ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 22, 2015

அகஸ்தியன் கண்ட உயிரின, தாவர இன வளர்ச்சிகளின் பேருண்மை

அகஸ்தியர் உயிரினங்களுடைய பரிணாம வளர்ச்சிகளையும் பேரண்டத்தின் பேரியக்கத்தின் உண்மையின் தன்மைகளையும் இந்த பூமியின் முதன்முதலில் அறிந்துணர்ந்து வெளிப்படுத்தியவர்.

அவர் மனிதராக காட்டுப் பகுதியில் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய பிறப்பு வளர்ச்சி மற்றும் உயிரினங்கள் ஒன்றை மற்றொன்று கொன்று புசிக்கின்றது; தின்று விழுங்கியபின்
அவைகளின் உணர்வின் தன்மைகளின் நிலைகளையும் எண்ணி
ஒவ்வொன்றையும் உற்று நோக்கிச் சிந்தித்தார்.

அதன் தொடர்கொண்டு உணர்வின் மாற்றங்களையும் அறிந்துணர்ந்தார். ஆகையால்தான் அவருக்கு அகஸ்தியர் என்று காரணப் பெயர் ஏற்பட்டது.

காடுகளில் பல உயிரினங்களைக் கொன்று தின்ற மிருகத்தின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தபின் இறந்த மிருகத்தின் உடல் அழுகி உடலை உருவாக்கிய அணுக்களே அதனின் சதைகளை உணவாக உட்கொள்கின்றன.

பின், எலும்புக்கூடுகள் மட்டுமே மிச்சமாகின்றன. எலும்புக்கூட்டிற்குள் உறைந்த உணர்வின் நிலையும் மண்ணுடன் மிச்சமாகின்றது.

ஆனால், சதைகளை விழுங்கிய அணுக்கள் புழுக்களாக மாறுகின்றன.

உதாரணமாக, ஒரு உயிரணு புலியாக சரீரம் பெற்று பல கோடி அணுக்களைத் தன்னுள் உருவாக்கி மடிந்த பின், மடிந்த புலியினுடைய சரீரத்திலிருந்து பல கோடி உயிரணுக்கள் வெளிப்படுகின்றன.

இதை எளிய மக்களுக்கு உணர்த்துவதற்காக இராமாயணக் காவியத்தில் ஒரு அரக்கன் இறந்தால் அவனுடைய உடலிலிருந்து பல அரக்கர்கள் எழுந்து வருகிறார்கள் என்று கூறி உண்மையினைத் திசை மாற்றிவிட்டார்கள்.

ஒரு அரக்கன் இறக்கிறான். ஆனால், மீண்டும் மீண்டும் எழுந்து வருகிறான் என்றும், உணர்வின் இயக்கங்களை நாம் அறியாவண்ணம் அசுரர் என்றும் அரக்கர் என்றும் ஆற்றல் பெற்றவர்கள் என்றும்
இவர்களைக் கொன்றால்
இவர்களுடைய உடலிலிருந்து மீண்டும் மீண்டும்
பல்லாயிரக்கணக்கான அசுரர்கள் எழுந்து வருகிறார்கள்
என்று இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் காண்பித்தார்கள்.

ஆனால், திசையை மாற்றி அரக்கர்களுடைய செயலாக்கங்களைக் காட்டுகிறார்களே தவிர அகஸ்தியர் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு செய்துவிட்டனர்.

அணுக்கள் உயிரால் நுகரப்பட்டு அணு மலமாகி உடலான பின் உடலில் உயிரின் துணை கொண்டு அணுக்கள் தன் உணவுக்காக தானே நுகர்ந்து தன் இனத்தைப் பெருக்கி உடலை உருவாக்குகின்றது.

ஆனாலும், உடலை உருவாக்கிய உயிரானது உருவாக்கிய உடலை விட்டு வெளியே சென்றபின் உடலில் உருவான அணுக்கள் அவ்வுடலையே உணவாக உட்கொள்கின்றன.

புலியின் உயிரான்மா புலியின் உடலை விட்டுச் சென்றபின் என்ன ஆகும்? அசுர உணர்வு கொண்ட அணுக்கள்தான் புலியின் உடலை உருவாக்கின. புலியின் உடலை உருவாக்கிய அணுக்கள்
புலியின் உயிரான்மா புலியின் உடலை விட்டு வெளியேறியபின்
புலியின் உடலிலுள்ள சத்தினை உணவாக எடுத்து
புழுவாக மாறுகின்றன.

