ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2020

உபதேசத்தின் வாயிலாக யாம் கொடுக்கும் அமுத சுரபிகள்


மனிதன் நாம் நல்லதைச் செய்யும்போது நல்லதைக் காக்கும் திறன் வேண்டும்.
1.அந்தத் திறனை இழந்து விட்டால்
2.நல்லதைத் தீயது மறைத்து விடுகின்றது.

இன்று ஒரு மரம் வளர்வதற்கு எத்தனையோ வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்த மரத்தை ஒரு நொடியில் வீழ்த்தி விடலாம்.

பல வருட காலம் நாம் இந்த உடலை வளர்த்திருந்தாலும் இது என்ன வாழ்க்கை...? என்று வெறுக்கும் போது சிலர் தற்கொலை செய்து உடலை அழித்து கொள்கின்றனர்... ஒரு நொடியில்...!

ஆனால் எண்ணிய உணர்வின் தன்மை தன் உணர்ச்சிகள் வளர்க்கப்படுவதற்கு எத்தனையோ ஆசாபாசங்களை வைத்து இவ்வளவு காலம் வாழ்ந்து வந்துள்ளோம். இதைப் போல் விஷத்தின் துடிப்பு ஒரு நொடியில் இயக்கி விடுகின்றது.

அத்தகைய விஷத்தின் தன்மைகளை எல்லாம் வென்றவர்கள் தான் மெய் ஞானிகள். அத்தகைய நிலைகள் அனைத்தும் வென்று இந்த விஷத்தின் தன்மையின் ஆற்றலைத் தனக்குள் அடிமைப்படுத்தி... அந்த ஆற்றல்மிக்க சக்தியை தனக்குள் ஒளியாக மாற்றினார்கள்.

இன்று வைரம் தன்னிச்சையாக ஒளி கொடுக்கிறதென்றால்
1.விஷத்தைத் தன் உள்ளடக்கி…
2.விஷத்தின் ஆற்றல்மிக்க நிலையை ஒளிச் சுடராக…
3.தன்னிச்சையாக அது ஒளியாக இனிமையாக நம் கண்ணிலே பார்க்க முடிகின்றது குளிர்ச்சியாக.

இந்த விஷங்கள் அனைத்தும் ஒடுங்கி அந்த இயக்கச் சக்தி ஒளியாக மாறுகின்றது. ஆனால் அதைத் தட்டி விழுங்கினாலோ… “நம்மை மாய்த்துவிடும் வைரம்….”

இதைப் போன்று
1.விஷத்தின் தன்மை தனக்குள் எடுத்து…
2.இனிமை கலந்த செயலாக இயக்கக்கூடிய… ஆற்றல்மிக்க… வலிமைமிக்க…
3.மகரிஷிகளின் உடலில் விளைவித்த அந்த எண்ண அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.
4.அதைக் கவர்வதற்குத்தான் உங்களுக்குள் இந்தத் தியானப் பயிற்சி.

நாம் குழம்பு வைக்கும்போது காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு அனைத்தும் கலந்து ஒரு சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம் அல்லவா…!

இதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாழ்க்கையிலே நலிந்து நெளிந்து சலித்து வெறுப்பு உவர்ப்பு வேதனை இதைப் போன்று எத்தனையோ எண்ணங்களுடன் நாம் இங்கே வந்து கூடியிருக்கின்றோம்.

ஆனால் அதே சமயம்… நம் குரு காட்டிய வழிப்படி மெய் வழியைக் காண வேண்டும்... அந்தப் பேரருளைப் பெற வேண்டும் என்று ஒரே சீர்படுத்தி... இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து கொண்டுள்ளோம்.

விண்ணை நோக்கி யாம் (ஞானகுரு) ஏகி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் அலைகள் நீங்கள் பெற வேண்டுமென்று சதா தியானமிருக்கின்றோம்… தவமிருக்கின்றோம்.

அதே உணர்வின் ஏக்கத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து... அந்த மகரிஷிகளின் அருள் சக்தி தியானமிருப்போர் அனைவரும் பெற வேண்டும்... என்று ஒருக்கிணைந்த எண்ணத்துடன் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.

இந்த உணர்வுகள் படரப்படும்போது மற்றவர்கள் எந்தெந்தத் துன்பத்தில் இருந்தாலும் நாம் தியானித்த இந்த உணர்வலைகள் ஒன்று சேர்ந்து
1.எந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டுமென்று எண்ணினோமோ
2.இந்த உணர்வின் அலைகள் நம் ஒலி அலைகளுடன் கலந்து
3.இந்த உணர்வின் சுவாசங்கள் உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரந்திருப்பதையும் பார்த்திருக்கலாம்.

மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி அந்த மூச்சலைகளை வெளியிடும்போது உங்களுக்குள் உமிழ் நீராகச் சுரப்பதை இங்கு பார்க்கலாம்.

“இப்பேர்ப்பட்ட அமுத சுரபிகள்” நமக்குள் சேர்ந்து விட்டால்... அந்த ஞானியின் அருள் வித்தை அது வளர்த்து.. நமக்குள் நம்மை அறியாது உள் சென்று வேதனையை உருவாக்கும்... பல நோயினை உருவாக்கும் நம் சொல்லின் இனிமையைக் கெடுத்திடும்... இந்த உணர்வின் தன்மைகளை எல்லாம் அது தணித்து விடும்.

அதாவது வைரக்கல்கள் எப்படி தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றுகின்றதோ அது போன்ற நிலைகளை நாமும் பெற முடியும். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அதைப் பெற முடியும்.

பல பொருள்கள் சேர்த்து அதை ஒரு குழம்பின் சுவையாகச் சுவைத்து சமைக்கும் நிலை போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் அனைவரது உள்ளங்களின் நிலைகளும்
1.ஒருத்தர் கோபமோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ இருந்தாலும்
2.அதைச் சரிசமமாகச் சமைக்கும் நிலைகள் கொண்டு சுவை பெறும் சக்தியாக உருவாக்கவும்
3.ஒளியின் சக்தியாக ஆக்கிடவும் தான் இந்த அருள் வித்துகளை உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.