ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2020

ஆறு அறிவு கொண்ட மனிதன் தன் வளர்ச்சியில் பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்…! என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது


நம் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிய பின் அப்புறம் எட்டாவது நிலை… அதாவது நமக்குள் எடுத்துக் கொண்ட சக்தி “அஷ்டதிக்கு பாலகர்கள்..”

ஏழாவது அறிவைக் கொண்டு கெட்டதை நீக்கி மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது எட்டாவது நிலையை அடைகின்றது.

எந்தத் திசையிலிருந்தும் எத்தகைய நிலை இருந்தாலும் தன்னை அறியாதபடி வரும் தீமைகளை அகற்றும் தன்மை தான்..
1.அந்த அஷ்டதிக்கு பாலகர்கள் என்று சொல்லும் பொழுது
2.கோவிலிலே தெய்வத்தைக் காட்டும் பொழுது அந்தப் பாலகர்கள் தான்…
3.எட்டுத் திக்கிலிருந்தும் தெய்வத்தைக் காக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள்.

நமக்குள் இந்த எட்டாவது அறிவான நிலைகள் எட்டுத் திக்கிலிருந்து வரக்கூடிய கெட்டதுகளை நீக்கித் தன் உணர்வின் சத்தைக் காத்துக் கொள்கின்றது.

எப்படித் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் அதிலே கலந்துள்ள செம்பும் பித்தளையும் அது நீக்கி விடுகின்றதோ இதைப் போல் நாம் அடிக்கடி அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளிகளை எடுத்துச் சேர்க்கப்படும் பொழுது
1.நம் உணர்வின் மணம் தீயதை நாடாது
2.தனக்குள் அந்த ஒளியின் சரீரமாகக் காத்தருளும் சக்தி பெறுகின்றது.

அடுத்து ஒன்பதாவது நிலை உயிருடன் ஒன்றி “நவமி” நம் எண்ணத்தின் நிலைகள் இந்த உணர்வுகள் அனைத்தும் சொல்லின் தன்மையாக வரும் பொழுது ஒன்பதாவது நிலை அடைகின்றது.

இராமன் நவமியிலே பிறந்தான்… கண்ணன் அஷ்டமியிலே பிறந்தான்… என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அஷ்டமி என்பது கோள்கள் அது இருள் சூழ்ந்த நிலைகள்.

அதாவது இருளான இந்த உடல் கொண்டு
1.எண்ணத்தால் கண்களின் தன்மை வளர்ந்தது.
2.எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்ளும் நிலை.
3.பின் உயிரின் நிலைகள் கொண்டு இந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகின்றது.

உதாரணமாக விண்வெளியின் நிலைகள் மையமாக இருந்தாலும் அதிலிருந்து தோன்றிய நட்சத்திரங்கள் பேரண்டத்திலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை மாய்த்துவிட்டு தனக்குகந்த நிலைகளை உணவாக எடுத்துக் கொண்டு பிரபஞ்சத்திற்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றது.

அந்த உணர்வின் சக்தியைக் கோள்கள் நுகர்ந்து கொள்கிறது. கோள்கள் கவர்ந்ததைச் சூரியன் கவர்ந்து அந்த உணர்வின் சக்தியை இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் சக்தியாக மாற்றுகின்றது.

எட்டுக் கோளின் தன்மை கொண்டு தான் சூரியன் ஒளியாக மாறுகின்றது. அதைப் போல் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் அனைத்தும் நம் உடல் கோளாக மாறுகின்றது.

ஆக… ஒவ்வொரு உணர்வின் இயக்கமாகத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை நம் உடலாக வளர்த்துத் தன் நிலை அடைகின்றது என்பதைக் காட்டிய பின் எண்ணத்தின் நிலைகள் ஒன்பதாவது நிலை அடைய வேண்டும்.

உயிருடன் ஒன்றிய நிலைகள் ஒன்பதாவதாக ஆகப்படும் பொழுது உடலை விட்டுச் சென்ற பின் எந்த ஆன்மாவும் நம்மை இழுக்காது.

1.எட்டு… தீயதின் நிலைகளை நீக்கி
2.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய ஒன்பதாவது… நிலையை அடையப்படும் பொழுது
3.உடலை விட்டுச் சென்ற பின் பத்தாவது… கல்கி அவதாரம் என்பது.

இந்த உடலிலிருந்து எட்டுத் திக்கில் இருந்து வருவதையும் காத்தது போல் இந்த உயிராத்மா உடலை விட்டு வெளியே போன பின் “கல்கி...!” இன்னோரு உடல் நம்மை இழுத்திடாதவண்ணம் தடுக்கும் நிலை தான் பத்து – தசாவதாரம்.

பத்தாவது அவதாரமாக உயிர் ஒளியாகச் செல்வதை அவ்வாறு காட்டினார்கள். நாம் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.