ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 8, 2012

ஆண்டவனுக்குச் செய்ய வேண்டிய பணி


1. உயிரான ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று 
ஈசனுக்கு முன் நாம் எல்லோரும் ஒன்று.
நாம் உருவாக்கும் நிலைகள் எல்லாம் ஒன்றி, 
நமது உயிர் ஈசனாகின்றது.
அவன் அமைத்த கோட்டை இந்த உடல்.
இந்த கோட்டையை, 
நாம் எப்போதுமே புனிதப்படுத்த வேண்டும்.
அவனுக்குள் ஒன்றி, அவனாகவே ஆகவேண்டும்.

என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று நாம் சொல்லும் இந்த உணர்வுகள், ஒலி, ஒளி என்ற நிலையில் உயிர் என்று ஆகின்றது.
நீயே தான் நான், நானே தான் நீ
என்று உயிரோடு ஒன்றி ஒளியென்ற நிலை நாம் என்றும் பெற்றிடுவோம்.

இந்த உலகில் எது, எப்படி இருந்தாலும்  அந்த அகஸ்தியன் உணர்வு ஒன்றுதான், இந்த உலகை இருளில் இருந்து, மீண்டும் மீட்டும்.  இது நிச்சயம்.

அதனால் தான், தெற்கே தோன்றிய நிலைகளில், சில முக்கிய தத்துவம் உண்டு. பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். நமது குருதேவருக்கும், அதில் பங்கு உண்டு.

இருந்தாலும், இதனை எடுத்து பெருமைப்பட வேண்டியதில்லை. உங்கள் உணர்வில், நீங்கள் அறிந்து கொள்ளக் கூடிய நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய ஞானத்தின் நிலைகளில் தனக்குள் பெருக்கி, கூடுவிட்டு கூடு பாய்ந்தார் நமது குருதேவர். தெளிந்த மனம் கொண்டு கோடி என்னும் கடைசி நிலையான ஈஸ்வரா: என்ற உணர்வின் தன்மையை பெற்றவர்.

அந்த அருளை பாய்ச்சினார். அவரின் அருள் துணை கொண்டு, அந்த பேரருளை பெற்றோம். அந்த பேரருளை கொண்டு, நாம் அனைவரும் அந்த பேரொளியை பெறவேண்டும், பெறுவோம். எமது அருளாசிகள்.
2. உயிருக்கு வலுவைச் சேர்க்கும் நிலை
எமது அருள், குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து, அவர் உணர்வு என்னை பக்குவப்படுத்தியது போல், உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன். இதில், எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ, அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும், அடுத்து, சீராக என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும்இது உதவுகின்றது.

குறுகிய காலமே இருக்கும்,
இந்த உடலுக்கு, வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்,
உயிருக்கு, அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.  இதுதான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஒளியின் உணர்வாக, நம் அணுக்களை, ஆறாவது அறிவின் துணை கொண்டு, உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான், பிரம்மாவை சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது. அதே சமயத்தில், அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாகும் பொழுது, உயிரைப் போன்றே, உணர்வின் தன்மை ஆக்கப்படும் பொழுது, நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது. இவையனைத்தையும் ஒன்றாக சேர்த்தால், ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து,
இது தவறு, இது கெட்டது, என்று உணர்வினை
நுகர்ந்து, நுகர்ந்து, இதனைக் கலந்து, கலந்து,
இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

அவனே உருவாக்கினான். ஈசனாக இருந்து, உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான், கடவுள் என்ற நிலையில், நாம் எதனை நுகர்ந்தோமோ, அவை, நம் உள்நின்று அதனின் துணை கொண்டு, அங்கே இயக்குகின்றது.

அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை. அவன்தான் உருவாக்குகின்றான். ஆகவே, அமைதி கொண்டிருக்கும் நேரத்தில், உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.
3.  உயிர் தோன்றியபின் என்றுமே அழிவதில்லை
நான் இந்தப் பரமாத்மாவுடன் சேரப் போகின்றேன், என்று எல்லோரும் சொல்வார்கள். யார் இறந்தாலும், பரமாத்மாவில்தான் சேருவோம்.

நமக்குள் உயிராத்மாவாக இருந்து, நமக்குள் ஆண்டவனாக ஆண்டு கொண்டிருக்கும், இந்த உணர்வின் ஒளியுடன், அது ஒளிச்சுடராக,
நமது உடலைத் தீயில் போட்டு கருக்கினாலும்,
நமது உடல் முழுவதும் கருகினாலும்,
தசைகளில் இருந்த உணர்வுகள், கருகிய உணர்வு கொண்டு ஆன்மாவாக மாறுகின்றது. ஆனால், உயிர் கருகுவதில்லை.

அதே போல, அந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை, கருகாநிலை பெற்று, அவனை ஒன்றி, அவனின் நிலையாக வளரும் நிலைதான், யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் ஆற்றல். அதே நிலையைக் கொண்டு, ஒளியாக மாறுவதுதான் கருகாநிலை. இதை வேகாக்கலை என்பார்கள்.

