ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 7, 2024

நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவனாக இருக்கப்படும் பொழுது குருநாதர் அருள் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார்.
1.அவர் கூறியதை எல்லாம் உற்று நோக்கினேன்… உணர்வுகளைப் பதிவாக்கினேன்.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது
3.காற்றலைக்குள் இருக்கும் பல தீமைகளை அறியக்கூடிய பக்குவங்களை குரு ஏற்படுத்தினார்.

அந்தப் பக்குவங்களை எல்லாம் நீங்களும் பெறுதல் வேண்டும்…!

ஏனென்றால் நீங்கள் படித்து உணர்ந்து வருவதற்கு முன்
1.உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்தால்
2.உங்களுக்குள் அது நுண்ணிய நிலையில் வேலை செய்யும்.

ஒரு கம்ப்யூட்டரில் நாம் பதிவாக்கியதை எல்லாம்… அது சீராக இயக்கிக் காட்டுவது போன்று தான் உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம். அதன் வலுக் கொண்டு… நாளை வரும் விஞ்ஞான அறிவால் விஷத்தன்மைகள் தாக்கினால் அதிலிருந்து மாற்றி அமைத்து அதற்குத்தக்க நீங்கள் வாழ முடியும்.

அதனை மாற்றி அமைக்கவில்லை என்றால் விஷத்தன்மைகளாக மாறி விஷப் பூச்சிகளாக ஆகிவிடுவோம். அது போன்று ஆகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்களுடைய நினைவுகளை அழைத்துச் சென்று என்றும் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி நிலை… அதுதான் கல்கி.

இதிலே வீழ்ச்சி அடைந்தால் ஆரம்ப நிலையாகப் புழு பூச்சிகளாக ஆகிவிடுவோம்… அப்போது அது கலியாக மாறுகின்றது.

ஏனென்றால் குருநாதர் இது அனைத்தையும் எனக்குத் தெளிவாக்கினார்.

நினைவினைக் கூட்டி அதை அறிந்து கொள்…! என்று இந்த உணர்வினை எனக்குள் கொடுத்தார்.
1.அவர் பதிவு செய்த நிலை கொண்டு தான் எனது நினைவால் அனைத்தையும் அறிய முடிகின்றது.
2.அறிந்த பின் தீமை நீக்கும் உணர்வுகளை வலுப்பெறச் செய்ய முடிகின்றது.

அதைப்போல உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறோம். எந்தச் சந்தர்ப்பத்தில் பூமிக்குள் கடும் விஷத்தன்மைகள் பரவினாலும் அந்த விஷத்திற்குள் நீங்கள் சிக்கிடாது
1.உங்கள் நினைவாற்றல் அந்தக் கடைசி நினைவு
2.துருவ நட்சத்திரத்தின் பால் வரட்டும்.

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள். தீமைகளை அகற்றுங்கள் அருள் உணர்வைப் பெருக்குங்கள்.

எந்த நிமிடம் உயிர் வெளியே சென்றாலும் இந்த உடலுக்குப் பின் இன்னொரு பிறவி இல்லை என்ற நிலையில் உயிருடன் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்ல வேண்டும்..

குருநாதர் எனக்குள் இதைப் பதித்ததினால் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன் உங்கள் நினைவுகள்…
1.கடைசி நிமிடத்திலேயாவது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும்.
2.அதன் ஈர்ப்புவட்டத்தில் செல்லலாம்
3.அப்படி எண்ணக்கூடிய வலிமை நீங்கள் பெற வேண்டும்…!

அத்தகைய வலிமையான எண்ணம் (நினைவாற்றல்) வந்தால் அதன் துணை கொண்டு உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அமையும்படி செய்யும்.