ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2021

மனிதனால் தான் “தெய்வ சக்தியை உருவாக்க முடியும்...” பிறந்த பலனை இழக்காதீர்கள் - ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர உடலில் உணரும் எண்ண வேட்கைகள் யாவையும்… சாதாரண வாழ்க்கை நிலையில் உள்ள மனிதனுக்குப் பூமியின் ஈர்ப்புப் பிடியுடனே சிக்கி உள்ளது.

பூமியின் அலைத் தொடர்பை இவன் எடுத்து…
1.உணர்வின் பிடியை எண்ணத்தின் வேட்கைக்கொப்பச் சம நிலை கொள்ளாத் தன்மையாலும்
2.சந்தர்ப்பத்தால் எடுக்கும் உணர்வின் வேக உந்தலினாலும்
3.ஒவ்வொரு மனித உடலிலும் ஜீவனற்ற ஆத்ம உயிர்கள் குடியேறி உள்ளது.

அவ்வாறு “குடியேறிய ஆத்மாக்கள்” மனிதனின் எண்ண உணர்வையே தன் இச்சையில் செயல்படும் “ஞான அணு” வளர்ப்பை வளர்க்க விடாமல்… “அந்த ஆத்மாக்கள் வளர்க்கும்” உணர்வின் எண்ண நிலைக்கொப்ப வளரும் தன்மையே உருவாகின்றது.

அந்த மாறு கொண்ட தன்மையால் குடியேறிய ஆத்மாவின் அணு வளர்ப்பினால் சரீர பிம்பத்தில் ஏற்படும் தொல்லைகளில் ஆங்காங்கு ஏற்படும் உடலின் கட்டிகளினாலும் சில புண்களினாலும் கரப்பான் சொறி போன்ற சரும வியாதியினாலும் உதிரமே சீழாகி அச்சீழ் வளர்க்கும் அணுவை மேன் மேலும் வளர்க்கும் நிலையினால் கடுமையான நோய்களும் உருவாகின்றது.

ஆக மொத்தம்… உணர்வின் எண்ணத்தின் செயலுக்கொப்ப…
1.உட்கொள்ளும் உணவிலும் போதைவஸ்தின் ஈர்ப்பிலும் காம இச்சை வெறியிலும் இச்சரீர பிம்பத்தையே “அழுகும் மூட்டையாக்கி”
2.ஆத்மாவின் செயலையே இவ்வீர்ப்பின் ஆத்மாவாக்கி
3.பல காலமாக... பல கோடி உயிர் தொடர் பிம்பத் தொடர்பில் எல்லாம் முலாம் பெற்ற ஆத்மாவை...
4.உயர்ந்த தெய்வ சக்தியாக செயல் கொள்ளும் எண்ணத்தால்... எதனையும் செயல் புரியும் மனித சக்தி பெற்ற பிறகு...
5.உடல் உணர்வின் உந்தலின் வேட்கைக்காக மனித ஆத்மாக்களின் இன்றைய செயல்
6.தன்னைத் தானே இழக்கும் நிலையாகச் (மனித வித்துக்கள்) சென்று கொண்டிருக்கின்றது.

அதை மாற்றிடத் தெய்வ சக்தி பெற்ற தேவர்களின் (மகரிஷிகளின்) தொடர்பைக் கொண்டு மேல் நோக்கிய வளர்ச்சியினால் நம் வளர்ப்பலையின் தொடர்பை எவ்வீர்ப்பு அலையிலும் சிக்காமல் சகல சக்திகளையும் உணர்ந்திடலாம்.

இயற்கைச் சக்தியின் செயலாகச் செயலாற்றும் சப்தரிஷிகளின் ஞானத் தொடர்பலையுடன் உணர்வின் எண்ணமுடன் அந்த ஞான ஈர்ப்புத் தொடர்பலையை பெற்றோமானால்
1.இஜ்ஜட சரீர அணு மூட்டையின் பிடிப்பிலிருந்து
2.உயர் கொண்ட ஞான ஈர்ப்பிற்குச் செல்லலாம்.

மனிதனைக் காட்டிலும் உருவத்திலும்.. பலத்திலும்… அறிவிலும்… சுவாச ஈர்ப்பு நிலையிலும்… சக்தி கொண்ட “யானைக்கே…” மனிதனை ஒத்த செயல் அங்கங்களோ சொல்லாற்றும் திறமையோ அற்றதினால் எல்லா நிலைகளும் உணர்வும் தன்மை இருந்தும் ஞானத்தை வளர்க்கும் வளர் நிலைக்குச் செல்ல முடியவில்லை. இதைப் போன்ற நிலை மிருகங்களில் பலவற்றுக்கும் உண்டு.

எறும்போ கொசுவோ மூட்டைப் பூச்சியோ உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தாலும் அவை மனிதனைத் தாக்கும் பொழுது அதன் கடி நிலைக்குப் பயந்து பல முன் ஏற்பாடுகளைச் செய்து பல நிலைகளைச் செய்கின்றான் மனிதன்.

1.ஒவ்வொரு நொடிக்குமே இச்சரீர ஜட பிம்பத்தின் ஈர்ப்பு எண்ண வேட்கைக்குத் தான் மனிதன் வாழுகின்றான்.
2.அதிலிருந்து மீண்டு ஆத்ம ஞானத்தின் உணர்வை மனித ஞானம் பெற முடியும்.
3.மனிதன் மட்டும் தான் அந்தத் “தெய்வ சக்தியை” உருவாக்க முடியும்.

அன்று போகன் தன் உடலால் பெற்ற சக்தியை இந்த உலகம் முழுமைக்கும் பரப்பும் நிலை கொண்டு தன் ஆத்மாவில் பெற்ற உயர் அலையின் தொடரை இந்த உலகம் முழுமைக்கும் அந்தந்த இடங்களில் ஜீவன் கொண்ட சக்தி அலைத் தொடர்புகளை பூமியில் பதிய வைத்துள்ளான்.

அவ்வலையின் ஞானத்தால் பல கோவில்களை அமைத்து மனிதனின் எண்ணத்தில் தெய்வ ஞான சக்தியை வளரச் செய்தான்.

போகரும் கோலமாமகரிஷியும் கொங்கணவரும் அகஸ்தியரும் ஐயப்பனும் ஆதிசங்கரர் போன்று பல எண்ணற்ற ரிஷிகளும் இன்றளவும் சரீரத்தின் தொடர்பு கொண்டு அன்று பதிய வைத்த அலைத் தொடர்பின் வழித் தொடர்பினால் செயலாற்றிக் கொண்டுள்ளார்கள்.

இக்கலியின் கடைசியில் எண்ணத்தின் உணர்வைக் கொண்டு நாம் எடுக்கும் தியானத்தால் அந்த உயர்ந்தோரின் உயர்வுடன் அவர்களின் செயல் நிலைக்கொத்த தன்மைக்கு நாமும் வளரலாம்.

மேல் நோக்கிய சுவாச அலையினால் எண்ணத்தின் உணர்வை ஞானத்தின் பால் செலுத்தி இச்சரீர ஜடப் பொருளை கொண்டு ஆத்மாவின் வலுவைக் கூட்டிக் கொண்டோமானால்
1.இப்பூமியிலே மனிதனாக பிறந்து சகல சித்தியும் அடைந்து
2.சப்தரிஷியாக வாழும் பலரின் நிலை போன்று நாமும் வாழ்வாங்கு வாழ முடியும்.