ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2012

பிறரை உயர்த்திட வாழும் மகரிஷிகளின் நிலை

1. கலாச்சாரம் எப்படித் தோன்றுகின்றது
நாம் நமது வாழ்க்கையில், இந்துக் கலாச்சாரம் என்ற நிலைகளில் வாழ்ந்து வந்தவர்கள். இந்து மதத்தில் சிவ கலாச்சாரம், விஷ்ணு கலாச்சாரம், தேவி கலாச்சாரம் என்ற நிலைகளில் கலாச்சாரங்களை அடிப்படையாக வைத்து, ஆச்சாரங்களை வைத்து, இயங்கி வந்திருக்கின்றோம், இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

இன்று மட்டும் நாம் இதைச் செய்யவில்லை. நம் தாய் கருவில் இருக்கும் பொழுதே, அதிகமாக இந்தக் கலாச்சர அடிப்படையில்தான் ஆச்சார அனுஷ்டானங்களைச் செய்திருக்கின்றார்கள். தாய் கருவிலேயே, இந்த உணர்வு வந்துவிடுகின்றது.

உயிரினங்களை எடுத்துக் கொண்டால், குளவிக்கு, புழுவை எடுத்து, தன் இனத்தை விருத்தி செய் என்று யாரும் சொல்லவில்லை. மிருகங்களுக்கு, பிறந்தவுடன் தாய்ப் பால் கொடுக்க வேண்டுமென்று, யாரும் சொலவில்லை.

ஆனால், மனிதனாகும் பொழுதுதான், அதன் தொடரைக் காண்பித்துக் கொடுக்கின்றோம். மற்ற உயிரினங்கள் உணர்வின் தொடர் கொண்டுதான், அதை அறிந்து கொள்கின்றது.

உயிரினங்கள் அது தாய் உணர்வு எதுவோ,
வேறு சிந்தனைகள் இல்லாததால்,
அந்த உணர்வுகள் ஒருங்கிணைந்து,
அதனதன் பாதுகாப்புக்கு உண்டான உணர்வுகள் 
சிறு குட்டியிலேயே வந்துவிடுகின்றது.

வீட்டில் வளரும் மாடு கன்றுகள், தாராளமாக எங்கும் போகும். அந்த மாட்டைக் காட்டில் விட்டுவிட்டால், அந்தத் தாய் எப்படி மறைந்திருந்து வாழ்கின்றதோ, அதே மாதிரி அந்த மாடு, கன்று போட்டபின், மாடு மேய்ச்சலுக்குப் போனபின்பு, இது ஒரு புதரில்தான் ஒளிந்து கொள்கின்றது. இதெல்லாம் இயற்கையின் உணர்வுகள்,

இப்படி, அந்த உயிரினங்கள் எப்படித் தன்னைக் காத்துக் கொள்கின்றது என்பதை, காடுகளிலும், நாட்டுக்கும், காட்டுக்கும் உண்டான வித்தியாசத்தையும்,
காட்டுக்குள் இருக்கும் உயிரினங்கள் எப்படி இருக்கின்றது?
நாட்டிற்குள் வாழும் உயிரினங்கள் எப்படி இருக்கின்றது?
என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளத்தான், குருநாதர் எம்மைக் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார்.

ஆனால், காட்டில் வாழும் மனிதரானாலும், நாட்டில் வாழும் மனிதரானாலும், ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொரு கலாச்சாரங்களை உற்பத்தி செய்து கொண்ட நிலைகளில்தான் வாழுகின்றார்கள்.
2. கலாச்சாரம் எப்படி கடவுளை உருவாக்குகின்றது
காட்டுக்குள் வாழும் மனிதனும், அவர்கள் எண்ணிக் கொண்ட கடவுளும், அவர்களைக் காக்கும் கடவுளும், அவர்கள் எதைக் கடவுளாக, தன் எண்ணத்தில் பதிவு செய்தார்களோ, அந்தப் பதிவின் இயக்கத் தொடர்தான் அங்கே, கடவுளாக இயக்குகின்றது.