வேகாக்கலையைக் கற்றுக் கொண்ட மெய்ஞானிகள்,
இன்றும் விண்ணுலகில்,
எத்தகைய நஞ்சானாலும் ஊடுருவாதபடி,
வைரம் எப்படித் தன் நஞ்சினை அடக்கி,
ஒளியின் சிகரமாக இருளை விலக்கி,
பொருள் காணும் நிலையாகக் காட்டுகிறதோ,
அதைப் போல,
விண்ணுலகிலிருந்து வரும்,
ஆற்றல்மிக்க நஞ்சினைத் தனக்குள் மாற்றி,
ஒளியின் சிகரமாக “என்றும் பதினாறு”
என்ற நிலையை அடைந்து,
மெய்ஞானிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை நாம் பெறுவதற்கு, மெய்ஞானியின் உணர்வாற்றல் இங்கு உண்டு. அதைப் புராணங்களாகக் காட்டப் பெற்று, அதில் ரிஷிகளாக வர்ணிக்கப்பட்டு, ரிஷியின் மகன் நாரதன் என்று நமக்கு தெளிவு படுத்தப்பட்டது. அந்த நாரதன் கலகப் பிரியன்.

நமது மனித வாழ்க்கையில், நமக்கு வேண்டிய ஆசைகள் கொண்டு; பிறருடைய ஆசைக்கேற்ப, நாம் செயல்படும் இந்த நிலைகளில் இருந்து, விடுபட வேண்டும்.
4. உயிர் இருக்கும் வரைதான் நமக்கு மரியாதை
மகரிஷிகள் காட்டிய அருள் வழியில், நமக்குள் நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் உயிரே. நம்மை ஆள்பவனும் அவனே. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ, அவைகளை நமக்குள் சமைத்துக் கொடுப்பவனும் உயிரே.

உயிரின் துடிப்பிற்குள் ஏற்படும் வெப்பம்தான், நமது உடலை இயக்குகின்றது. அந்த வெப்பம் இல்லையென்றால், நமக்குள் இயக்கமில்லை. அந்த வெப்பத்தை விஷ்ணு என்றும், இயக்கத்தை ஈசன் என்றும் காரணப் பெயரிட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

வெப்பமும், கதிரியக்கமும், ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது,
ஒன்று மற்றொன்றை வெல்லப் பார்க்கின்றது.
கதிரியக்கச்சக்தி ஒன்றினுள் ஊடுருவி,
ஒன்றை வெல்லும் சக்தி பெற்றது.
வெப்பமோ, ஒன்றைக் கருக்கும் சக்தி பெற்றது.

கதிரியக்கச் சக்தி வெப்பத்தைத் தாக்கியவுடன், வெப்பம் அதிகமாகின்றது. இதன் தொடர் கொண்டு, வெப்பத்தின் நிலைகள் கதிரியக்கத்தை அடக்கப் பார்க்கின்றது.

இதன் போர் முறைதான், நமது உயிரின் துடிப்பு.
இவைகளின் போர் முறையினால் தோன்றும் வெப்பம்தான்,
நமக்குள் இருக்கக்கூடிய, காந்த அலைகளை இயக்கி,
கரண்டை (மின் ஆற்றலை) உற்பத்தி செய்கின்றது.
நமது உடலில் உள்ள, ஒவ்வொரு அணுவையும் இயக்குவது,
நமது உயிரின் மின் ஆற்றல்தான்.
உயிரின் துடிப்பால், நாம் சுவாசிக்கும் உணர்வின் சத்து
நமக்குள், துடிப்புள்ள உணர்வின் அணுவாகச் சிருஷ்டிக்கப்படுகின்றது.

ஆகவே, உயிர் பிரம்மமாக இருந்து, நமக்குள் சிருஷ்டிக்கின்றது. நமக்குள் இருக்கும் உயிரான ஈசன், நாம் நினைத்ததை நமக்குள் சமைத்துவிடும். ஒருவனைக் கெடுக்க வேண்டுமென்று நினைத்தால், அதை நமது உயிர் நமக்குள் படைத்துவிடும். என்னுடைய சொல்லே எனக்கு எதிரியாகிவிடும். மற்றவர்களை எதிரியாக்கிவிடும்.

அதே சமயத்தில், எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலுக்குள் நோயாகிவிடும். யாரையும் ஏமாற்றலாம், ஆனால், உயிரான ஈசனை, யாரும் ஏமாற்ற முடியாது. கொடுப்பதை நமது உயிர், நமக்குள் பிரம்மமாக்கிவிடும். ஒரு முறை கெட்டதை நினைத்துவிட்டால், ஞானிகளின் உணர்வை எடுத்துத்தான் துடைக்க வேண்டும்.

பாலை நாம் குடித்தால், பாலுக்குள் உள்ள சத்து நம் உடல் ஆவதற்கு, 48 நாளாகும். ஆனால், ஒரு துளி விஷம் பட்டவுடன், நம்மை மயங்கச் செய்கின்றது.

