ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2020

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?


கையில் காசு இருந்தால் அடுத்தவர்களுக்குத் தாரளமாகக் கொடுத்து உதவி செய்கின்றோம்.
1.ஆனாலும் அவர்கள் சொல்லும் வேதனைகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
2.இதைத் துடைக்கத் தெரியவில்லை… துடைக்க முற்படுவதும் இல்லை.

 நான் எல்லாம் செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…! என்ற நிலை தான் கடைசியில் வருகின்றது.

ஆலயங்களுக்குச் செல்லப்படும் பொழுது இல்லாதவருக்குத் தர்மம் இட்டால் அதைக் கண்டு தெய்வம் நம்மை மெச்சும்…! என்று எல்லாம் மதங்களுமே கூறுகின்றது.

ஆனால் அந்தத் தர்மத்தைச் செய்யும் பொழுது என்ன செய்கின்றோம்..?
1.அவன் பாவத்தின் எல்லையிலே இருக்கின்றான்..
2.பல தொல்லைகளுக்கு ஆளாகிய பின் அவனுக்கு இந்த உதவி கிடைத்தது… ஆ…ஹா…! என்று ஆசையில் நம்மைப் பார்க்கின்றான்.

அப்படி வெளிப்படும் அவனுடைய உணர்வுகளை நாம் பார்த்த பின் அவன் ஏங்கிப் பெறும் அந்த உணர்வை நாமும் பெறுகின்றோம்.

நாம் நல்லது தான் செய்தோம். ஆனாலும் அவனுடைய நிலைகள் இங்கேயும் வந்து விடுகின்றது. வந்த பின் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான் என்ற இந்த நிலைகளைத் தான் நாமும் சொல்வோம்.

ஆனால் நம்மை ஆளும் ஆண்டவன் யார்…? நம் உயிர் தான்.

பெரும் ஈகையுடனும் பண்புடனும் அந்த உணர்வுகளை எடுத்தோம். அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் வந்து விடுகின்றது.

ஒரு பலகாரத்தைச் சுடுகின்றோம். அதை மூடி வைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? மண் தூசி இவை எல்லாம் விழுகுமா இல்லையா…?

1.நான் நன்றாகத் தானே பலகாரம் சுட்டேன்…!
2.சாப்பிடும் பொழுது நறு..மொறு நறு..மொறு…! என்று இருக்கின்றது என்று சொன்னால்
3.”மூடி வைக்கவில்லை…” என்றால் இந்த நிலை வரத் தானே செய்யும்…!

இதைப் போன்று தான் நமக்குள் பாதுகாப்பான நிலைகள் இல்லை என்றால் நம் ஆன்மா அசுத்தமாகி விடுகின்றது. அப்பொழுது மற்ற தீமை செய்யும் உணர்வுகள் உள் சென்று நமக்குள் கடும் விளைவுகளை உண்டாக்கும்.

ஆகவே நம் ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றால் “நாம் என்ன செய்யவேண்டும்…?” என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தாய் கருவிலே உருவான ஒரு குழந்தைக்குக் கருவிலேயே நோயாக ஆனால் அவன் பிறந்த பின் அதைப் பார்க்கும் சுற்றுப் புறச் சூழலில் உள்ளோரும் அந்தக் குழந்தையை உற்று நோக்கும் பொழுது இவனில் விளைந்த நோயை அவர்களும் கொஞ்ச கொஞ்சமாகப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

நுகர்ந்தவர்கள் உடலில் எல்லாம் அந்த நோய் சிறிது சிறிதாக வரும்.  

நீங்கள் பார்க்கலாம்…!
1.சர்க்கரைச் சத்து தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
2.வாத நோய் தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…!
3.இரத்தக் கொதிப்பு தாய் வழியில் வந்தது… தந்தை வழியில் வந்தது…! என்று
4.இன்று சர்வ சாதரணமாகச் சொல்வார்கள்.

இது எல்லாம் இந்த உணர்வின் பேச்சின் தொடரைக் கேட்கும் பொழுது அது கருவுற்றிருக்கும் குழந்தைகளுக்கு இந்த உணர்வுகள் சேர்ந்து விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபத்தின் நிலையும்… அதிகமாகச் செல்வங்கள் சம்பாரிக்கும் பொழுதும்… குடும்பத்தில் பற்றுகள் குறையப்படும் பொழுதும்… என்னை மோசம் செய்தான் பாவி…! என்ற நிலைகள் வரும் பொழுதும்… இந்த உணர்வுகளை அவர்களும் நுகர்கின்றனர். அவர் சொல்வதை மற்றவரும் நுகர்கின்றனர்.

நுகர்ந்த பின் அங்கேயும் இதே மாதிரி நோய்கள் வரத் தொடங்குகிறது. இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.