ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2020

ஊரையும் உலகையும் காக்கும் சக்தி...!


மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர அருள்வாய் ஈஸ்வரா. எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் மகரிஷிகள் அருள் சக்தி படர அருள்வாய் ஈஸ்வரா என்று தியானித்து அந்த  வலுவை நம் உடலில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

விநாயகரை வணங்கும் போதெல்லாம்...
1.மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற
2.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும்...
3.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு அப்புறம் நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும். எங்கள் ஊர் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும். இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும்... என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் நன்றாக இருந்தால்... இந்த ஊர் நன்றாக இருந்தால்... நம் நாட்டு “அரசியலும்” நன்றாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நிலைகளிலும் இந்த மாதிரிச் செய்யுங்கள்.

மகரஷிகளின் அருள் சக்தி எங்கள் தெரு முழுவதும் படர வேண்டும். தெருவில் வசிக்கும் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... தொழில் வளம் பெருக வேண்டும்... நல்ல மழை பெய்ய வேண்டும்... நல்ல விவசாயம் நடக்க வேண்டும்...! என்று எல்லோரும் சொல்லுங்கள்.

நாம் இப்படிச் சொல்கிறோம்... ஆனால் அடுத்தவர்கள் சொல்லவில்லையே...! என்று நீங்கள் எண்ணவே வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து தெரு நன்றாக இருக்க வேண்டும்... விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.

இப்படி நீங்கள் ஒவ்வொருவரும் சொல்லச் சொல்ல இந்த மூச்சலைகள்... அலைகளாகப் பரவும். பத்திரிக்கை வாயிலாகவோ மற்ற டி.வி. வாயிலாகவோ அரசியல் பேதமோ மத பேதமோ இன பேதமோ நாம் படித்து அல்லது பார்த்துத் தெரிந்து கொண்டால் கூட... அந்தப் பேத உணர்வுகள் நமக்குள் விளைந்திடாது தடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை பார்த்தாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா... என்று உங்கள் உயிரை வேண்டுங்கள். அந்தத் துருவ நட்சத்த்திரத்தின் பேரருள் பேரொளி “என் உயிராத்மா பெற வேண்டும்...” என்று பல முறை சொல்லுங்கள்.

துருவ நட்சத்த்திரத்தின் பேரருள் பேரொளி இந்த ஊர் முழுவதும் படர வேண்டும். நம் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். நம் இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

இதனால் மொழி பேதங்கள் எல்லாம் மறையும்.

ஆகவே இதைப்போல நாம் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலையில்
1.நமது தமிழ்நாடு அமைதி பெற வேண்டும்
2.இந்தியா முழுவதும் அமைதி பெற வேண்டும்
3.இந்தியாவினால் உலகம் முழுவதும் அமைதி பெற வேண்டும் என்று
4.இவ்வாறு வரிசைப்படுத்திக் கொண்டு போக வேண்டும்.

இதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...! சொல்வது.

குறைகளைக் கூறினால் குறைகள் கூடிக் கொண்டே தான் இருக்கும். அதை நிவர்த்தி செய்ய அப்பொழுது...
1.இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டால்
2.எல்லாமே நல்லதாக நடக்கும்.

எத்தகைய விஷத் தன்மைகளும் நாம் வாழும் பகுதிக்குள் வந்துவிடக் கூடாது. மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இங்கிருந்து எல்லாருக்கும் பரப்பச் செய்து உலகை நலம் பெறச் செய்யும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும்.

இந்த அடிப்படையில் செயல்படுத்தினால்தான் நாம் எல்லோரும் நன்றாக இருக்க முடியும்.