உலகிலேயே, கலாச்சாரங்கள் நிறைந்தது நமது இந்திய மண்ணில்தான். இங்குதான், எண்ணிலடங்காத கலாச்சாரங்கள் உண்டு. வட இந்தியாவில் ஒவ்வொரு இனத்திற்கும், ஒரு கலாச்சாரம். அந்த ஆச்சாரப்படிதான், செயல்படுத்துகின்றார்கள்.

அதே மாதிரி, தமிழ்நாட்டிலும், அந்தந்த இனத்திற்குரிய கலாச்சாரப்படித்தான் இயங்குகின்றார்கள். இவையனைத்தும், மனிதனை அந்த வழிகளில் ஒருங்கிணைத்து, இந்த மனித வாழ்க்கையில், “ஒன்று சேர்ந்து வாழக்காட்டிய நிலைதான்” அது.

இதெல்லாம் அரச காலங்களில், மதமாகக் காட்டி, மதத்திற்குள் சட்டங்கள் இயற்றியதை, மக்கள் அதை ஏற்றுக் கொண்டு, அந்த அரசன் வழிகளில் பதிவு செய்து கொண்டு, ஒரு மதமாக இயக்கினாலும், அதை ஒரு கலாச்சாரமாக்குகின்றார்கள்.

அரசன் வழியில், அவன் காட்டிய உணர்வுகளை,
என்னென்ன செய்ய வேண்டும்?
எப்படிச் செய்யவேண்டுமென்று,
அவன் பாடமாகச் செய்ததை நமக்குள் பதிவு செய்து,
அதுவே சில காலம் சென்றுவிட்டால்,
கடவுளாக இயங்கத் தொடங்கிவிடுகின்றது.
அவர்கள் காட்டிய கலாச்சாரங்கள்தான், கடவுளாகின்றது.
3. ஞானிகள் காட்டிய கலாச்சாரம்
யாம் காடுகளில் சுற்றும் பொழுது, எமக்கு குருநாதர் எதை எதையெல்லாம் உணர்த்தினாரோ, அவைகளை அதன்வழிதான் உங்களிடம் சொல்வது.

அவர் காட்டிய வழிகளில், அதைப் பின்பற்றிய அனைவரும், மகரிஷிகளைப் பின்பற்றியவர்கள். அனைவரும் கல்கி என்ற பிறவா நிலை அடைந்து, ஒளியின் சரீரமாக, இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால், கலாச்சாரப்படி, ஆச்சாரப்படி வாழ்ந்தாலும், நாமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றோம். இவர்களும் வாழ்கின்றார்கள். மகரிஷிகளும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

அவர்கள் இந்த உடலில் நஞ்சினை நீக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிறவா நிலையும், பிறிதொரு இருளை நீக்கி, ஒளியின் சரீரமாகப் பிறக்கும் நிலையில் அவருடைய உணர்வை நுகரப்படும் பொழுது, இருளிலிருந்து விடுபட்டு, ஒளியின் தன்மை பெற்று, வாழ்கையில் மகிழ்ந்திடும் நிலையும், இன்னொரு உடலுக்குள் புகுந்து, இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மை கொண்டு, மீண்டும் ஒரு உடல் பெறா நிலை பெற்றவர்கள்.
4. நாம் வாழும் இன்றைய கலாச்சாரம்
ஆனால், நாம் இந்தக் கலாச்சாரப்படி
எதையெல்லாம் எண்ணி வளர்த்துக் கொள்கின்றோமோ,
இந்தக் கலாச்சார முறைப்படி, மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்.

கலாச்சார முறைப்படி ஆசைகளை வளர்த்து, எந்தெந்த உணர்வுகளைத் தூண்டிவிட்டு இருக்கின்றார்களோ, அந்த உணர்வுகள் உடலுக்குள் வலுப்பெற்று, அதுவே கணங்களுக்கு அதிபதியாகி, அதன் வழிகளில் எதை வலுவாகக் கொண்டோமோ, அதுவே இந்த உடலுக்குள் விளைகின்றது.