புழுவாக மாறி புலியின் உடலைத் தின்று தீர்த்த பின் இனி உணவு இல்லையென்ற நிலையில் புழுக்களும் இறக்கின்றன.

இதன் தொடர் கொண்டு புலி எதை எதைக் கொன்று தின்றதோ அதற்கொப்ப இப்புழுவின் உயிரணுக்கள் காற்றில் பரவி மாடுகளில் நாய்களில் அமர்ந்து உண்ணியாக ஈயாக உருவெடுக்கின்றன.

அப்படி உருவான உண்ணிகள் மாடுகளில் நாய்களில் அமர்ந்து அவைகளின் இரத்தத்தை உறிஞ்சும். இதுபோன்றே, மனிதர்களிடத்தில் பேன்கள் வரும். கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளாகவும் அமர்ந்து உடலில் அரிப்பை ஏற்படுத்தும்.

அதே சமயத்தில் புலியின் உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது. இதனுடன் மற்ற தாவர இனங்களிலிருந்து வரக்கூடிய சத்தானது கலந்து கொண்டபின் மற்றொரு விஷச் செடியின் சத்தைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.

உதாரணமாக, ஒரு கசப்பின் தன்மை கொண்ட மணம் அதிகரித்தால்
அந்த உணர்ச்சியின் தன்மையைத் தாங்காது
துவர்ப்பின் தன்மையைக் கொண்ட அணுக்கள் நகர்ந்து ஓடுகின்றன.

இதனின் ஓடு பாதையில் புலியாகப் பிறந்து இதனுடைய உணர்வுகள் வெளிவந்தபின் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்ட நிலையில்
துரத்தி வந்த (கசப்பும், துவர்ப்பும்) நிலைகள்
புலியின் உணர்வைக் கவர்ந்த காந்தப்புலனறிவிற்குள் தாக்கியபின்
“கிறு கிறு” என்று சுழல்கிறது.

இதை குருநாதர் காட்சியாகக் காண்பித்தார். இது அகஸ்தியர் கண்ட பேருண்மை, “அதனை நீ இப்பொழுது பார்” என்று கூறி இதனின் உண்மைகளை உணர்த்தினார்.

இப்படி மோதலில் சுழன்றபின் இவைகள் மூன்றும் ஒன்றாகக் கலந்து தாவர இனச்சத்துகளும் மற்ற விலங்குகளைக் கொன்று புசித்த புலியின் உணர்வுகளும் ஒன்றாகக் கலந்தபின் ஒரு வித்தாக மாறுகின்றது.

இப்படி வித்தான பின் பூமியில் விழுந்து செடியாக வளர்ந்தபின் அதன் அருகில் இரத்தம் கொண்ட எந்த உயிரினம் வந்தாலும் அந்த உயிரினத்தின் இரத்தத்தை உறிஞ்சி மடியச் செய்துவிடும்.

காட்டுப்பகுதியில் குருநாதர் அழைத்துச் சென்று இத்தகையை தாவர இனங்களைக் காட்டுகிறார்.

உயிரினங்களில் யானையானாலும், மனிதரானாலும் இந்தத் தாவர இனத்தைத் தொட்டால் எலக்ட்ரிக் ஷாக் மாதிரி தாக்கப்பட்டு நினைவை இழக்கச் செய்துவிடும்.
இரத்தத்தை முழுவதும் உறிஞ்சியபின்
“சொத்” என்று செத்துவிழ வேண்டியதுதான்.

மின்சாரத்தைத் தொட்டால் எப்படி இரத்தத்தை அது உறிஞ்சிவிடுகிறதோ அது போன்று இந்தத் தாவரமும் தன்னருகே வரும் உயிரினத்தின் இரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இந்தத் தாவர இனத்துடன் மற்ற உணர்வுகளைச் சிறுகச் சிறுகச் சேர்த்தபின் கேன்சர் போன்ற விஷத்தின் தன்மையை நீக்குவதற்கு மருந்தாக உதவுகிறது.


மற்றும் சில தாவர இனங்களுடன் கலந்து T.B. போன்ற நோய்களை உருவாக்கும் விஷ அணுக்களைக் கொல்லவும் இது பயன்படுகிறது.