ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2012

பழனி மலையின் தத்துவம்

1. போகமாமகரிஷி உருவாக்கிய முருகன் சிலை
போகர், ஒவ்வொரு கோளிலும் இருக்கக் கூடிய சக்தியை நுகர்ந்து எடுத்தார். அதே சமயத்தில், கோள்களின் ஆற்றல் முழுவதையும் உணர்ந்தார். எட்டுக் கோளின் சத்துத்தான், நம் உடல் என்று எண்ணினார். இதை அனைத்தையும் சமப்படுத்தி, ஒரு சிலையை உருவாக்கினார். மனித உடலின் ஆறாவது அறிவின் நிலைகள் முழுமை பெற்று, ஒளிச் சரீரம் பெறுவதற்கு, பழனியில் முருகனை உருவாக்கினார்.

பிரபஞ்சத்தில் உள்ள சக்திகள், மனித உடலுக்குள்ளும் உண்டு என்ற நிலைகளில், பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைச் சிலையாக்கி, அதைப் பழனி மலை மேல் வைத்தார்.

1.அதில் சொட்டு நீரை விழவைத்து,
2.அந்தச் சிலையின் சத்தை ஆவியாக்கி,
3.நம்மைச் சுவாசிக்க வைத்து,
4.நம்மை அறியாது நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்கினார்.

நமக்குள் சேரும் விஷத்தினைப் போக்க, பழனி மலை மீது சிலையை வைத்து, அதில் ஏறிச் செல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கிச் சென்று, கருவறைக்குள் அந்தச் சிலையை வைத்து, அதன் சத்தை நீர் சொட்ட வைத்து, ஆவியாக்கி, அதை நமக்குள் சுவாசிக்கச் செய்தார்.

ஆகவே, பழனி மலைக்குச் சென்றால், அந்த போகமாமகரிஷி காட்டிய அறுகுணமான நிலைகள் பெறவேண்டும். எங்கள் பேச்சும், மூச்சும், பிறரின் துன்பத்தைப் போக்கும் நிலையாக அமைய வேண்டும் என்று எண்ணி ஏங்கி வணங்க வேண்டும்.

சக்திவேல் என்றால், கூர்மையான எண்ணம். ஞானவேல் என்பது ஆறாவது அறிவு, எதனையும் அறிந்திடும் அறிவு.

ஆகவே, அந்தச் சிலையின் மூலமாக, “நீ முருகனாகு...!” என்று நம் அனைவரையும் எண்ண வைத்தார், போகமா மகரிஷி.
 2. பழனி மலையின் தத்துவம்
நாம் ஆலயத்துக்குள் செல்லும் பொழுது, அங்கே தீப ஆராதனை காட்டும் பொழுதுதான், இருளுக்குள் மறைந்த பொருள் தெரிகின்றது. பொருளறிந்து செயல்படும், ஆற்றல் மிக்க நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

பழனியில், போகர் உருவாக்கிய முருகன் சிலைக்கு மேல், சொட்டு நீர் உண்டு. எந்த போகமாமகரிஷி காட்டினாரோ, அந்த சக்தி அந்தச் சிலைக்குள் உண்டு. 27 நட்சத்திரங்களின் நிலையும், நவபாஷாணத்தின் நிலையும், சிலைக்குள் உண்டு. நமக்குள்ளும் அவை உண்டு.

நமக்குள், நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் உணர்வின் செயல், நட்சத்திரம். ஒரு அணுவிற்குள், நட்சத்திரத்தின் கதிரியக்கத்திற்குத் தக்கவாறுதான், அது இயக்கிக் காட்டும்.

அதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை நமது உடலுக்குள் சென்றபின் 
1.அணுவாக விளைந்து அணுவின் துடிப்பாக விளைந்தபின்,
2.அது நமது உயிராத்மாவாகச் சேருகின்றது.

நாம் கோவிலுக்குச் சென்றால், அதே உணர்வின் தன்மை கொண்டு, அதே எண்ணத்தால், இங்கு பூஜிக்க வரும் பொழுது, அறிந்துணர்ந்து செயல்படும் நிலைகள் பெறவேண்டும் என்று ஏங்கி வணங்க வேண்டும்.

