ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2021

நாம் உருவாக்க வேண்டிய சொர்க்கலோகம்

 

எதையெல்லாம் எண்ணினோமோ… எதையெல்லாம் கேட்டோமோ… எவையெல்லாம் நுகர்ந்தோமோ… உயிரால் நுகரப்பட்டது அனைத்தும் ஓ...ம் நமச்சிவாய ஓ...ம் நமச்சிவாய என்று உடலாக மாறுகின்றது,

1.இப்போது இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது நீங்கள் கேட்டறிந்த உணர்வுகள்…
2.நீங்கள் எண்ணிய உணர்வின் குணங்களை உயிரான ஈசன் உருவாக்கி...
3.உடலில் இந்திரலோகமாக மாற்றி... உடலுக்குள் அந்த குணங்களை உருவாக்கும்
4.“பிரம்மமாக்கும்” உணர்வினை உருவாக்குகின்றது.

ஆகவே சிந்தித்துச் செயல்படும் ஞானிகள் உணர்வினை நாம் அறிந்தால் இதே உணர்வுகள் சிந்தித்துச் செயல்படும் சக்தியின் உணர்வாக நம் உடலில் அணுவாக... பிரம்மமாக... உருவாக்கும்.

அதனின் உணர்வு உடலாகச் சேர்க்கப்படும் பொழுது அணுவின் மலம் சிவமாக மாறுகின்றது. அதைத் தான் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய என்று சொல்வது.

அதாவது நாம் எண்ணிய உணர்வுகளை உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். உடலில் சதாசிவமாக ஆக்கிக் கொண்டே உளளது நமது உயிர்.

எதை எண்ணுகின்றோமோ... எதைக் கேட்கின்றோமோ... அது எத்தகைய குணமாக இருந்தாலும்... அதை எல்லாம் சதாசிவமாக... உடலாக... நம் உயிர் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்பது தான் இதனின் பொருள்.

தீமையை அகற்றும்… சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானிகள் உணர்வினை
1.நீங்கள் உபதேச வாயிலாக இப்பொழுது நுகர்கின்றீர்கள்
2.அது ஓ... என்று ஜீவ அணுவாக மாற்றும் இந்திரலோகமாக உங்களுக்குள் மாறுகின்றது.

அதனின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதை அணுவாக உருவாக்கும் கருவின் தன்மை அடைந்து பிரம்மலோகமாக மாறுகின்றது.

உபதேசிக்கும் உணர்வைக் கேட்டறிந்த பின் அந்த உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாகி... மகிழ்ச்சிக்குரிய உணர்வுகளாக உங்களுக்குள் தோற்றுவிக்கின்றது.

மகிழ்ந்திடும் இந்த உணர்வுகளைத் திரும்பத் திரும்ப வளர்த்துக் கொண்டே சென்றோம் என்றால் குறித்த காலத்திற்குள் அணுக்களாக உருவாகின்றது.

அணுக்களாக உருவான பின் அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும் தன்மை அடைகிறது… இது பிரம்மலோகம்.

எதனின் உணர்வை நமக்குள் எடுத்தோமோ அதனின் ஞானமாக நம் சொல்லும் செயலும் அமைந்து... தீமைகளிலிருந்து விடுபடும் உணர்ச்சிகள் நமக்குள் வளர்ந்து ஞானிகள் வழியிலே நம்மை வாழச் செய்யும்.

ஆகவே… பிரம்மலோகம் எதுவாக எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் போது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது.

எதன் வழி மாற்றுகின்றது...? நம் உயிர் வழி...!

1.நம் நெற்றி பாகம்… உருவாக்குமிடம் ஈஸ்வரலோகம் என்றும்
2.பிரம்மலோகமாகி... இந்திரலோகம் என்று உடலாக அமைகின்றது என்றும்
3.உயர்ந்த குணங்களை வளர்க்கப்படும் பொழுது சொர்க்கலோகமாக மாற்றுகின்றது என்பதையும் சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஆகவே சொர்க்க வாசல் என்பது உயிர் இருக்கும் இடமே…!
1.அந்த வாசல் வழி தான் வந்தது
2.அதன் வாசல் வழியிலே தான் நாம் வெளியிலே செல்ல வேண்டும்.

ஆனால் வேதனை என்ற உணர்வை வாழ்க்கையில் எடுத்தால் நரகலோகம். அந்த நரகலோகத்தைச் சிருஷ்டிப்பது எது...?
1.நம் உயிரான நிலைகளிலிருந்து தான்
2.நாம் சுவாசித்த நிலைகள் இருந்துதான்.

இதை உருவாக்குவது எது...?

ஈஸ்வரலோகத்தில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வேதனைகளாக அமைந்து விட்டால் நரகலோகமாக மாற்றி விடுகின்றது.
1.கடும் வேதனையாகும் போதுதான் உடலுக்குள் நரகலோகமாக மாறுகின்றது
2.நரகத்திற்குச் செல்லும் வாசலாகவும் இது அமைந்து விடுகிறது.
3.எதன் வழி சென்றோமோ உயிர் வேதனைப்படும் உடல்களுக்குள் அழைத்துச் செல்கிறது.

பாம்பு மற்ற உயிரினங்கள் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி ரசிக்கின்றது... தன் உணவாக்கிக் கொள்கிறது. அது போன்று மனிதனின் வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வுடனே வாழ்ந்து அதே உணர்வுடன் உடலை விட்டுச் சென்றால் பாம்பாகப் பிறந்த பின் தான் அது அடங்குகின்றது.

கோபமும் கொதித்தெழும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் புலியின் ரூபமாகப் பெற்று அதில் சென்று ஒடுங்குகின்றது. பின் புலியின் ரூபமாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது.

இப்படித்தான்…
1.மனிதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப
2.நரகமும் சொர்க்கமும் நமக்குள்ளே தான் உருவாகின்றது.

சொர்க்கவாசல் என்ற உயிரின் உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துச் சொர்க்கலோகமாக நாம் மாற்றுதல் வேண்டும்.

ஆகவே
1.சொர்க்க வாசல் என்ற உயிர் வழி சென்று துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
2.பிறவியில்லா நிலை என்றும்… பகைமையே இல்லாது ஏகாந்த நிலை என்றும்… சொர்க்கம் என்றும்… அங்கே அடைய முடிகின்றது.