ஆக நாம் நாள் முழுக்க நல்லது செய்தாலும், ஒரு சமயம், “இப்படிச் செய்தானே பாவி” என்று விஷத்தை எண்ணினால், அத்தனையும் போய்விடும். விஷம் கலந்த நிலைகளில் நல்லதையே செய்தாலும், இப்படிச் செய்தார்களே என்று, இதையேதான் பேச வேண்டி வரும். நமக்குள் நம்மை அறியாமலே, இப்படி ஆகின்றது.

இவ்வாறு, நம்மை அறியாது நமக்குள் சேரும் அசுத்தத்தைப் போக்க, ஒவ்வொரு நிமிடமும், மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம். அந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெறுவோம். நம்மை ஆட்டிப் படைக்கும், தீய சக்திகளைப் போக்குவோம். ஆகையால், போகமா மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியால், குடும்பத்தில் துன்பங்கள் மாறி, மெய் ஒளியின் தன்மையைப் பெற்று, நாம் விடக்கூடிய மூச்சலைகள் குடும்பத்தில் படர்ந்து, குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகிழட்டும். உங்கள் பேச்சும், மூச்சும், மற்றோர்களை மகிழச் செய்யட்டும். இதை நீங்கள் செய்யுங்கள்.

ஏனென்றால், மனிதனாகப் பிறப்பது மிகமிக அபூர்வம். கொடுக்கும் ஆற்றலை, குருநாதருடைய உணர்வுடன் இணைந்து, உங்களுக்குள் பதியச் செய்த, இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடாதீர்கள். குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, மெய்ஞானிகளின் அருள் வித்தைப் பெறும் பாக்கியம் இது.

இந்த வித்திற்குச் சத்தாக, உங்கள் செவிப்புலனால் ஈர்க்கப்பட்டு, உடலான நிலத்திற்குள் பதிவு செய்து, அதற்கு நீர் ஊற்றவே தியானம். களைகளை நீக்குவதற்கு ஆத்ம சுத்தி. உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய ஆற்றலைப் பேணுங்கள்.

குழந்தையாக இருந்தாலும், அவமதிக்க வேண்டாம். குழந்தைக்குள் இருக்கும் உயிரும், ஈசனே உடலின் தன்மை உங்களுக்குள் பிறந்தாலும், உணர்வின் தன்மையை மகிழச் செய்யும் பொழுது, மகிழ்வு வருகின்றது.

நம் குழந்தைதானே என்று ஏசினோமென்றால், அங்கிருந்து பதில் அதுதான் வரும். ஓம் நமச்சிவாய, சிவாயநம ஓம். நாம் எந்த உணர்வின் தன்மையை எடுத்து, நம் உடலுக்குள் சேர்க்கின்றோமோ, அந்தச் சக்தியின் தன்மை அது செய்கின்றது. இதுதான் மாறி, திட்டியவுடன் பதில் வருகின்றது. 

நமக்குள், ஈசன் இருக்கும் வரைதான் மரியாதை.
நமக்குள் இருக்கும் ஈசனுக்கு,
நாம் செய்ய வேண்டிய மரியாதை என்ன?
நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.
துன்பமான நிலைகளைக் கொடுப்பதல்ல மரியாதை.

அப்படித் துன்பங்கள் ஏற்பட்டாலும், அதை நீக்கிக்கொள்ள, ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள். யாம் கொடுக்கும் வாக்கு சாதாரணமானதுதான். அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

5.  நம் உயிரிலே நஞ்சு கலந்துவிடக் கூடாது
இம்மனிதச் சரீரத்தில் உயிர் இருக்கும் வரைதான்,
இந்தச் சரீரத்திற்கே மதிப்பு.
இவ்வுடலை விட்டு உயிர் பிரிந்த பிறகு,
இந்தச் சரீரத்திற்கு மதிப்பில்லாமல் போய் விடுகின்றது.

ஆகவே, இந்த உயிர் நம் சரீரத்தில் இருக்கும் பொழுதே, அவ்வுயிரைக் கடவுள் என மதித்து, அதனுடன் ஒன்றிய உணர்வுடன் நாம் செயல்படுவோமேயானால், அவ்வுயிர் பெற வேண்டிய உயர்நிலைகளை அடைகின்றது. அதைச் செய்வதற்கு நமக்குத் துணிவு வேண்டும்.

இந்தச் சரீரத்தில் எந்த உணர்வை விளைய வைத்தோமோ, அது சாவதில்லை. அது சாகாக்கலை. என்ற தன்மையில் இயங்கி, நம் உயிர் மறு சரீரம் பெறும் தன்மையை, நிர்ணயம் செய்கின்றது.

துருவ மகரிஷி இன்றும் விண்ணிலே ஒளியின் சுடராக நிலைத்திருந்து, விண்ணிலிருந்து வரக்கூடிய நஞ்சினைக் கவர்ந்து, தமது ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றார்.

