ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2021

நோய் நீக்கும் மூச்சுப் பயிற்சிகள்

 

நேராக நின்று கைகளை மேலே தூக்கிப் பின் கீழே இறக்கிச் சாதாரணமாகத் தொங்க விட்டு உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற எண்ணங்களை எண்ணிச் சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
1.இது தீயவினைகளைத் தடுக்கவும்
2.கலக்க உணர்வுகள் வராது தடுக்கவும் உதவும்.

மகரிஷிகளை எண்ணி இதனின் சுவாசத்தை எடுக்க எடுக்க இதனின் உணர்வுகள் வளர வளர... நோயை உருவாக்கும் அணுக்கள் தணியத் தொடங்கும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளையும்
2.துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும்
2.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளையும்
4.இந்த மூன்று நிலைகளையும் எண்ணி
5.அந்தச் சுவாசத்தை உடலுக்குள் அடுக்கடுக்காகக் கொண்டு வரவேண்டும்.

இடுப்பிலே பிடிப்பு இருந்தால்... கையை மேலே உயர்த்தி மாறு கால் மாறு கை தொட்டுவிட்டு... மீண்டும் மேலே கொண்டு வந்து சமப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சகதி பெற வேண்டும் என்று சுவாசத்தை இழுத்து உள் செலுத்த வேண்டும்.

இப்படிச் செய்தால் கை கால் குடைச்சலோ... உடலில் உள்ள மற்ற பிடிப்புகளோ எல்லாம் அகன்றுவிடும். வாத நோய்கள் குறையத் தொடங்கும்.

வாத நோயால் கை கால்களைச் சீராக இயக்க முடியவில்லை என்றாலும் கூட
1.கீழே அமர்ந்து கைகளை உயர்த்தி இந்தப் பயிற்சியைக் கூடுமானவரை செய்ய முற்படுங்கள்.
2.ஒரு நான்கைந்து முறை செய்ய முற்படுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி அந்தச் சுவாசத்தை எடுத்து உடல் முழுவதும் அந்த உணர்வுகளை உள் செலுத்துங்கள். அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து எடுத்து அந்த மூச்சலைகளை உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள.

இரத்தக் கொதிப்பினாலோ வாதத்தாலோ கை கால்கள் முடங்கி இருந்தால் தரையிலே சீராகப் படுங்கள். கூடுமான வரையிலும் அந்த மகரிஷிகளை எண்ணிச் சுவாசித்து உங்கள் கையையும் காலையும் தூக்கிப் பாருங்கள்... மெதுவாக...!

சிறிது நேரம் பயிற்சி செய்துவிட்டு மறுபடியும் அந்த மாதிரி சக்தி பெற வேண்டும் என்று அந்த மூச்சுகளை எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி...
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
2.இரத்தக்கொதிப்பு நீங்கி நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்கி
3.உடல் நலம் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கொண்டு வாருங்கள்.

இப்படி எண்ணி விட்டு மீண்டும் கை கால்களைத் தூக்கிப் பாருங்கள். மேலே தூக்கி பின் கீழே இறக்கிப் பாருங்கள்.

மறுபடி நிமிர்ந்து உட்கார்ந்த பின் உடலில் அந்த இயக்கங்கள் சீராக வருவதற்குண்டான நிலைகள் ஏற்படுகின்றதா...? என்று முயற்சி செய்து பாருங்கள்.

அதிகமாகத் துருவ நட்சத்திரத்தை எண்ணி மூச்சுகளை இழுத்து இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து பாருங்கள். எத்தகைய நோயாக இருப்பினும்
1.நரம்பு மண்டலங்களுக்கு அந்த மகரிஷியின் அருள் உணர்வினை
2.இயக்க ஓட்டங்களாகக் கொடுத்துப் பயிற்சி செய்து வந்தால் எல்லாம் சீராகும்.

முடக்குவாதம் இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் சிறுகச் சிறுக செய்து வரலாம்.

நரம்பு மண்டலங்களுக்கு இத்தகைய பயிற்சி மூலம் வேலையைக் கொடுத்து அந்த மகரிஷிகள் சக்திகளை உடலில் ஓட்டங்களாக கொடுக்கப்படும் பொழுது ஓரளவுக்கு உடல் வலிமை பெறுவதற்கும் உடல் முழுவதும் நல்ல சக்திகளைப் பரப்புவதற்கும் தீமையான உணர்வின் அணுக்களை மாற்றியமைக்கவும் இது உதவியாக இருக்கும்.

எந்த அளவிற்கு அதை எடுத்து நமக்குள் சேர்க்கின்றோமோ அந்த அளவுக்குத் தீமையை உருவாக்கும் சக்திகளை மாற்றி அமைக்க முடியும்.
1.அகஸ்தியமாமகரிஷிகளை எண்ணி இந்தப் பயிற்சி செய்யும் பொழுது
2.அவர் பெற்ற மூலிகை மணங்களும் பச்சிலை வாசனைகளும் நிச்சயம் கிடைக்கும்.

துருவ மகரிஷியையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணும் போது அது உடலில் மிகவும் வலிமை மிக்கதாக சக்தி வாய்ந்ததாக மாறும். மனச் சோர்வையும் மனச் சஞ்சலத்தையும் நீக்கக்கூடிய சக்தி கிடைக்கும்.

கூடுமானவரை வயிற்றில் ஆகாரம் இல்லாத பொழுது இந்த முயற்சிகளை எடுங்கள். நல்ல பலனைத் தரும்.

அதே போல் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு ஞாபகமறதி இருந்தாலும் இந்தப் பயிற்சிகளைச் செய்தால் நல்ல ஞாபக சக்தி கிடைக்கும். கல்வி சீராக இருக்கும்... மன வலிமை கிடைக்கும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணினால் உங்கள் எண்ணச் சிதறல்களை மாற்றி உங்கள் எண்ணம் வலு பெறும்.

ஆஸ்த்மாவோ சளித் தொல்லைகளோ இருந்தாலும் அதுவும் தணியும்.

தொடர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கச் சேர்க்க
1.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் ஒளியாகும்
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லா நிலை அடைய முடியும்.