ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2020

மணிக்கணக்கில் அமர்ந்து எடுப்பது தியானமல்ல... வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்


இப்பொழுது நாம் எல்லோரும் ஒரே உணர்வின் தன்மை கொண்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த ஞானிகளின் அருள் சக்தி நமக்குள் ஓங்கி வளர்கின்றது.

அன்று வாழ்ந்த ரிஷிகள் வசிஷ்டரும் அருந்ததியும் எப்படி ஒருமித்த சக்திகளைக் கொண்டு வந்தனரோ... அதைப் போல
1.நாமும் அந்த ஒருமித்த எண்ணத்தைக் கொண்டு
2.மகரிஷிகளின் அருள் சக்தியை தியானத்தின் மூலம்
3.கவர்ந்து கொண்டு வரப்படும்போது ஒத்த நிலைகள் ஏற்படுகின்றது.

இந்த ஒருமித்த உணர்வின் ஆற்றல்மிக்க வலிமை கொண்டு சிறு துளி பெரு வெள்ளம் போல ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நம் மூதாதையருடைய உயிராத்மாக்களை விண் செலுத்துவதே யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறை.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய இந்த அருள் வழிப்படி நாம் கூட்டு தியானங்கள் மூலமாக ஏகோபித்த நிலையில் இந்த மகரிஷிகளின் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து இந்த உணர்வை வலுப்பெறச் செய்கின்றோம்.

அந்த வலுவால் நம்முடைய மூதாதையருடைய உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து அவர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

1.அங்கே அந்த சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுக்குள் சென்று
2.இருள் சூழ்ந்த உடலைப் பெறும் நிலைகள் நீங்கி
3.மெய் ஒளி கண்டு மெய் வழியில் என்றும் நிலையான சரீரம் பெற வேண்டும் என்று எண்ணச் செய்வதற்கே
4. குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி நாளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

இதைத்தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவது. ஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு உண்மைகள் வரும். போன மாதம் பௌர்ணமிக்குச் சொன்னதையும் இந்த மாதம் சொல்லலாம். புதிதாகவும் கருத்துக்கள் வரும்.

ஏனென்றால் இராமயாணக் கதையை எடுத்துக் கொண்டால் ஒன்றே தான் இருக்கும். வேறு எதாவது சொல்வார்களா...? இல்லை.

மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதிலுமே ஒன்றே தான் இருக்கும். கீதையை எடுத்துக் கொண்டால் அங்கே கண்ணன் சொன்ன உணர்வும் ஒன்றே தான்.

நாம் பள்ளியிலே படிக்கின்றோம் என்றால் அதிலே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுப்பார்கள்.  ஐந்தாம் வகுப்பிற்கு மேலே போகும்போது கற்கும் நினைவுகள் சீராக வந்தால் மேல் படிப்புக்கு அடுத்து சீராகப் போக முடியும்.

அதைப் போன்று தான்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மைகள்
2.நமக்குள் வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பொறுத்துத் தான்
3.விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியை நாம் பெறுவது.

பள்ளியிலே பத்தாவது படிப்பு வரை அந்த யுக்திகள் எல்லாம் வாத்தியார் சொல்லி கொடுப்பது நமக்குள் வரும். அந்த யுக்தியின் வலு பெற்ற பின் அடுத்து அந்த சிந்தனையுடன் வெளி வரப்படும்போது அதற்கு அப்புறம் கல்லூரிப் படிப்பு மிகவும் எளிது.

அப்பொழுது நாம் படிக்கும் திறனும் சீராக வருகின்றது. நாம் எதையும் கிரகித்து அது செயல்படும் தன்மை வரப்படும்போது நம்மாலே நம் யுக்தியால் செயல்படும் தன்மை வருகின்றது.

நான்கு வருடத்தில் படிப்பதைக் கூட ஒரு வருடத்திற்குள் படிக்கும் திறன் வருகிறது.
1.பல விதமான பாட நிலைகளைக் கற்றிடும் தன்மையாக
2.தன் உணர்வின் ஞானம் அங்கே வரப்போகும்போது
3.சீக்கிரம் தெளிவாகும் நிலை அங்கே கல்லூரிகளிலே வருகின்றது.