அந்த நஞ்சு, அம்மகரிஷியின் உணர்வின் ஒளியாக மாறுகின்றது. அந்த நஞ்சு, இவருடைய உணர்வை வேகவைப்பதில்லை. ஆகவே இது வேகாக்கலை.

இந்த நூற்றாண்டில் பாடப்பட்ட, இராமலிங்க அடிகளாரின் பாடலை, நாம் ராகம் போட்டு மட்டுமே பாடுகின்றோம். ஆனால், அதன் உட்பொருளை அறிந்துகொள்ள, முன் வருவது இல்லை. இன்று, நாம் சாகாக்கலையில் தான் இருக்கின்றோமே தவிர, வேகாநிலைக்கு நாம் போகவேயில்லை.

“இரு உன்னை நான் அழித்து விடுகின்றேன்.” என்கிறபொழுது, அது நம் உயிரில், சாகாக்கலையாக இயக்கம் பெறுகின்றது. இறந்தபின், இதுவே பிற சரீரத்தினுள் புகுந்து, அங்கேயும் இந்தச் சாகாக்கலையை உண்டாக்கிவிடுகின்றது. மேலும் மந்திரங்கள், தந்திரங்கள் என்று, இதில் எதை நம்மிடத்தில் பதிவு செய்தாலும், அவைகளும் சாகாக்கலையாகவே இயக்கம் பெறுகின்றது.

சாகாக்கலை என்கிற பொழுது,
எந்த நஞ்சை நாம் வளர்த்துக் கொண்டோமோ,
அந்த நஞ்சின் தன்மை கொண்டு
நாம் மறு பிறவியைப் பெறுகின்றோம்.

உதாரணமாக, நாம் நம் உயிரில்  சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கேற்ப, மறு பிறவியாகப் பாம்பின் சரீரத்தைப் பெறுகின்றோம் என்றால், அந்த பாம்பின் சரீரத்தில் வாழ்ந்திடும் போது, தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வை எடுத்து, சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்துக்கேற்ப பாம்பின் சரீரத்திலிருந்து பிரியும் உயிர், மறுபிறவியைப் பெறுகின்றது.

ஆகவே, அங்கே பாம்பினுடைய உணர்வுகள் சாகாக் கலையாகச் செயல்படுகின்றது, என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அன்று ஞானிகள், இம்மனிதச் சரீரத்தில் ஜீவித்த காலத்திலேயே, உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சரீரமாக்கி, வேகாநிலையைப் பெற்றவர்கள்.

நம் உயிர் தீயிலே வேகுவதில்லை. ஆனால், புழுவிலிருந்து மனிதச் சரீரம் பெறும் வரையிலும், தம்மைக் காத்திடும் நிலையாகப் பல கோடி உணர்வுகளை தம்மிடத்தில் சேர்த்து, இன்று மனிதச் சரீரம் பெற்றிருந்தாலும், குடும்பத்தில் வெறுப்பான நிலைகள் உருவாகி விட்டால்,  நெருப்பிலே குதித்துத் தன் உயிரை மாய்த்து கொள்ளலாம் என்று சிலர் எண்ணுவார்கள். தீ, இவ்வுடலை அழிக்கலாம். ஆனால், இவ்வுயிரை அழிக்க முடியாது.

நெருப்பு என்பது நஞ்சு. இதனால், உயிரில் நஞ்சின் தன்மை அதிகமாகின்றது. தீயில் உடலினை எரித்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை, உயிருடன் ஒன்றி, அது நெருப்பின் தன்மையை அடைகின்றது. மீண்டும், இந்த உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும், அந்த உடலையும் எரியச் செய்து, அவரிடத்தில் வாழும் ஜீவனைப் பிரிக்கின்றது.

இது போன்று, உணர்வுகள் சாக வைக்கப்பட்டு, நஞ்சின் தன்மை சாகாக் கலையாக இயங்குகின்றது. இவ்வாறு சாகாக்கலையை அறிந்த நாம், வேகாநிலையைப் பெற பாடுபடவேண்டும்.

உயிரின்  உணர்வில், எக்காரணம் கொண்டும் நஞ்சோ அல்லது நெருப்போ அணுகாது, காத்துக் கொண்டவர்கள் ஞானிகள்.

அந்நிலையைத் தன்னிடத்தில் பெற்ற, மகாஞானிகள் கண்டுணர்ந்த தன்மையைத்தான் உங்களிடத்தில் பெறச் செய்து, அதையே உங்களுக்கு உரமாக ஆக்கி, அம்மகரிஷிகளின் அருளுணர்வுகளை உங்களிடத்தில் படரச் செய்வதற்குத்தான் ”குரு பூஜை விழா”.

“போகாப் புனல்” என்பது பிறிதொரு எந்தப் பிறவிக்கும் போகாதிருப்பது. மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவரின் அருளுணர்வுகள் நமக்குள் குருவாகி, இந்த மனித வாழ்க்கையில் இருளைப் போக்கி, மெய்யுணர்வை அறியும் நிலையாக நாம் செயல்படுவோம்.

