ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 29, 2021

நன்மை என்று விரும்புவதா…! தீமை என்று வெறுப்பதா…?

 

எப்படித்தான் இருந்தாலும்… காற்று அடிக்கிறது…! மழை பெய்கின்றது…! வெயில் அடிக்கிறது…! குளிர் அடிக்கிறது…! நான்கு காலமே இங்கே மாறி மாறித்தான் வருகின்றது.

இதைப் போன்றுதான் நாம் இன்று மகிழ்ச்சியாகச் சென்றாலும் போகும் போதே ஒருவன் வாகனத்திற்குக் குறுக்கே போகின்றான்… ஒருவன் கீழே விழுந்து விடுகின்றான்.
1.அதைப் பார்த்து வேதனைப்படுகின்றோம்
2.பயமாகி நடுக்கம் அடைந்து குளிர் போல் ஆகி விடுகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். எரிச்சலான பேச்சுகளைப் பேசுகின்றனர்.
1.அதை நுகர்ந்த உடனே நமக்கும் எரிச்சல் வருகின்றது
2.வெப்பமாகிறது…!

அதே சமயத்தில் ஒருவருக்கொருவர் பரபரப்பான நிலைகள் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் பொழுது பெரும் புயலாக மாறுகிறது,
1.ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதைப் பார்க்கும் பொழுது
2.பெரும் புயலாக (காற்று) மாறி நம் எண்ணங்களைச் சிதறச் செய்து நம்மை ஓட வைக்கிறது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி காலங்கள் மாறுவது போல் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

குளிர் அடித்தால் நாம் என்ன செய்கின்றோம்…? வெயில் அடித்தால் பரவாயில்லை என்கிறோம்.

அதே சமயத்தில் வெயில் அடிக்கும் பொழுது காற்றே அடிக்கவில்லை என்றால் “காற்று வந்தால் பரவாயில்லை…!” என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தபின் “காற்று அதிகமாகி விட்டது… நம்மால் தாங்க முடியவில்லை…!” என்று சொல்கின்றோம்.
1.ஒன்றை நாம் நாம் விரும்புகிறோம்
2.ஆனால் வந்தபின் அதை வெறுக்கின்றோம்.

வெயில் அடிக்கின்றது… பொருளைக் காய வைக்க வேண்டும் என்றால் அந்த வெயில் தேவைப்படுகிறது. ஆனால் பொருளை காய வைப்பதற்கு முன் வெயில் அதிகமாகி விட்டால் “அப்பப்பப்பா… உடம்பெல்லாம் எரிகிறது…!” என்று சொல்கின்றோம்.

பொருளும் காய வேண்டும் தான்…! ஆனால் வேதனையும் படுகின்றோம்.
1.ஒன்று நன்மை செய்தாலும்… அதனின் நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்
2.அடுத்த நிமிடம் அதனாலேயே வேதனைப்படுகின்றோம்.

துணி காய வேண்டும் என்றால் காற்று அடிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். காற்று அதிகமாகித் துணியைத் தூக்கி எறிந்து விட்டால் இப்படித் தூக்கி எறிந்து விட்டதே…! என்று வேதனைப்படுகின்றோம். ஆக… அதிகமாகக் காற்றடித்தால் எதுவாக இருந்தாலும் தூக்கி எறிந்து விடுகிறது.

இப்படி
1.எல்லாமே நமக்கு நன்மை செய்தாலும்
2.அதிலேயும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றது…!