ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 28, 2020

பௌர்ணமி தியானத்தின் மூலம் அபரிதமான சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்கின்றோம்


இன்று நமது வாழ்க்கையில் ஒரு நிமிடம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றால் சந்தர்ப்பத்தால் அடுத்த கணம் மனம் இருள் சூழ்ந்துவிடுகின்றது.

இதைப் போன்று மாறி மாறி வரும் இந்த நிலைகளில் இருந்து மாறாத நிலைகள் பெற்ற அந்த ஞானிகளின் உணர்வின் அலையைப் பெறச் செய்யக்கூடிய அந்தப் பிரகாசமான நாள் தான் நம் குருநாதர் காட்டிய இந்த பௌர்ணமி நாள்.

 பௌர்ணமி அன்று நாம் எல்லோரும் சேர்த்து நம் மூதாதையருடைய உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்வதற்கே இந்த பௌர்ணமி தியானம்.

அவர்கள் முதலில் விண் சென்றால் அவர்கள் வழியில் நாமும் பின் நாம் செல்ல முடியும். நாம் முன்னாடி அங்கே அந்தப் பாதத்தை... பாதையை வகுத்துக் கொண்டால்தான் அந்த நிலைகள் பெற முடியும்.

ஆகையினாலே ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் இருந்தே அந்த அழியா ஒளிச் சரீரத்தைப் பெற வேண்டுமென்ற எண்ண வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலைவிட்டு நாம் சென்ற பின் அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நம்மை எதிர்கொண்டு துன்ப அலைகள் வீசுவதை அது நம்மை அணுகாது அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைச் சுவாசித்து அதிலிருந்து காத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் விண் செல்வதற்குத்தான் இந்தப் பௌர்ணமி தியானம்.

ஆகையினாலே....
1.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வழியில் செல்ல வேண்டும் என்று
2.நம் மனதில் ஆழமாகப் பதிந்து கொண்டால் தான் அங்கே செல்ல முடியும்.

இல்லை என்றால் ஈஸ்வரா... குருதேவா...! என்று சொன்னேன். என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லை... நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். என் மேல் வலி கால் வலி போகமாட்டேன் என்கின்றது. கொடுத்த கடன் திருப்பி வரமாட்டேன் என்கின்றது என்று இப்படி எல்லாம் ஊடே ஊடே கலந்து கொண்டிருந்தால் எல்லாம் போய்விடும்.

நமக்கு வர வேண்டிய பாக்கி வர வேண்டும். கடன் கொடுத்தோமென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்... எனக்குத் திரும்பக் கொடுக்கும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் நிச்சயம் பணம் வரும்.

இதைப்போன்ற பக்குவ நிலை கொண்டு நாம் எண்ணத்தை வளர்க்கும்போது
1.பிறிதொரு தீமையான உணர்வின் தன்மை வராது தடுத்தால்
2.நமக்குள் அதுவே பெரும் சொத்தாக வந்து சேர்ந்துவிடுகின்றது மெய் ஒளியின் சத்தாக...!

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் இதைச் செய்யலாம்.

இல்லை என்றால் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கிறோம்...?

நம் உடலைவிட்டு ஈசன் சென்று விட்டால் அப்புறம் நீச உடலுக்காக வேண்டித் தான் வெகுநாளாகப் பாடுபட்டிருக்கின்றோம் என்று அர்த்தம். ஏனென்றால் உயிர் போய் விட்டால் அப்புறம் என்ன இருக்கின்றது...?

நாற்றமாக இருக்கின்றது... சீக்கிரம் தூக்கிக் கொண்டு போய் விடுங்கள்... ஐஸ் கட்டி (FREEZER BOX) வைத்துவிடுங்கள்... அதை வையுங்கள் இதை வைத்துவிடுங்கள்...! என்று தானே சொல்கின்றோம்.