இந்தச் சரீரத்திலேயே ஒளியின் சரீரமாக ஆகி, என்றும் “பெருவீடு, பெருநிலை’ என்ற நிலையை அடைய முடியும். இதை வேகாக்கலை என்கிறோம். ஆகவே, அத்தகைய நிலையை நீங்கள் அனைவரும் அடைய, எமது அருளாசிகள்.

6. உயிரின் துணை கொண்டு விஷத்தை ஒளியாக மாற்றும் நிலை
நமது உயிர் ஓரு நெருப்பைப் போன்றது. நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால், அதன் மணம் வெளிப்படுகின்றது. இதைப் போன்று வெப்பத்தால் ஒரு சத்தின் தன்மை கலந்தால், அதை உயிரணு நுகரும்பொழுது, எண்ணங்கள் உருவாகின்றது.

சுவைக்கு ஒப்ப எண்ணங்கள் உருவாகின்றது. அதற்கு சீதா ராமாஎன்று பெயரை வைக்கின்றார்கள். சீதாஎன்றால் சுவை, “ராமாஎன்றால் எண்ணங்கள். எண்ணங்கள் உருவானாலும்,
எந்தச் சத்தினை எடுத்துக் கொண்டதோ,
அந்தச் சத்தினை, மணமாக வெளிப்படுத்தும் சக்தி பெறுகின்றது. 
அந்த மணம்தான், அணுவிற்குப் பாதுகாப்பு. 

இப்படித்தான், அணுக்களின் இயக்கமாகும் பொழுது அது ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது. அதை நாம் நுகரப்படும் பொழுது, எந்தச் சத்தியைக் கவர்ந்து கொண்டதோ அது உயிரிலே பட்டு, அந்த உணர்ச்சிகளும், அதற்குத்தக்க எண்ணங்களும் வருகின்றது.

அந்தச் சுவைக்கொப்ப எண்ணங்கள், நம் சொற்களாக வெளிப்படுகின்றது. அந்த உணர்ச்சிக்கொப்ப, சொல்லாகவும் செயலாகவும் செயலாக்கப்படுகின்றது. நுகர்ந்த உணர்வுகள் உயிரில் பட்டு, அந்த உணர்வின் சத்து உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாற்றப்படுகின்றது.
இவ்வாறு  இரத்தமாக மாற்றப்படும் பொழுது, 
ஒரு சத்தினை இயக்க அணுவாக மாற்றிய,
கவர்ந்து கொண்ட  இயக்க அணு
நம் இரத்தத்தில் கலந்தால், ஜீவ அணுவாக மாறி,
அதனுடைய மலம், நம் உடலாக மாறுகின்றது.

இதை, நாம் புரிந்து கொள்வதற்காகத்தான் காவியங்களில், “விஷ்ணுவின்மறு அவதாரம் சீதா ராமன்என்று காட்டினார்கள். உயிர் எப்படி ஒளியாக  இருக்கின்றதோ, அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி, எண்ணங்களை இயக்குகின்றது.

நட்சத்திரங்களின் சத்து பூமியில் மண்ணுடன் கலந்து, புவி ஈர்ப்பில் அது சிறுகச் சிறுக வளர்ந்து, வைரமானபின் அது வெடித்து, தனித்தன்மையாக வெளி வந்துவிடுகின்றது.

இதைப் போன்றே அந்த ஜீவ அணுக்கள், நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது, அறிவின் வளர்ச்சி, அறிந்திடும் வளர்ச்சி”, வருகின்றது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவதைப் போன்று,  நமது ஜீவ அணுக்களின் துணை கொண்டு, கண்களின் வழி ஒரு உணர்வின் அறிவினை அறியும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்கள் எப்படி மின்னுகின்றதோ, அதைப்  போன்று
நமது உயிர், மின் அணு போன்று இயங்கிக் கொண்டே இருக்கின்றது,      அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு,
நமது ஜீவ அணுக்கள், மின் அணுக்களாக இயங்குகின்றது. 
எப்படி மேட்டூரில், மின் அணுவினை உருவாக்கும் பொழுது, நம் வீட்டில் எந்தெந்தப் பொருள்களில் அதை இணைக்கின்றோமோ, அந்த மின் அணு, அதை இயக்கி, அதன் வழி காண்கின்றோம்.

இதைப் போன்றுதான், நமது உயிரின் துணை கொண்டு, உடலுக்குள் ஜீவ அணுக்கள் இயங்குகின்றது. சூரியனின் இயக்கத் தொடரில் நாம் வாழ்ந்தாலும், நமது உயிரே, சூரியனின் தொடர்பு கொண்டுதான் இயங்குகின்றது.

நாம் எப்படி, ஊருக்கு ஒரு துணை மின் நிலையம் வைத்துள்ளோமோ, அதைப் போன்றே நமது உயிரும், அந்த  நிலை பெறுகின்றது. சூரியனின் துணை கொண்டு, அந்த மின் அணுக்கதிர்கள், நம் உடலில் உள்ள மின் அணுக்களை இயக்குகின்றது.