நம் வாழ்க்கையில் நம்மையறியாது நாம் ஒன்றைப் பார்க்கின்றோம்.
1.அதில் தவறை அறிந்தபின் தான், விலகிச் செல்கின்றோம்.
2.ஆனால், அந்த உணர்வுகள் நமக்குள் பட்டு அசுத்தமாகச் சேர்ந்துவிடுகின்றது.

அப்படி உருவான, விஷத்தின் நிலைகளை நீக்குவதற்குத்தான், போகர், பழனி மலையில், அந்தச் சிலையில் நீரை ஊற்றி, நாம் எந்த ஏக்கத்துடன் வந்தோமோ, அதிலிருந்து வரக்கூடிய ஆவி, நமக்குள் அசுத்தமாகச் சேர்ந்திருக்கும் நிலையை மாற்றி, நமக்குள் நல்லதைச் செய்விக்கும் நிலையை ஏற்படுத்தினார்.

போகமா மகரிஷி, ஒவ்வொரு சக்தியையும் தனக்குள் மோகித்து, அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து, அதே நிலைகள் கொண்டு எல்லோரும் பெறவேண்டும் என்ற நிலையில், நமது சூரிய குடும்பம் எப்படி ஒரு பிரபஞ்ச நிலைகள் கொண்டு செயலாக்குகின்றதோ, அத்தகைய உணர்வின் ஆற்றலை, மனித உடலாக (முருகன் சிலையாக) அமைத்தார்.

அந்த உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட நவபாஷாணத்தை வைத்தார். விஷத்தை நல்லதாக்கும் நிலையாக, சிலையாக உருவாக்கி,
1.அதிலிருந்து வெப்பத்தால் வெளிப்படும் அலைகள்,
2.வந்து பார்ப்போர் நிலையிலும் ஏங்குவோர் உள்ளத்திலும் அது சென்று,
3.துன்பத்தை நீக்கி, கொடிய நோய்கள் வருவதையும் நீக்கி,
4.மனதை மகிழச் செய்து அந்த மகிழ்வான உணர்வுடன்,
5.உயிராத்மாவை ஒளியாக மாற்றிடும் ஆற்றலை அங்கே பதியச் செய்தார்.

மலைக் குன்றின் மீது முருகனை வைத்து, நாம் கீழிருந்து படிமீது ஏறிச் செல்லும் பொழுது, களைப்பு, சோர்வு, வேதனை இவைகளை எண்ணாது, மெய்ஞானிகளின் அருள் ஒளி பெறவேண்டுமென்று
1.விண்ணை நோக்கிப் பார்க்கப்படும் பொழுது,
2.நம் புலனறிவு... உடலுக்குள் துன்பத்தை ஊட்டிய உணர்வின் தன்மையை,
3.வலுவான நிலைகள் கொண்டு படி மீது ஏற உதவுகின்றது.

உடலில் உள்ள நோய்களை எண்ணாது, நாம் விண்ணை நோக்கி எண்ணும் பொழுது, அந்த மெய்ஞானிகளின் அருள் ஒளிகள் நமக்குள் சேர்ந்து, நமக்குள் பலவீனமான நிலைகள் குறைந்து, எண்ணத்திற்கு வலுக் கூடி, உணர்வின் தன்மை கொண்டு மெய் ஒளி பெறுகின்றது. இது மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில், சாதாரண மக்களும் தனக்குள் மெய் ஒளியைப் பெற வழிகாட்டிய தன்மைதான், பழனி மலை.

குன்று மீது, அனைத்துமே தெய்வ நிலையை உயர்த்தி, அந்த உயர்வான எண்ணத்தில்,
1.நாம் மேல் நோக்கிப் பார்த்து,
2.மெய் உணர்வைச் சுவாசித்து,
3.நமக்குள் எடுக்கச் செய்வதற்குத்தான் பழனி மலை.