ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 11, 2020

விநாயகர் தத்துவம் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுக்கும் தீமையை நீக்கும் வலிமைமிக்க சக்தி


உதாரணமாக நம் நண்பரின் கஷ்டத்தை நாம் கேட்டு அறிகின்றோம். அவர் பட்ட கஷ்ட உணர்வு நம் உயிரிலே பட்டவுடனே நாமும் சோர்வடைகின்றோம்.

ஐயோ.. பாவம்...! நல்ல மனிதன்... உனக்கும் இப்படிக் கஷ்டம் வந்துவிட்டதா...? என்று கேட்டு அவருக்கு உதவியும் செய்கின்றோம். அப்போது உதவி செய்யும் போது நம் நல்ல மனதில் அவருடைய கஷ்டமான உணர்வுகள் கலந்து விடுகின்றது.

தங்கத்தை நகையாகச் செய்ய வேண்டும் என்றால் செம்பையும் வெள்ளியையும் கலப்பார்கள். அதைப் போன்று அவருடைய கஷ்டம் கலந்தாலும் வாழ்க்கையில் உதவி செய்து விட்டோம்.

வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு உதவி செய்தால் தான் நாளைக்கு அவரும் உதவி செய்வார். அப்பொழுது
1.இந்த வாழ்க்கை என்ற செயினிற்கு (தொடருக்கு)
2.அவரோடு தொடர்பு கொண்டு அந்த அன்பை நீங்கள் வளர்க்கின்றீர்கள்.
கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்து வீட்டிற்குள் வருகின்றீர்கள். பேரப் பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சியதும் அந்தக் குழந்தை வீர்... வீர்... என்று கத்துகின்றது.

குழந்தை கத்தியவுடன் மருமகளைக் கூப்பிட்டு...  நீ பிள்ளையைக் கவனிக்கும் முறை இது தானா...? ஏன் உன் பிள்ளையை இப்படி அழுகச் செய்கிறாய்...? என்று கேட்போம்.

இல்லையே...! இது வரை குழந்தை நன்றாகத் தான் இருந்தது. இப்பொழுது நீங்கள் வந்தவுடன் தான் அழுகின்றது...! என்று மருமகள் சொல்கிறது.

அதற்கு நாம் என்ன சொல்வோம்..? அப்படியானால் நான் தான் தப்பு செய்தேனா...? என்று அங்கே சண்டை வருகிறது.

ஏனென்றால்...
1.அங்கே நம் நண்பருடைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்டோம்
2.அதை நாம் சுத்தப்படுத்தவில்லை
3.அது இங்கேயும் வந்து வரிசையில் அடிக்கின்றது.

கேட்டறிந்த கஷ்டத்தையும் வெறுப்பையும் வேதனையையும் துடைக்க வேண்டுமல்லவா...?

அதற்காகத்தான் விநாயகரை (தெருவுக்குத் தெரு) வைத்துக் காட்டினார்கள் நம் ஞானிகள். நண்பருடைய இன்னல்களைக் கேட்டறிந்தோம்... உதவியும் செய்துவிட்டோம்... ஆனால் அந்த இன்னலான உணர்வு நம் உடலில் அது சேரக் கூடாது.

நம் உடலில் சேரக் கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்...?

ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும். நாம் எண்ணுவதை எல்லாம் அவன் தான் நமக்ககுள் உற்பத்தி (உடலாக) செய்கின்றான்.

ஆகவே அவனைத் தான் அந்த நேரத்தில் எண்ண வேண்டும். ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.விநாயகரைப் பார்த்து இந்த முறையில் கும்பிட்டுப் பழகினால் தான்
2.நாம் எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்
3.நம்மை அறியாது உட்புகந்த கஷ்டங்களையும் இன்னல்களையும் அடக்கும்...
4.நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் சக்தியாக வளரும்.

ஆனால்... இரண்டு தோப்புக்கரணம் போடுகிறேன்... உனக்கு இரண்டு அருகம்புல்லை வைக்கின்றேன்...! எனக்கு நல்லது செய்...! என்று விநாயகரிடம் கேட்டால் இந்த எண்ணம் தான் வரும்.

ஆகையினால் ஈஸ்வரா.. என்று நம் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து நினைவை வானை நோக்கிச் செலுத்தி மீண்டும் கண்ணின் நினைவை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்.

இதைத்தான் கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது...!

கண்ணில் பார்த்தவுடன்...
1.ஒருவன் தப்பு செய்கின்றான் என்று நம் கண் காட்டுகிறது.
2.அது மட்டுமல்ல... தவறு செய்த உணர்வை நம் கண் இழுத்து
3.அவன் தப்பு செய்கின்றான் என்று கண் தான் நமக்குள் தெரிய வைக்கின்றது... இல்லையா...?

அப்பொழுது நாம் நண்பரின் கஷ்டத்தைத் தெரிந்து கொண்டோம்  என்று கண் உணர்த்திய பின் உடனே என்ன செய்ய வேண்டும்...?

அதே கண்ணின் நினைவை கொண்டு... உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி... அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி அந்தச் சக்தியைச் சுவாசித்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலிமையான மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கப் பழகுவதற்குத்தான் விநாயகரை வைத்தனர். ஒவ்வொரு நாளும் காலையில் அங்கே நம் மூதாதையர்களின் உயிரான்மாக்களை பிறவா நிலை பெறச் செய்ய வேண்டும் என்று உந்தித் தள்ளும்படி செய்தார்கள் ஞானிகள்.
1.முன்னோர்க்ளை முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்யும்  நல் வினையை உன் உடலில் சேர்க்க வேண்டும்
2.அப்பொழுதுதான் நீ விண்ணிற்குச் செல்வாய்... மனிதன் என்ற நிலையில் நீ முழுமை பெறுவாய்...! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் நம் உயிரை வேண்டி கஷ்டப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.தங்கத்தில் திரவத்தை ஊற்றி அதில் கலந்துள்ள செம்பும் வெள்ளியையும் ஆவியாக மாற்றுவது போல்
2.அந்த ஞானியர்கள் உணர்வைச் செலுத்தி நாம் சுத்தப்படுத்த வேண்டும்.

அதன் பின் நண்பரைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய். உன் சிரமம் எல்லாம் நீங்கிப் போகும். நீ நன்றாக இருப்பாய்...! என்று
1.நம்மை முதலில் தூய்மைப்படுத்திவிட்டு அந்த வலு கொண்டு
2.நீ நன்றாக இருப்பாய்...! என்று நண்பரிடம் வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.