இருப்பினும், பல உணர்வின் தன்மை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு, மனித உடலில் விஷத்தினை வென்றவன் அகஸ்தியன்.

விஷத்தை வென்றிடும் ஆற்றல் கொண்டு, உணர்வினை ஒளியாக்கும் திறன் பெற்று, ஒளியாக இருக்கும் அகஸ்தியன் துருவனாகி, திருமணமாகி, கணவனும் மனைவியும், இரு மனமும் ஒரு மனமாகி, அருள் மணம் பெற்று, ஒளியாக இருக்கும் உயிரைப் போலவே, உயிரணுக்களை வளர்த்து, துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

27  நட்சத்திரங்களும், கடும் விஷத்தன்மை கொண்டது. அதன் துகள்கள் பூமியில் பட்டால், வைரங்களாக விளைகின்றது. அந்த வைரத்தினைப் பொடி செய்து சாப்பிட்டால், மனிதனைக் கொன்றுவிடும், அவ்வளவு விஷம் கொண்டது.
     
ஆனால்,  விஷத்தின் உணர்வினை ஒளியாகக் காண முடிகின்றது. வெளிச்சமாக அது தெரிகின்றது. விஷமே உலகத்தை இயக்குகின்றது.
இன்றைக்கும் சூரியன் இயங்குகிறது என்றால், விஷத்தின் தாக்குதலால்தான், வெப்பத்தின் தன்மை கொண்டு இயங்குகின்றது. 
நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால்தான்,
துடிக்கும் தன்மை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இதைப் போன்று, ஒவ்வொரு அணுக்களிலும் கலந்திருப்பதால்தான்,
இயக்க அணுக்களாகவும், ஜீவ அணுக்களாகவும்
மாறிக் கொண்டுள்ளதை, நாம் அறிதல் வேண்டும்

நமது ஆறாவது அறிவால், துருவ நட்சத்திரத்தின் உணர்வினை, யாரும் எளிதில் பெறுவது என்றால், மிகவும் கடினம். குருவின் துணை இல்லாமல் எடுப்பதென்றால், மிக மிகக் கடினம். 

நமது குருவின் மூலம், எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் சக்தியைப் பெற முடிந்தது. நமது குரு விஷத்தையும் தாங்கி, அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.

ஆகவேதான், உங்களுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியாக, விஷத்தை ஒளியாக மாற்றும் திறனைப் பெறச் செய்வது.

நாம் ஒவ்வொரு நாளும்,  
உயிரின் முகப்பில் ஈர்க்கப்படும் பொழுது,
இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று,  உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பின் இயக்கத்தில், உயிரின் துணை கொண்டு,  துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது, என் குரு எப்படிச் செய்தாரோ, அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது,  நாம் அனைவரும் ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

7. உயிரைப் போன்றே ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பு
உங்களுக்குள், நீங்கள் உண்மையின் இயக்கங்களை உணர வேண்டும் என்பதற்காகத்தான்,  துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு, இதை உபதேசிப்பது.  ஆகையினால்.  நமது மனதினை ஒன்றாகக் குவித்துப் பழகுதல் வேண்டும்.

ஒரு பாலின் நறுமணங்கள் ஒன்றாக இருந்தால், ஒரே மணமாக இருக்கும். பாலில் ஒரு பக்கம் காரம்,  உப்பு போன்ற நிலைகள் இருந்தால், அது  காரத்தின் சுவையாக மாறும்.  பாலின் தரத்தின் சத்தைக்  காண முடியாமல் போய்விடும்.

நாம் எத்தனையோ கோடி  உடல்களில்,  இன்னலைச் சந்தித்தோம். ஒன்றுக்கு இரையானோம். நாமும் மற்றொன்றைத் துன்புறுத்தி,  உணவாக உட்கொண்டோம். இப்படி, பல நரக வேதனைப்பட்டு, தீமையான நிலைகளில் இருந்து மீளும் வண்ணம்,  மனித உடல் பெற்றது நமது உயிர்.

இந்த மனித உடலை உருவாக்கியது நமது உயிர் என்றாலும், ஒவ்வொரு உடலிலும் காத்திடும் உணர்வினைச் சேர்த்துச் சேர்த்து, அதன் உணர்வுக்கொப்ப, அந்தந்த உடல்களில், அதைக் காத்திடும் ஞானமும் அதன் வழி வளர்ச்சியும் பெற்று, இன்று மனிதனான  இந்த உடலுக்குப் பின்,
உயிர் நம்மை உருவாக்கியது என்று
எல்லாவற்றையும் அறிந்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு,
என்றும் ஒளியின் சுடராக வாழ வேண்டும்.

