ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2024

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

 

உங்கள் கஷ்டங்களைச் சொல்லி அதிலிருந்து நிவாரணம் தேட என்னிடம் (ஞானகுரு) கேட்டாலும்… நான் கேட்டறியும் பொழுது அந்த உணர்வை என் செவிப்புலன் ஈர்த்து… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி சுவாசித்து… பின் என் உயிரிலே பட்டு அறிந்து தான் “நான் பதில் சொல்ல வேண்டி வரும்…”

குருநாதர் கொடுத்த சக்திகள் கொண்டு பல உபகாரங்களைச் செய்தாலும் நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வுகள் என் உடலுக்குள் சென்று விட்டால் அது கடுமையான தீய விளைவுகளை எனக்குள் உண்டாக்கிவிடும்.

அவைகளைச் சமப்படுத்துவதற்கு குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று தெளிவாக உணர்த்தினார்.
1.விண்ணின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி… அதை வேக வைத்து
2.அதனைச் சமப்படுத்தி… சுவை ஆக்கி
3.யார் உன்னிடம் சொன்னார்களோ அவருடைய தீமைகளை நீக்க இந்த உணர்வின் வாக்கினை அங்கே பதிவு செய்து
4.தீமையிலிருந்து அவர்கள் விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று சொன்னார்.

அருள் ஆற்றல்மிக்க விண்வெளியின் ஆற்றலை எப்படிப் பருக வேண்டும் என்ற உணர்வினை எமது குருநாதர் எனக்குள் உபதேசித்து…
1.அந்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனிக்கச் செய்து… அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து
2.நீங்கள் துன்பம் என்று எம்மிடம் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தாலும்
3.அந்தத் துன்பங்கள் எனக்குள் விளையாத வண்ணம் தடுக்க
4.அடுத்து குருநாதர் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
5.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்தி
6.அது என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அன் உணர்வுகள் அனைத்திலும் கலக்கச் செய்கிறேன் (ஞானகுரு)

உதாரணமாக தங்க நகைகள் செய்ய செம்பும் வெள்ளியும் வைத்து… அதைத் தெரிந்தே தான் கலக்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யப்படும் பொழுது திரவகத்தை ஊற்றி அந்த செம்பையும் வெள்ளியையும் நீக்கிவிட்டு மீண்டும் சுத்தத் தங்கத்தை வைத்து நகை செய்யச் செல்கின்றோம்.

அது போல் நீங்கள் ஆயிரக்கணக்கான பேர் வந்தாலும்… உங்களுக்கு நான் நன்மை செய்ய வேண்டும் என்று சொன்னாலும்… உங்களுடைய துன்பங்களைச் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தே நான் உதவி செய்ய முடிகிறது.

கேட்டறிந்த அந்தத் தீமை எனக்குள் சேராத வண்ணம் குருநாதர் காட்டிய வழியில்
1.அவர் எனக்குக் கொடுத்த… எனக்குள் பதிவு செய்த… உயர்ந்த எண்ணத்தின் சக்தியை வலுவூட்டச் செய்து
2.விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
3.அதை நுகர்ந்து என் உடலுக்குள் செலுத்துகின்றேன்.

அன்று வாழ்ந்த மெய்ஞானிகள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வரும் சென்ற அந்த அரும் பெரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலே படரச் செய்து கொண்டிருப்பதைத் தான் குரு எனக்குள் பதிவு செய்தார்.

அதை நினைவு கொண்டு நான் எண்ணும் பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது.

தங்கத்தில் திரவகத்தைத் விட்ட பின் அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் பிரிவது போன்று அந்த அருள் ஞானிகளின் உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது… அதைப் பிரித்து விடுகின்றது.

இதுதான் ஆத்ம சக்தி என்பது…!

அனைவரும் என்னிடம் கஷ்டங்களைச் சொல்லும் போது உடனுக்குடன் நான் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.உங்களுக்கு முன்னாடி எத்தனையோ நிலைகள் எனக்குள் மாறிவிடும்.
2.உங்களுக்கு நான் நன்மை செய்தாலும் நீங்கள் பட்ட சிரமங்கள் எல்லாம் எனக்குள் சுமையாக வந்து என் நல்லதை மூடி மறைத்து விடும்.

ஆகவே தீமைகளை நீக்குவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த “உபாயத்தை” அந்த மகரிஷிகள் உணர்வினை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

எந்த அளவிற்கு நீங்கள் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு ஆற்றல்மிக்க சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகும்.

அதற்கப்புறம் நீங்கள் தீமையை எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும்…
1.உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.முன்னாடி இருக்கும் மகரிஷிகள் அருள் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கிறது.

ஆகவே விண்ணின் ஆற்றலைப் பெற நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.