இதைப் போலத்தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் தன்மையை அன்று பக்தி மார்க்கத்தில் காட்டியதை உணர்ந்திருந்தாலும் அந்த உண்மையின் தன்மை உங்களுக்குள் அணு செல்களாகப் பதிவாகியுள்ளது.

அதன் மூலம்... மகா ஞானிகள் காட்டிய... நமது குருநாதர் பெற்ற... மற்ற மகரிஷிகள் பெற்ற அந்த பேரண்டத்தின் பேருண்மையை உங்களுக்குள் மறைந்து இருக்கும் உணர்வின் ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றேன் (ஞானகுரு).

இந்த உணர்வின் சக்தியைக் கூட்டி நீங்கள் அந்த விண்வெளியின் ஆற்றலை எடுக்கப்படும்போது இன்றைய வாழ்க்கையில் உங்களை அறியாது சேரும் துன்ப நிலைகளை மாற்றிட முடியும்.

அதே சமயத்தில் இதற்கு முன்னாடி அறியாத நிலைகள் உடலுக்குள் சென்று தீய வினைகளாக உருவாகி நோய்களாக இருந்தாலும் நாம் எடுக்கும் இந்த தியானத்தின் மூலம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று எண்ணும்போது
2.அழுக்குத் தண்ணீரில் நல் நீரை விடப்படப் போகும்போது அழுக்கு நீர் குறைவது போல
3.சதா ஒவ்வொரு நிமிடமும் ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் பின் தொடரப் போகும்போது
4.அது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் உடலில் வரக்கூடிய துன்பத்தைத் துடைத்திடும் சக்தியாக மலரும்.

ஆனால் வாழ்க்கையுடனே ஒன்றிக் கொண்டு... நான் தியானத்தைச் செய்தேன்... என் கடையில் வியாபாரம் இப்படி குறைந்தது...! நான் அதைச் செய்தேன் இப்படி ஆகிவிட்டது...! என்று மீண்டும் இந்த எண்ணத்தைக் கொண்டு குழப்பினீர்கள் என்றால் மேலே போக முடியாது.

1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.என் பார்வை எல்லாவற்றையும் நலமாக்க வேண்டும்
4.எங்கள் சொல்லினுடைய நிலைகள் அது இனிமை பெற வேண்டும்
5.எங்கள் செயலின் தன்மை அது புனிதம் பெற வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளை எடுத்து நமக்குள் படைக்கப்படும் பொழுது அது முதிர்ந்த நிலைகள் நல்ல பலன் தரும்

உதாரணமாக... ஒரு செடியை விதைத்து விட்டு அது வேர் விட்டிருக்கின்றதா... இல்லையா...? என்று நோண்டிப் பார்த்துக் கொண்டு இருந்தால் ஒவ்வொரு வேராக அறுந்து கொண்டிருக்கும்.

சரி வேர் போடவில்லை...! என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் அதிகமாக உரம் போடலாம் என்று சொல்லி உரம் போட்டால் எந்தப் பலனையும் கொடுக்காதபடி அப்படியே அது கருகிப் போய்விடும்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் மணிக்கணக்கில் உட்கார்ந்து நாம் அதிகமான நிலைகள் தியானத்தை எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்தால் அது ஒன்று வளர்ந்து விடும்.

ஆனால் நமக்குள் நல்ல குணம் சிந்திக்கும் செயலிழிந்து உட்கார்ந்து இருப்போம்.

நம்மைப் பார்ப்பவர்கள் “ஏனப்பா நீ இப்படிச் செய்தாய்...! உன் பிழைப்பு என்னாவது...?” என்று சொன்னால் இதிலே கசப்பு வெறுப்பு எல்லாமே சேர்ந்து கருகிப் போகின்றது. நம் நல்ல குணங்களை எடுக்க முடியாமல் போகின்றது.

இதையெல்லாம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்
1.எப்போது நமக்குள் துன்பம் வருகின்றதோ
2.அப்பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை பெற வேண்டுமென்று எண்ணி
3.உடலுக்குள் ஈர்த்து அந்த உணர்வின் சக்தியைச் செலுத்தி நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகளை அது நீக்கிக் கொண்டே வர வேண்டும்
4.வாழ்க்கையே தியானமாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.