ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 22, 2021

ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது - ஈஸ்வரபட்டர்

 

இன்றைய பக்தி மார்க்கத்தில் மதில் சுவர் எழுப்பி… ஆலயக் கோபுரம் கட்டித் தெய்வத்தின் உருவச் சிலையைப் பஞ்சலோகங்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்து… அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவித்து… மேளங்கள் முழங்க வேதனகள் ஓதி… தீபாராதனை காட்டி… தெய்வங்களை வழிபடுகின்றார்கள்.

மேலும் அதற்கென்ற அறங்காவலர்களையும் பொறுப்பேர்க்கும் பொருட் காவலர்களையும் நியமித்துத் “தெய்வ சங்கல்பம் பெறும்” பக்தி மார்க்கத்தால் கிடைக்கப் பெறும்… நடைமுறைச் செயல் வழியை வழிப்படுத்துகின்றனர்.

ஆனாலும்…
1.தன் ஜீவாதாரத்திற்கே பொருளீட்ட முடியாத…
2.செயல் நிலை கொள்ளா மனிதக் கூட்டங்கள்… போற்றலில் புகழ் கொண்டு
3.பொருளைப் போட்டு தெய்வ பக்தியை வளர்க்கும்
4.தேவக் கூட்டங்களை எதிர்க்கும் எண்ணம் கொண்டு குரோத… பொறாமை… ஆவேச உணர்வுடன்
5.தான் வளர்க்க வேண்டிய உயர் குணத்தையே மறந்து
6.பொருள் கொண்ட பக்தி உணர்வின் கூட்டத்தைக் கூடச் செய்து
7.பொருளற்ற ஏக்க உணர்வு கொண்ட மனிதக் கூட்டங்களின் சலிப்பின் சோர்வினால்... பொறாமை உணர்வு ஏற்பட்டு
8.தான் அடைய முடியாத நிலையால்... ஏமாற்றும் குணங்களை வளர்த்து
9.ஆலயங்களில் நடைபெறும் பஜனைக் கூட்டத்தின் வலுவைக் காட்டிலும்
10.ஏமாற்றும் உணர்வு கொண்ட… “திருடும் நிலைக் கூட்டங்கள் தான்…” இன்று வளர்ந்துள்ளது

ஆலயத்திற்குச் செல்லும் அத்தகைய இரு சாராரும் பயந்த உணர்வு கொண்டே செல்கின்றனர்.

ஏன்…? எதற்காக…!

ஆலயத்திற்குச் செல்வோருக்கு… எங்கே தான் அணிந்து செல்லும் நகைகளோ பொருளோ “பறிபோய்விடுமோ…!” என்ற பய உணர்வின் அச்சம் ஒரு பக்கம்.

மறுபக்கம்… பக்தியுடன் வருபவர்களிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏமாற்றிப் பூஜை சாமான்களின் விலையை ஏற்றி விற்கின்றனர். அப்படி விற்பவரின் உணர்வோ… “தான் ஏமாற்றிப் பிழைக்கும் செயலுக்காக” இந்தத் தெய்வம் தண்டித்துவிடுமோ…? என்ற பய உணர்வு கொண்ட தன்மையும் உள்ளதப்பா.

அது எல்லாம் போக.. அந்தத் தெய்வச் சிலையை “களவாடும் உணர்விலும்” தான் இன்றைய ஆலய நிலைகள் யாவும் உள்ளதப்பா…!

இதிலிருந்து… உண்மை தெய்வ சக்தியின் அலையைப் பெறும் நிலை மனித உணர்வின் பால் செலுத்த முடியாத செயலாகத் தான் வளர்ந்து விட்டதப்பா…!

1.இன்றைய மனிதக் கூட்டங்களின் இத்தகைய செயலிலிருந்து
2.ஞான அலையை ஈர்க்கும் வழியற்ற ஈர்ப்புப் பிடியினால்
3.வலுக் கொண்ட மகரிஷிகளின் செயலையே இக்கலியில் கலக்க விடாதபடி
4.மனிதனின் எண்ண ஓட்டங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.

பொறாமை உணர்வுகளும் பேராசை உணர்வும் தான் வலுவாகி உள்ளதே அன்றி முருகனின் குண நிலையை ஒத்த சாந்த சக்தி நிலை வளர முடியாத “கலியாக” இன்றைய நிலை உள்ளது.

எண்ணத்தின் வீரியத்தைப் பிறர் மேல் நாம் செலுத்தும் அலை தெய்வத் தொடர்பு கொண்டு
1.சாந்த வழித் தொடரின் ஞானத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்தாலும்
2.தெய்வத்தின் தெய்வமாகவே நம் ஞான சக்தி உயர்ந்து இருந்தாலும்
3.பிறர் மேல் நாம் செலுத்தும் அலைத் தொடர் குறை காணும் எண்ணத்தைச் செலுத்தாமல்
4.நிறைவு கொண்ட நல் அலைகளை நலம் பெறவேண்டும் என்ற உணர்வு கொண்டு செலுத்தி
5.கீழிருந்து மேலாகத்தான் - ஒவ்வொரு ஆத்மாவையும் தெய்வ உருவாக எண்ணி
6.நல் வழியில் சென்று அந்த அலையின் சக்தியை எடுத்து வளர வேண்டுமே அன்றி
7.வேறு ஓருவரின் குறையிலோ நிறைவிலோ ஆத்மாவிற்கு வலுப் பெறும் தன்மையோ வளரும் தன்மையோ யாரும் பெற முடியாது.

பிறர் பால் செலுத்தும் எண்ணத்தில் அவ்வீர்ப்புப் பிடியில் நம் உணர்வைச் செலுத்திவிட்டோமேயானால் “அவர்கள் பிடியில் சிக்குண்ட ஆத்மாவாகத்தான்” நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் ஆத்மாவும் வழி பெறும்.

ஞான வழியில் பயணிப்போர் இதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது…!