எவ்வளவு செல்வமாக அழகாக இந்த உடலை வளர்த்திருந்தாலும் அதிலே ஒரு சிறு அழுக்கு பட்டு விட்டால் என்ன பாடு படுகின்றோம்...!
1.ஆனால் அந்த ஈசன் உயிரை விட்டுப் போன பிற்பாடு என்ன செய்கின்றோம்...?
2.நடப்பதை எல்லாம் நாம் கண்ணிலே பார்க்கத்தான் செய்கின்றோம்
3.ஆனால் இது நமக்கு நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.

ஏனென்றால் நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது செல்வோம்...? என்று யாருக்கும் தெரியாது

ஆகவே இந்த உடலில் உயிர் இருக்கும்போது அந்த மெய் ஞானிகளுடைய அலைகளை ஒளி வட்டமாக நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த நிலைகள் பெற வேண்டுமென்பதற்குத்தான் இந்த தியானத்தை உங்களுக்குள் சொல்லிக் கொடுப்பது. நம் மூதாதையர்கள் இன்னும் நமது பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய ஆத்மாக்கள் இன்னொரு உடலில் புகுந்திருந்தாலும் நாம் அடிக்கடி இது மாதிரி செய்யப்படும்போது அந்த உடலை விட்டு வெளிவரப்போகும்போது அந்த ஆத்மாக்களையும் நாம் விண் செலுத்திவிடலாம்.

ஆகையினாலே நீங்கள் ஒவ்வொருவரும் ஏனோ என்று இல்லாதபடி இந்த தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு நாள் உங்கள் வீட்டில் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும். உங்கள் முதாதையர்களை விண் செலுத்த கூடிய எண்ணங்களைச் செலுத்த வேண்டும்.

அடுத்தாற்படி நாம் செய்ய வேண்டிய முறைகள் என்ன...?

நமக்குள் யாராவது பகைமை வெறுப்பு என்ற நிலைகளில் இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று அதைத் தணிக்க வேண்டும்.

உதாரணமாக நாம் பொண்ணு கொடுத்திருப்போம். மாமியார் வீட்டில் கொஞ்சம் தொல்லை கொடுத்திருப்பார்கள். அடப்பாவிகளா... இப்படி செய்கின்றார்களே...! என்று அவர்கள் மேல் பகைமையை வளர்த்துக் கொண்டே இருப்போம்.

அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்யும்...? நம் உடலில் அந்த உணர்வு விளைந்து கொண்டே இருக்கும். பின் நல்ல உடலை நோயாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
1.நாம் சொல்லக்கூடிய உணர்வுகள் நம் குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் அங்கே சாடும்
2.இப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீளாதபடி
3.அந்த விஷத்தின் தன்மை ஒன்றில் பட்டுவிட்டால் அந்த விஷத்தின் நிலைகளில் நாம் மூழ்கி விடுகின்றோம்.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ள ஒரே வழி இதுதான். நாம் செய்ய வேண்டிய நிலைகள் வாரத்தில் ஒரு நாள் நாம் கூட்டு தியானம் இருக்கப்படும்போது
1.நாம் யார் கூட எல்லாம் வெறுப்பின் தன்மை அடைந்தோமோ
2.குடும்ப சகிதமாக எங்களுடைய பார்வை எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும்.
3.எங்களுடைய பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் நிலைகள் வர வேண்டுமென்று எண்ணுதல் வேண்டும்.

யாராவது நம் மேல் பகைமை கொண்டிருந்தால் என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என் சொல் அவரை இனிமையாக்க வேண்டும். அவர்கள் என்னைப் பார்க்கும்போது நல்ல நிலைகள் அடைய வேண்டும். என் வாடிக்கையாளர் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்பொழுது கடன் கொடுத்து வாங்குகின்றோம் என்றால் அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும். எனக்கு கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் வர வேண்டும் என்று இவ்வாறு எண்ணிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்
1.அங்கே பகைமை தீருகின்றது
2.நமக்குள் மெய் ஒளி வளருகின்றது
3.அந்த மெய்யின் தன்மை நாம் நிச்சயம் அடைய முடியும்.

அந்த நிலை பெறுவதற்குத்தான் வாரத்தில் ஒரு நாள் நீங்கள் கூட்டுத் தியானம் இருங்கள் என்று சொல்வது.