ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2015

தியானத்தில் பெற்ற அனுபவம்

 ஞானகுரு:-
சூரியன் தனக்குள் விளைவித்து வெளிபடுத்தும் அலைகள் இந்தக் காற்றிலே உண்டு. அதை நாம் நுகர்ந்தால் நாம் எண்ணும் எண்ணத்திற்கொப்ப குணங்களின் அடிப்படையில் நமக்குள் வந்து சேர்கிறது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளை நாரதன் என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

சூரியன் அதைக் கவர்ந்தால் அது நாராயணனின் அபிமான புத்திரன் ஆக மாறி நேர் கோட்டில் நம் பூமியின் துருவ பகுதி வழியாக வந்து கொண்டிருக்கிறது என்று சாமிகள் உபதேசம் செய்தார்.

x------------------------------------------------------------------------------------------------------x
அந்த உபதேசத்தின் உணர்வு காதிலே பட்டு, எனக்குள் தூண்டி உயிருக்கு அந்த உணர்ச்சிகள் பட்டவுடன் கண்ணுக்கு ஆணையிட்டு என்னை தியானிக்கும்படி செய்தது.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அந்த ஒளி அலைகளை நேர் கோட்டில் இதை எண்ணியவுடன் என் நினைவுகள் அனைத்தும் வட துருவத்தின் வழியாக விண்ணிலே சென்றது.

விண்ணிலே (துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில்) சாமிகள், மற்றும் மற்ற ஏனைய மகரிஷிகள் உள்ளதாக உணர்வு பூர்வமாக அறிய முடிந்தது.  காட்சியாக அல்ல.

அந்த உணர்வை உணர்ந்து கொண்டுள்ள பொழுதே சுவாசம் தன்னிச்சையாகப் புருவ மத்தி வழி ஈர்க்கத் தொடங்கியது. இன்ன வாசனை என்று சொல்ல முடியாதபடி நறுமணமாக வந்து கொண்டேயிருந்தது.

அதை இழுத்துச் சுவாசிக்கத் தொடங்கியவுடன் அந்த நறுமணங்கள் வாயிலே உமிழ்நீராகச் சுரந்து சுவைமிக்கதாக என் உடலுக்குள் இணைந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது.

பின் மேலிருந்து வந்த ஒரு உணர்வு, புருவ மத்தியில் உள்ள உயிரை எண்ணும்படியும் அவனோடு இணைந்து அவனுக்கு (உயிரான ஈசனுக்கு) இந்த மகிழ்ச்சியான உணர்வைக் கொடுக்கும்படியும் உணர்த்தியது.

அப்பொழுது உயிருடன் ஒன்றிய உணர்வு ஒளியான உணர்வாக பேரானந்த நிலையாக மகிழ்ச்சி ஊட்டும் நிலையாக உயிரின் உணர்ச்சியையும் அறிய முடிந்தது, நண்பனாக, தாயாக, அதற்கும் மேலான உணர்வாக உயிரின் நிலையை அறிய முடிந்தது.

அப்பொழுது தெளிவாக ஒரே நேர்கோட்டில் நானும் (உயிர்) துருவ நட்சத்திரமும் இருப்பதாக உணர முடிந்தது. எல்லா மகரிஷிகளும் ஐக்கியமான உணர்வாக உள்ளதில் நானும் அங்கே அவர்களுக்குள் ஒருவனாக உள்ளதையும் உணர முடிந்தது.

ஒரு பத்து நிமிடம் இந்த மாதிரி உணர்வுகள் இயங்கியபின் எனக்குக் கிடைத்த இந்த உணர்வுகள் எல்லோரும் பெறவேண்டும் என்று தியானிக்கத் தொடங்கினேன்.

அதைத் தொடர்ந்து தாய் தந்தை, என் முன்னோர்கள் மூதாதையர்கள், குலதெய்வங்கள், மனைவி, என் குழந்தை, குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள், தியான வழி அன்பர்கள், இந்தக் காற்று மண்டலத்திலுள்ள உயிராத்மாக்கள், உலக மக்கள் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று தியானித்துக் கொண்டே, வேண்டிக் கொண்டே இருக்கின்றேன்.

ஓம் ஈஸ்வரா குருதேவா. ஓம் ஈஸ்வரா குருதேவா. ஓம் ஈஸ்வரா குருதேவா.