ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2012

கணவனும் மனைவியும் சிவசக்தியின் ஸ்வரூபமாகும் வழி

கணவனும் மனைவியும் சிவசக்தியின் ஸ்வரூபமாகும் வழி

இப்பொழுது யாம் பேசுகின்றோம் என்று எண்ண வேண்டாம். இவை அனைத்துமே, அன்று கோலமாமகரிஷி, எப்படி ஆதிசங்கரருடைய உடலிலிருந்து வெளிப்படுத்தினாரோ, அதே உணர்வின் தன்மையை அவர்கள்தான் வெளிப்படுத்துகின்றார்கள். அந்த உணர்வின்  ஆற்றலைத்தான், யாம் உங்களுக்குள் இப்பொழுது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

ஆக, பாய்ச்சும் இந்த உணர்வினை, நீங்கள் துருவ தியானத்தின் நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யும் பொழுது, உங்கள் உடலில் இருக்கக்கூடிய, எத்தகைய நோயானாலும், எந்தக் கவலையானாலும், குடும்பத்தில் எந்தச் சிக்கல் இருந்தாலும் அது நிவர்த்தியாகும்.

நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, நாளை எல்லாம் நல்லதாக இருக்கவேண்டுமென்று நீங்கள் சொல்லி வாருங்கள். உங்களுக்குள் நல்லதாவதைப் பார்க்கலாம்.

ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து, உங்கள் வாழ்க்கையில் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்கப் பயன்படுத்துங்கள். மீண்டும் மீண்டும், இந்த வாக்கை, யாம் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம்.

அன்று ஆதிசங்கரர் தன் உணர்வின் தன்மையை, மற்றவர்கள் அறியாமையிலிருந்து விடுபட்டு, மெய் ஒளியின் தன்மை பெறவேண்டும் என்று, மெய் உணர்வைத் தனக்குள் வளர்த்து, உணர்த்தி, அதை வெளியே பரப்பிவிட்டு, இளமைப் பருவத்திலே விண் சென்றார்.

அந்த இளமைப் பருவத்தில் உணர்த்திய, உணர்வின் ஆற்றல், மிக்க ஆற்றல்” கொண்டது. ஆக, அந்த மகரிஷியின் அருள் சக்தியை, நீங்கள் எல்லோரும் பெறவேண்டும், என்ற ஆசையிலேதான் சொல்லுகின்றோம்.

ஆகவே, குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும் ஆத்ம சுத்தியை அவசியம் செய்ய வேண்டும். ஏனென்றால், இதைக் காட்டிலும் இன்னொரு சரீரம் பெறப் போவதில்லை. இந்தச் சரீரத்தில் இருந்தேதான், நாம் பெற வேண்டும்.

கணவனும் மனைவியும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று, கணவன், மனைவியை நினைக்க வேண்டும், மனைவி, கணவனை நினைக்க வேண்டும்.
இருவருடைய உணர்வின் நிலைகள், ஒரு நிலை கொண்டு,
சரியான முறையில் யாம் சொல்லும் தியானத்தைச் செய்து வந்தால்,
இதில் நீங்கள் சொர்க்கபூமியைக் காணலாம்.

ஒரு குடும்பத்திற்குள், கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான், அது சொர்க்கலோகம். ஆனால், கணவன் மனைவிக்குள் ஒவ்வொரு நிமிடமும், வேற்றுமை உணர்வு வந்தால், நரகலோகம்தான். ஆக, நாம் நரகலோகத்தை இந்த உடலுக்குள் சிருஷ்டிக்கின்றோம். அடுத்து, இருள் சூழ்ந்த பிறவிக்குப் போகின்றோம்.

யாம் இப்பொழுது ஏற்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில், அருள் உணர்வைப் பெற்றபின், குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு, யாம் கொடுக்கும், இந்த வாக்கின் நிலைகளைப் பயன்படுத்தி, அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தவறு செய்யவில்லை என்றாலும், முந்தைய சாப நிலைகளிலிருந்து வரும், முன்னோர்களின் உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு.

எண்ணங்களை, நல்ல குணங்களைச் சிதறடிக்கும் அந்த உணர்வுகளிலிருந்து, உங்களை நீங்கள் மீட்டு, ஒவ்வொருவரும் மகழ்ச்சியின் தன்மை பெறவேண்டுமென்று, யாம் “எல்லா மகரிஷிகளையும்” வேண்டி, அந்த அருள் ஒளியைக் கேட்கின்றோம்.

யாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற்று, இந்த உணர்வின் தன்மை, எமக்கும் சேர்ந்ததனாலே, எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை நீங்கள் பெற வேண்டுமென்ற ஆசையினால், யாம் இந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் செலுத்தி, பதியச் செய்கின்றோம்.

இதன்படி நீங்கள் செய்தீர்களென்றால், எல்லா மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று, உங்களுக்குள் இந்தச் சொர்க்கபூமியை, மகிழ்ச்சியான எண்ணங்களைப் பார்க்கலாம். உங்கள் பேச்சும், மூச்சும், கணவரிடத்தில்/மனைவியிடத்தில் மகிழ்ச்சியை ஊட்டும். அவருடைய உணர்வும், உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.

ஆக, இரண்டு சரீரமும் ஒன்று சேர்ந்து, இந்த உணர்விலே சொர்க்கத்தைக் காண்பீர்களென்றால், இந்த உடலை விட்டுச் சென்றபின், உங்கள்  உயிராத்மாக்கள் இரண்டுமே, விண் செல்லும்.
துருவ நட்சத்திரம், சிவசக்தியின் ஸ்வரூபம்” கொண்டுதான், துருவமாக இருக்கின்றார்கள்.

ஆக, இதைப் போன்று, என்றும் பதினாறு என்ற நிலைகளை நீங்கள் அனைவரும் பெறலாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எமது அருளும், உங்கள் அனைவருக்கும் உறுதுணையாக இருக்கும்.