ற நிலையில் உள்ளார்கள். இருந்தாலும்  சில இடங்களில் பார்க்கப் போனால் ஒன்றுக்கொன்று “கீரியும் பாம்பையும்…” போலத்தான் உள்ளார்கள்.

எம்மைப் (ஞானகுரு) பார்க்கின்றார்கள்… கேட்கின்றார்கள்… ஆசிர்வாதம் கேட்கின்றார்கள். கேட்பதில் பயன் என்ன இருக்கிறது…? எதற்காக வந்தோமோ நாம் அதைப் பெற வேண்டுமா இல்லையா…?

1.எனக்குக் கூட்டம் தேவை இல்லை
2.அருள் ஞானம் பெறும் அருள் ஞானிகள்ளின் அமைப்பு தான் எனக்குத் தேவை.
3.அந்த அருள் ஞானத்தை வளர்ப்போர்கள் தான் தேவை
4.ஞானத்தைக் கூட்டிக் கூட்டிப் பெருக்கிக் கொள்வோர்கள் தான் தேவை
5.என்னைப் போற்றித் துதிப்போர் தேவையில்லை.
.என்னை போற்றிப் புகழ்வதில் பயனில்லை.

ஆனால் போற்றுதல் எவ்வாறு இருக்க வேண்டும்…?

அந்த மகரிஷிகளின் அருள் ஞானத்தைத் தனக்குள் ஊட்டி வளர்த்து… அந்த உணர்வின் தன்மை கொண்டு… “உலகம் போற்றும் உத்தம ஞானிகளாக நீங்கள் வர வேண்டும்…”

அது தான் நீங்கள் என்னைப் போற்றுவதாகும்…!

இல்லையெனில் என்னைத் தூற்றுவதாகவும் குருநாதரைத் தூற்றுவதாகவும் தான் ஆகுமே தவிர இதில் பயனில்லை.