இந்த மனித உடலில் ஆறாவது அறிவில், விஷத்தைக் கலக்காது, அதைத் தடுக்கும் ஞானம்தான், துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் உடலுக்குள் உள்ள அணுக்களுக்குச் சேர்ப்பிக்கும் நிலை. அதைப் பெறும் நிலையாகத்தான், இப்பொழுது உபதேசித்துக் கொண்டுள்ளோம். 

ஆகையால், நீங்கள் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து, ஆறாவது அறிவை அதனுடன் இணைக்கும் பருவம் பெற வேண்டும். ஆறாவது அறிவின் துணை கொண்டுதான், இன்று துருவ நட்சத்திரம் ஒளியின் சுடராக இருக்கின்றது.

நாம் இந்த உடலை  விட்டு,  எந்த நிலையில் சென்றாலும், 
ஒரு கூட்டமைப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் (சப்தரிஷி மண்டலம்),
உயிருடன் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் செல்லும் கூட்டமைப்பில், நாம் இணைந்திடல் வேண்டும். 

ஆகவே, அங்கே இணைந்து விட்டால், அகண்ட அண்டமே இருண்ட சூழ்நிலைகள் கொண்டு, பல பிரபஞ்சங்கள் அழிவைத் தேடிச் சென்றாலும், அந்தந்தப் பிரபஞ்சங்களில் தோன்றிய உயிரணுக்கள், அது ஒளியின் சுடராகத்தான் வாழும்.

எத்தனையோ கோடி ஆண்டுகள், என்றும் ஏகாந்த நிலை என்ற, அந்த நிலை பெறுவது, இந்த மனித உடலில்தான்.  ஆனால், நம்முடைய இந்த சந்தர்ப்பம், மிகப் பெரிய சக்தி வாய்ந்த, குருவின் அருளைப் பெற்றதினால், நம் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைத்துள்ளது.

நாம் அனைவரும் அவர் காட்டும் வழியில் செல்வோம். குருவின் துணையால் அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞானத் தொடரில் இந்த வாழ்க்கையைத் தொடர்வோம். எமது அருளாசிகள்.

8. உயிரே கடவுள்
சூரியனில் விளைந்த உயிரணுவாக உருப்பெறச் செய்யவல்ல நுண்ணணுவும், ஒவ்வொரு நட்சத்திரத்தில் விளைந்த கதிரியக்க நுண்ணணுவும், வியாழன் கோளில் விளைந்த சத்தும், ஒவ்வொரு கோளில் விளைந்த சத்தும், சந்தர்ப்பவசத்தால், இந்த நான்கு ஆற்றல்களும் ஒன்று சேர்ந்தால், ஓர் கருவாகி, துடிப்புள்ள உயிரணுவாகின்றது.

அதாவது, உயிரணுக்குள் வெப்பம் இருந்து கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பவசத்தால், தாவர இனச் சத்துக்களில் இத்தகைய உயிரணு வீழ்ந்தால்,
அந்தத் தாவர இனச் சத்தை, உயிரணு ஈர்த்து,
உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம்,
தாவர இனத்தின் சத்திற்குள் மறைந்திருக்கும்,
வெப்ப அணுக்களை இயக்கி,
புழுவாக உருப்பெறச் செய்கின்றது.

அதாவது, உயிரணுவின் துடிப்பினால்,
உயிரணுவிற்குள் ஏற்படும் வெப்பம்
புழுவின் உடலுக்குள் மறைந்திருக்கும் வெப்ப அணுக்களை, இயக்கி,
உடலை வாழ, வளரச் செய்யும்,
(உயிரணுவிற்குள்) வெப்பமாக இருந்து,
உயிராக இயங்கும், உயிரே கடவுள்.

புழுவாகி, உடல் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் புழு உட்கொண்ட இரையும், சுவாசித்த உணர்வுகளும், உடலில் நுண் அணுக்களாக விளைந்து, விளைந்த நுண் அணுக்கள், புழுவின் உயிரின் ஈர்ப்பில் ஆத்மாவாகச் சேர்ந்து, உயிராத்மாவாகி, புழு இறந்தபின், புழுவின் உயிராத்மா பரமாத்மாவில் கலக்கின்றது. பரமாத்மாவில் கலந்துள்ள, புழுவின் உயிரான்மா, மறு பிறவியில் பூச்சியாகப் பிறக்கின்றது.

இவ்வாறு ஒவ்வொரு உடலிலும், உட்கொண்ட உணவுகளுக்கும், பற்பல குணங்களின் உணர்வுகளுக்கொப்ப, பல்லியாக, பாம்பாக, பறவையாக, மிருகமாக, இவ்வாறு மனிதன் வரை உருப்பெறச் செய்த
“உயிரே கடவுள்”. எண்ணும் எண்ணமே இறைவன்.
உணர்வுகளின் செயல்களே தெய்வங்கள்.

9.  உன் உயிரான ஆண்டவனுக்குச் செய்யும் பணி
உயிரே கடவுள். உன் உடலை ஆள்பவனும், ஆண்டவனாக இருப்பவனும், உன் உயிர்தான். உடலின் இயக்கத்தின் உணர்வில், எழும் எண்ணத்தினால், சுவாசிக்கும் உணர்வே (உன் உயிர்) இறையாகி, உடல் வளர இறைவன் ஆகின்றான்.

