ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2021

அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்து நமக்குள் விளைய வைத்தால் அவன் வாழும் இடத்திற்கே நாம் செல்வோம்

  

அகஸ்திய மாமகரிஷி தனக்குள் ஒளியான உணர்வின் ஆற்றல் பெற்று விண்ணிலே சென்றபின் அங்கிருந்து வெளிப்படும் அலைகள் வானிலே மிதந்து கொண்டிருக்கின்றது.

பிரபஞ்சத்துக்குள் மிதந்து கொண்டிருக்கக் கூடிய, அந்த உணர்வின் சக்தியை நாம் நினைவு கொள்ளும் பொழுது…
1.அன்று அகஸ்திய மாமகரிஷி மனிதனாக வாழ்ந்த காலத்தில்
2.அவர் உடலில் விளைவித்த மூச்சின் உணர்வு அலைகள்
3.எண்ண ஒலிகளாக ஒலிபரப்பப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பெற முடியும்.

இப்பொழுது நாம் எந்தக் குணத்தை எண்ணிப் பேசுகின்றோமோ இதைப் போன்று அகஸ்திய மாமகரிஷி
1.தன் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளை வெளிப்படுத்திய நிலையும்,
2.வளர்ந்த நிலையும்… தான் வளர்ந்து கொண்ட நிலையும்… வளர வேண்டிய நிலையும்,
3.தன் உணர்வாற்றலால் வெளிப்படுத்திய அந்த நிலைகள்
4.இங்கே நமக்கு முன் பரவிக் கொண்டிருக்கின்றது.

அந்த வளர்ந்த நிலை… வளர வேண்டிய நிலை… இவை அனைத்துமே எவ்வாறு…? என்ற நிலைகளைத் தான் விநாயகத் தத்துவத்தில் கேள்விக் குறியாகப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.

விநாயகனைப் பார்க்கும் பொழுது… மேற்கே பார்த்து அந்த விநாயகனை வைத்திருப்பார்கள். நீர் நிலை இருக்கும் பக்கம்தான்,

ஏனென்றால்… அது ஜீவ நீர், ஆக அந்த ஜீவ நீர் நிலைகள் பக்கம் அதை நிலை நிறுத்தி நாம் நீரிலே மூழ்கி வந்தபின் இந்த விநாயகரைப் பார்த்ததும் நம் கண்ணுக்குள் இந்தக் கதையாக உணர்த்திய நினைவலைகள் வருகின்றது.

நாம் இந்த உடலை… மிருகத்திலிருந்து வளர்ச்சியாகி மனிதனாகப் பெற்றோம் என்ற உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் எண்ணத்தை நாம் எண்ணி வானை நோக்கி எண்ணி ஏங்கும்படி செய்கிறார்கள்.

அப்படி எண்ணும் பொழுது… கிழக்கிலிருந்து வரும் அந்தச் சூரியனின் கதிர் அலைகள் நமக்குள் காந்த அலைகளாகப் பட்டபின் அந்த உணர்வின் அலைகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு எந்த மகரிஷி உணர்த்தினாரோ, அவரின் உணர்வின் ஆற்றலைப் பெறும் நிலைகள் பெறப்படுகின்றது.

அப்பொழுது
1.அகஸ்திய மாமகரிஷி உணர்த்திய உணர்வின் ஆற்றல்
2.அவர் வெளிப்படுத்திய உணர்வின் தன்மைகள் இந்த பூமியிலே மிதந்து கொண்டிருப்பதினால்
3.அந்த உணர்வின் ஆற்றல் ஈர்க்கப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகின்றது.

ஆக… எந்த மனிதன் (அகஸ்திய மாமகரிஷி) தன் ஒளியின் தன்மையிலே விண் சென்றானோ அவன் வழியைத் தான் உணர்த்தியிருக்கின்றான்.
1.அவன் வழியை நாம் பின்பற்றிச் செல்லும் பொழுது
2.அவன் சென்ற இடமே நாம் போய்ச் சேர முடியும்.

ஆகவே… நாம் அனைவரும் அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் நடந்து… அருள் வாழ்க்கை வாழ்ந்து… இந்தப் பிறவியிலேயே பிறவியில்லா நிலை என்னும் நிலையாக அழியா ஒளிசரீரம் பெற்று… மகிழ்ந்து வாழ்ந்து… என்றும் பதினாறு என்ற நிலையை அடைவோம்.