ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2024

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

 

இந்த உலகம் இருள் சூழ்ந்த நிலையினை நோக்கி ரொம்பவும் நெருங்கிச் சென்று கொண்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

அணுகுண்டுகளுக்கு மனிதர்கள் தப்பித்தாலும் அதில் வெளி வரும் அணுக் கதிரியக்கங்களும் அதிலே கருகிய விஷத் தன்மைகளும் பூமியின் நடுமையும் அடைந்து பூராவுமே கொதிகலனாக ஆகி…
1.மேலே இருக்கக்கூடிய நிலப்பகுதிகளில் எல்லாம் வெப்பங்கள் அதிகமாகி
2.தீயில் வேக வைத்தது போன்று நம்மைப் பூமிக்குள் கொண்டு சென்று வேக வைத்துவிடும்
3.குண்டுகளுக்குத் தப்பினாலும் கூட… இதிலிருந்து யாரும் தப்ப முடியாது

ஏற்கனவே 30 40 வருடங்களுக்கு முன் சொல்லி உள்ளேன் இத்தகைய கதிரியக்கங்கள் நம் பூமிக்குள் என்ன செய்யும்…? என்று…!

இந்த பூமி மட்டுமல்ல பிரபஞ்சத்தில் மற்ற கோள்களிலும் அணுக் கதிரியக்கங்கள் வளர்ந்து விட்டது. அதை துருவத்தின் வழி கவரும் பொழுது நம் பூமி வேகமாக உருகும் தன்மை வருகின்றது. பூகம்பங்கள் ஏற்படுகின்றது நில நடுக்கங்கள் வருகின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எந்த நிமிடம் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைதல் வேண்டும்… பிறவி இல்லாத நிலையை நாம் அடைய வேண்டும்.

தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.

உதாரணமாக வேதனை என்ற உணர்வை எடுத்தால் நமது உயிர் அதை நமக்குள் பிரம்மமாக உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும்படி வைத்து விடுகின்றது.

ஆனால் நாம் சொன்னபடி இந்த உயிரை இயக்க வேண்டும்…!

நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது… அப்போது அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி… தீமையை நீக்கும் உணர்வாக பிரம்மமாக்கி நமக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம்முடைய எண்ணம் தீமைகளை நீக்கும் உணர்வாக வளர்ச்சி பெறும்…
1.ஆகவே பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்
2.அதாவது நான் சொன்னபடி இந்த உயிர் கேட்க வேண்டும்
3.அதன் வழி இந்த உடலை இயக்க வேண்டும்
4.நுகர்ந்த உணர்வுகள் வழி… உயிர் நம்மை இயக்கக் கூடாது.

தீமை நமக்குள் சிருஷ்டியாகக் கூடாது…! என்பதைத் தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்… ஆறாவது அறிவு…” என்ற நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

இதை மனதில் வைத்து அருள் வழி வாழ்ந்து இருளைப் போக்கி பேரருளைப் பெற தியானித்து அந்த அரும் பெரும் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.