பின், நாம் இந்த உடலை விட்டுச் சென்றபின், இந்தக் கலாச்சாரப்படி, “நான் எல்லோருக்கும் நல்லது செய்து, ஆண்டவனை வணங்கினேன், எனக்கு இப்படிச் செய்துவிட்டார்களே”, என்ற உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது, இந்த உடலை விட்டுச் சென்றபின், ஆவேச உணர்வுதான் இருக்கும்.

யாரை எண்ணி, இந்த ஆவேச உணர்வை வளர்த்துக் கொள்கின்றார்களோ, அந்த உடலுக்குள் பேயாகத்தான் ஆட்டும்.

இந்த உணர்வை அங்கே அதிகமாக விளையச் செய்து, அந்த விளைந்த உணர்வே, இந்த உடலைப் பிளந்து, மீண்டும் இந்தக் கலாச்சாரத்தில் காட்டிய முறைப்படி என்ன செய்கின்றது?

“தன்னை மதிக்க வேண்டும்”
என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது,
அந்த மதிப்பு கொடுக்கவில்லை என்றால்,
பகைமை உணர்வுகளை ஊட்டச் செய்து,
அவர்களை எப்படியும் வீழ்த்த வேண்டும்
என்ற உணர்வுகள் வருகின்றது.

உயிரினங்களை எடுத்துக் கொண்டால், அதில் ஆண் இனங்கள் ஒன்று சேர்ந்துவிட்டால், தன் கௌரவத்தைக் காக்க சண்டை போட்டுக் கொள்ளும். பெண் இனங்கள் சண்டை போடுவதில்லை. சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கும்.

ஆண் இனங்கள்தான், ஒன்றுக்கொன்று தன் வலிமையின் நிலைகளைக் காட்டும். இதைப் போலத்தான், போர் முறைகள் வந்தது. ஆரம்பத்திலிருந்து, உயிரினங்களிலிருந்து, இந்த வளர்ச்சியில்தான், வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இதைப் போன்று வளர்ந்து வந்த கலாச்சாரத்தில், இன்றைக்கும் மதங்கள் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில்,
ஆண்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து,
ஆண்களையே உயர்த்திக் காட்டப்பட்டு, அதன்வழிகளில்
பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு,
அடிமையின் உணர்வுதான்,
இன்று நம்மை இயக்கிக் கொண்டு வருகின்றது.
5. பிறரை உயர்த்தி வாழும்  மகரிஷிகளின் நிலை – ரிஷிபத்தினி
இதையே ரிஷிகளும், ஞானிகளும், ஆண்பால், பெண்பால் என்று இருந்தாலும், அவர்கள் இரண்டற இணைந்து, உணர்வினை ஒளியாக மாற்றி, இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் பிளந்தவர்கள். இதுதான் “ரிஷிபத்தினி” என்பது.

அதாவது, மகரிஷிகள் காட்டிய நெறியை, தனது மனைவி ஏற்றுக் கொண்டு, உணர்வின் செயலாக இயக்குவது. இரண்டும் கலந்த உண்ர்வுகள் வரப்படும் பொழுது, கணவருடன் ஒன்றிய நிலைகள்.

இதைத்தான், கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ, உணர்வின் இயக்கங்கள் எவ்வாறோ, அதன் வழியில்,
இந்த வாழ்க்கையில், தன்னை உயர்த்த வேண்டும் என்ற நிலையை இழந்து,

“பிறர் உயர்த்தப்பட வேண்டும்” என்ற உணர்வுகள், அவர்கள் உயரக் காரணமாகின்றது.

ரிஷிப்பத்தினியாக இவர்கள் இரண்டு பேருமே,
அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
அவர்கள் பார்ப்போரெல்லாம்
உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று
உயர்வின் ஒளியைக் கூட்டி,
மற்றவர்களை உயர்த்த நினைத்தவர்கள்.

அந்த உயர்த்த வேண்டுமென்ற உணர்வுகள் இவர்களுக்குள் விளைந்து, அதுவே அவர்கள் உயரக் காரணமாகின்றது. இதுவே மகரிஷிகளில், கணவன் மனைவியாக இணைந்த நிலையில், ரிஷிபத்தினி என்பவர்களின்  செயலாகும்.