ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 23, 2015

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஓசோன் திரையாக நாம் அமைத்திடல் வேண்டும்.

நாம் பார்க்கும் இந்தச் சூரியனும் மடிந்திடும் சமயம் வரும். ஏனென்றால் எதை ஒளியாகப் பெற்றதோ மீண்டும் அதனின் வயதில் எல்லையடைய்ப்படும் பொழுது மடிந்திடும் நிலையே வருகிறது.

காரணம், இந்தச் சூரியனுக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திரங்கள் தனக்கு என்ற நிலையில் தனது நிலையாக விளையச் செய்யும்போது சூரியனுக்குக் கிடைக்கும் உணர்வின் தன்மைகள் தடைப்படும்போது சூரியன் ஒளி மங்கும், பின் இருள் சூழும்.

இது கரைந்து இதனின் உணர்வுகள் திக்கற்று இதனுடன் விளைந்த கோள்கள் அனைத்தும் திசை மாறிச் சென்றுவிடும்.

இதைப் போல அன்று (1998) வியாழன் கோளில் பிற சூரிய மண்டலத்தில் பிரிந்து வந்த ஒரு கோள் தான் வரும் பாதையில் வியாழன் ஈர்ப்புக்குள் நுழைந்து அதன் சுழற்சி வட்டத்தில் அதைக் கரைத்தது.

ஆனால், இதே போன்று பிற மண்டலத்திலிருந்து பிரிந்து வரும் இத்தகைய கோள்கள் சூரியனின் ஈர்ப்புக்குள் வரும்போது நம் பூமி தடைப்பட்டால் அந்தப் பாறைகள் நம் பூமிக்குள் விழும்.

அவ்வாறு விழுந்தால் நம் பூமியும் சுக்குநூறாகிவிடும். இதைப் போல பிற மண்டங்களினால் ஏற்படும் விபத்துகள் ஏராளம், ஏராளம்.

ஏனென்றால், பேரண்டம் 2000 சூரியக் குடும்பம் என்றால் அதில் வீழ்ச்சி அடையும் சூரியன்கள் பல உண்டு. அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் திசை மாறி மற்ற கோள்கள் அது நகர்ந்து வரப்படும்போது எதனின் பிடிப்பிலும் இல்லாது அதனுடைய வேகத் துடிப்புகள் இருக்கும்.

எதனின் ஈர்ப்புத் துணையுடன் சுழன்று கொண்டிருந்ததோ அதனின் காந்தப் புலனறிவு இல்லையென்றால் அது செயலிழந்துவிடும்.

இதைக் கண்டுணர்ந்து தான் நமது ஞானிகள் ஓசோன் திரை என்ற நிலைகளில் தெளிவாக நமக்குள் பாதுகாப்புக் கவசமாக எந்தத் தீய நிலைகளும் தன்னைத் தாக்கிடாது காத்திடும் நிலையாக அமைத்தார்கள்.

ஏனென்றால், உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகள் விளைந்தவர்கள் தான் மகரிஷிகள். அந்தச் சக்திகளை நாம் பெற முடியும்.

இந்த ஓசோன் திரையை நமக்குள் இருக்கும் இந்தப் பாதுகாப்பு நிலையைப் பிளக்காது இதிலே அந்த மகரிஷியின் உணர்வுடன் பாதுகாக்கும் வலுவான அரணாக நாம் அமைத்திடல் வேண்டும்.

இன்று விஞ்ஞானிகளால் வீசப்பட்ட அணுக்கதிரியக்கங்கள் நம் பூமியில் படர்ந்து மற்ற கோள்களுக்குள்ளும் பரவி இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவி சூரியனுக்குள்ளும் சென்று கரும்புள்ளிகளாக உருவாகி அதுவும் இன்று எரிமலைகளைக் கக்கிக் கொண்டுள்ளது.

விஞ்ஞானத்தால் வரும் இத்தகைய விஷக் கதிரியக்கங்களையும் அடக்கிடும் ஆற்றல்கலையும் நாம் பெற முடியும்.

நம் ஆறாவது அறிவை இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது மற்ற தீமைகள் நமக்குள் புகாது
அருள் மகரிஷிகளின் உணர்வுகளை
நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும். அமைக்க முடியும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலைக் காண அந்த உணர்வைப் பெற அந்த உணர்வின் தன்மைகளை அனைவரும் பெறும் பாக்கியத்தை இன்று நாம் பெற்றுள்ளோம்.

நம் குரு காட்டிய அந்த அருள் வழியில் செல்வோம், அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். அருள் வழி வாழ்வோம், அனவரையும் அந்த ஆற்றலைப் பெற தவமிருப்போம்.

பேரருள் பேரொளி என்ற பெரும் வட்டமாக பாதுகாப்புக் கவசமாக அமைந்து
அந்த அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
என்றென்றும் இணைந்தே வாழ்ந்திடுவோம்.