உன் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை, உன் சொல்லின் செயலின் ஆற்றலும், அதாவது, மயில்துத்தத்தைக் (விஷத்தை) கண்களால் பார்க்கின்றாய் என்று வைத்துக்கொள். அதைப் பார்க்கும் பொழுது, அமைதி கொண்டிருக்கின்றது. ஒரு தீங்கும் செய்வதில்லை. அதை நீ சாப்பிட்டால், உன் உடலின் இயக்கமே மாறுபட்டு, குமட்டலும் வாந்தியும் வரச் செய்கின்றது. உடலைச் சோர்வடையச் செய்கின்றது. இறந்துவிடுவோமோ என்று தோன்றுகின்றது.

இதைப் போன்றே, மிளகாயைப் பார்க்க அமைதியாகத் தெரிகின்றது. சாப்பிட்டாலோ, “ஆ” என்று அலறச் செய்கின்றது. காரத்தைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று, குடிக்கச் செய்கின்றது.

சுவையான இனிப்பைச் சாப்பிட்டாலோ, மனது மகிழ்ச்சியடைகின்றது. ஆனால், இனிப்பு அதிகமாகிவிட்டாலோ, அதைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று குடிக்கச் செய்கின்றது. இதைப் போன்றே, நீ சுவாசிக்கும் உணர்வின் செயலே, தெய்வம் ஆகின்றது. தெய்வச் செயலாக அமைகின்றது.

நீ வாழ்க்கையில் பற்பல குணங்கள் கொண்ட மனிதர்களிடம் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அச்சமயம் எதிர்பாராது, ஒரு முரடனிடம் வாக்குவாதங்கள் முற்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நீ உனக்குள் வலுவை மனதில் வைத்து “உன்னை அழித்துவிடுகிறேன் பார் என்று முரடனைப் பார்த்துச் சொல்கிறாய்”. உன் சொல்லில் வெளிப்படும் உணர்வுகள் முரடனின் செவிகளில் ஒலித்து, அவன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு, உன்னை அழித்துவிடும் எண்ணம், அவனுக்கு அதிகம் உருப்பெறுகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் நீ சுவாசிக்கும் உணர்வுகள், உன் இரத்தத்தில் கலந்து, முரடனை அழித்துவிடும் எண்ணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும். முரட்டுத்தனமான உணர்வுகள், உன் உடலில் சேர்ந்து கொண்டு, வினையாக விளைந்து, உன் உடலில் ஆத்மாவாகச் சேர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைகள், அணுசிசுக்களாக உருப்பெற்று விடுகின்றன.

உன் உடலை விட்டு, உயிர் வெளியே செல்லும் பொழுது, உயிரின் ஈர்ப்பில், வளர்ச்சி பெற்ற உன் உணர்வின் வினைகள், மறு பிறவியில் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் மிருக உருவமாக, உடலைப் பெற்றுவிடும் என்று, உணர்வாகவும் காட்சியாகவும் உணர்த்தினார்.

இதையெல்லாம் அறிந்ததும், என்னையறியாது எனக்குப் பய உணர்வுகள் வந்துகொண்டிருந்தது.
என் சொல்லும் செயலும்,
நன்மை செய்யும் நிலை பெறவேண்டும்.

என் சொல்லும் செயலும்,
பிறருக்குத் தீங்கு செய்யாது காக்க வேண்டுமென்று
குருதேவரிடம் வேண்டினேன்.

அவர் பலமாகச் சிரித்துவிட்டு, “உயிரே கடவுள்அவன் வீற்றிருக்கும் ஆலயம் உன் உடல்.  அதில் அசுத்தம் சேராது காக்க வேண்டியது, உன் கடமை. உன்னையறியாது அசுத்தமாவதைச் சுத்தம் செய்வது, உன் பொறுப்பு என்று கூறினார்.

இந்தப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்து,
வாழ்க்கையில், தன்னுள் சேர்த்த தீய உணர்வுகளை மாய்த்து, மகரிஷிகளாகி,
உயிருடன் உணர்வுகள், ஒளியின் ஒளியாக ஒன்றி,
ஒளியின் உருவமாக ஒளிர்ந்து,
விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டு,
அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றலைக் கொண்டு,
 மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி அலைகளை, உனக்குள் சேர்த்து, உன்னையறியாது உன்னில் சேர்ந்த, தீய உணர்வுகளை மாய்த்து, உன் எண்ணம், சொல், செயல், புனிதம் பெறு.

இதுவே உனக்குள் உயிராய் வீற்றிருந்து, உன்னை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு, நீ செய்யும் பணியாகும்.
இப்பணியில், ஆண்டவனின் பணியாக,
நீ ஒளி நிலை பெறுவாயாக!
என்று ஆசீர்வதித்தார்.